Wednesday, January 26, 2011

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!












அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு,

வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!



இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!

என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்

தாமரை

20.01.2011

சென்னை 24
 
(நன்றி- கீற்று )
 
இனி நான்..


தாமரையின் வரிகள் ஒவ்வொன்றையும் வழிமொழிகிறேன்..

விஜய்காந்துடன் அ.தி.மு.க., கூட்டணி அமையுமேயானால்..வை.கோ., விற்கு தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்னைகள் வரக்கூடும்..வை.கோ., என்னும் நல்ல மனிதர், இதையும் நினைத்துப் பார்க்கட்டும்.

இந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை..தமிழர்கள் அனைவருக்குமான ஒரே எதிரி காங்கிரஸ்..அந்தக் கட்சி நிற்கும் இடமெல்லாம்..தோற்கடிக்கப் பட வேண்டும்..இதையே சீமானும்,நெடுமாறனும், வை.கோ., வும் முதல் வேலையாக நினைக்க வேண்டும்..

மற்றவை நாமே கெடுக்காமல் கெடும் காலமும் வரும்.



28 comments:

சக்தி கல்வி மையம் said...

தங்களின் தளத்திற்கு முதன்முதலில் வருகிறேன்..
எது எப்படியோ...நம் இரத்த சொந்தங்களை அழித்தவர்களை ஒழித்தால் சந்தோஷப்படும் பலகோடி இதயங்களில் நானும் ஒருவன்.

பதிர்வுக்கு நன்றி...

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sakthistudycentre-கருன்

ராம்ஜி_யாஹூ said...

தாமரை அப்படியே இன்னுமொரு கடிதத்தை அம்மாவின் அன்பு சகோதரர் வைகோ விற்கும் எழுதுவார் என நம்புகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராம்ஜி_யாஹூ

Gokul said...

//இந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை..தமிழர்கள் அனைவருக்குமான ஒரே எதிரி காங்கிரஸ்..அந்தக் கட்சி நிற்கும் இடமெல்லாம்..தோற்கடிக்கப் பட வேண்டும்//

இதை விட பச்சையான சந்தர்பவாதம் / அயோக்கியத்தனம் வேறேதும் இல்லை. இது ஏறக்குறைய எல்லா தமிழின ஆதரவாளர்களும் கூறுவது .. அதாவது இப்படி உரக்க சொல்வதன் மூலம் தி.மு.கா வின் துரோகத்தை மறைக்க பார்ப்பது.

Gokul said...

-

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி கோகுல்

Unknown said...

//அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்//
இங்கே மாற்று என்பது எது? நமக்கு இன்றைய தேவை உண்மையான மக்கள் தொண்டர்கள். சீமானின் பின்னால் நிற்கும் அனைவரும் அப்படிப்பட்டவர்களா? சீமானே அப்படிபட்டவரா என்பது தெரியாத பொழுது நாம் மீண்டும் ஒரு பாதாளத்தில் விழமுடியாது.
இங்கே தான் சீமானும் அவருடைய தோழர்களும் ஒரு தியாகத்தை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் (அல்லது தொகுதியுலும்) உள்ள நல்ல மனிதர்களை இனம் கண்டு அவர்களை நாம் தமிழர் இயக்கத்தில் இணைத்து அவர்களின் பின்னால் செயல்பட வேண்டும். அவர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். நாம் தமிழர் இயக்கத்தில் உள்ளவர்கள் நல்ல அரசியல்வாதியின் பின்னால் இருந்து மக்களுக்கு சேவை செய்து விட்டு தேர்தல் நிற்கவேண்டும்.

Unknown said...

//நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!//

நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் போட்டியிட கூடாது. இல்லை போட்டி இடுவது என்று முடிவெடுத்தால், அனைத்து தரப்பு மக்களாலும் என்று கொள்ள பட கூடிய நல்ல மனிதர்களை அவர்களுக்கு எதிராக நிற்க வைத்து அவர்களின் வெற்றிக்காக பாடுபடுதல். அவர்கள் நாம் தமிழர் இயக்கத்திலேயே இருக்கலாம் அல்லது காங்கிரஸ் மற்றும் தி.மு.க அல்லாத எந்த ஒரு கட்சியுளும் இருக்கலாம்.

இங்கு நமது ஒரே குறிக்கோள் காங்கிரஸ் அடியோடு தமிழகத்தில் இருந்து அகற்ற பட வேண்டும். நாம் தமிழர் இயக்கத்தின் தோழர்கள் இங்கு இந்த தியாகத்தை செய்யவேண்டும் இல்லையெனில் அவர்களும் திமுக மற்றும் அதிமுக வில் உள்ள மனிதர்களை போல் அரசியலில் ஆதாயம் தேட முயல்கிறார்கள் என்று பொருள். அப்படி பட்ட தோழர்களை கொண்டு நாம் எந்த விதமான அரசியல் மாற்றத்தை தரமுடியாது மேலும் ஈழத்தை உருவாக்க முடியுமா என்பதும் சந்தேகமே!.

Unknown said...

என்னுடைய விருப்பம் எல்லாம் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று சீமானுக்கும், வைகோ விற்கும், ராமதாசுக்கும், திருமாவளவனுக்கும், விஜயகாந்துக்கும் அறிவுரை தருகின்ற நாம் ஏன், சில நல்ல மனிதர்களை தேர்தலில் நிற்க வைத்து உண்மையான மாற்றத்திற்கு தொடக்கமாக இருக்ககூடாது என்பதுதான். அதற்கு இந்த மனிதர்கள் துணை இருக்கவில்லை என்றால்

இதைத்தான் எனது இணையத்தில் நான் வலியுறுத்தி வருகின்றேன்.

ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி…

இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..
வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?

Unknown said...

அதற்கு இந்த மனிதர்கள் துணை இருக்கவில்லை என்றால் இவர்களையும் காங்கிரஸ், திமுக, அதிமுக என்கின்ற அழிக்கபட வேண்டிய கட்சிகளின் வரிசையில் வைப்போம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஒரு இடுகைக்கான விஷயங்களை அருமையாக பின்னூட்டத்தில் தெரிவித்தமைக்கு நன்றி Shanthamoorthi ..
தனி நல்ல மனிதர்கள் போட்டியிட்டால் அவர்களால் வெல்ல முடிவதில்லை.
இதற்கு உதயமூர்த்தி, ஜெயகாந்தன் ஆகியோர்களே உதாரணம்.
தி.மு.க.,விலும்., அ.தி.மு.க., விலும் அமைச்சராயிருந்து..தி.மு.க., ஆரம்பகால தலைவர் நெடுஞ்செழியனே .அந்தக் கட்சிகளின் தயவின்றி தேர்தலில் நின்ற போது நான்கு இலக்க வாக்குகள் பெற இயலவில்லை..
நம் மக்கள், நம் ஜனநாயகம் அப்படி ஆகிவிட்டது.
இதை ஒரே இரவில் மாற்றுவது கடினம்..
பதவி ஆசையின்றி வருவோருக்கும் அந்தப் பசி ஏற்பட்டுவிடுகிறதே

bandhu said...

அதாவது காங்கிரஸ் தான் கெட்டவர்கள் தி மு க நல்லவர்கள் என்கிறீர்கள்! சூப்பர்!

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bandhu

ராஜ நடராஜன் said...

நானும் இதைத்தானே சொன்னேன்!

http://parvaiyil.blogspot.com/2011/01/vs-vs.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
நானும் இதைத்தானே சொன்னேன்!

http://parvaiyil.blogspot.com/2011/01/vs-vs.html//

நானும் இதைத்தானே சொன்னேன்!
:)))

உமர் | Umar said...

//நானும் இதைத்தானே சொன்னேன்!
:)))//

நாங்களும் இதைத்தானே சொல்லியுள்ளோம்.

:-)

.

கோவி.கண்ணன் said...

பாராளுமன்ற தேர்தலில் ஜெ வேட்பாளர்களின் வெற்றியைத் தடுக்க, காங்கிரசு தரப்பில் இருந்து தனித்து நின்று வாக்குகளைப் பிரிக்க வி.காந்துக்கு 60 கோடி வரைக் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது ராசதந்திரம் என்றால் சீமான் செய்வது ஒன்றும் தவறான செயலாகத் தெரியவில்லை

ரிஷி said...

///பாராளுமன்ற தேர்தலில் ஜெ வேட்பாளர்களின் வெற்றியைத் தடுக்க, காங்கிரசு தரப்பில் இருந்து தனித்து நின்று வாக்குகளைப் பிரிக்க வி.காந்துக்கு 60 கோடி வரைக் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது ராசதந்திரம் என்றால் சீமான் செய்வது ஒன்றும் தவறான செயலாகத் தெரியவில்லை///
அப்படியா கோவி? தாமரையின் சூடான கேள்விகளை நீங்கள் நன்றாகப் படிக்கவில்லையா..? ஒரு பேச்சுக்கே வைத்துக் கொள்வோம். கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஜெயலலிதாவின் தோளில் ஏறிக் கொண்டால் அப்போது சீமானின் நிலைப்பாடு மற்றும் கதி என்ன?? மூப்பனாரே 2001ல் ஜெயலலிதாவிடம் கடைசிநேரத்தில் தொற்றிக் கொண்டாரே!! அதுபோல இப்போது நிகழ வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. காங்கிரஸின் தயவைப் பெறுவதற்காகத்தான் ஈழ விவகாரத்தை அவ்வளவாக சட்டை செய்வதில்லை ஜெயலலிதா. இதுதான் நடப்பதைப் பார்க்கும்போது தெரிகிறது.


கொள்ளைக் கூட்டத் தலைவவர் கருணாநிதியை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் சீமானின் பிரச்சாரம் ஜெயலலிதாவுவுக்கு சாதகமாக உதவலாம். ஆனால் தமிழீழம் சாத்தியமில்லை!

ரிஷி said...

எனக்கு மற்றுமொரு சந்தேகம் உண்டு! உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் தமிழரிடையே அந்த இன, மொழியுணர்வு இருக்கிறதா? இன உணர்வாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே திடல்களிலும், இணைய வலைப்பூக்களிலும் மட்டுமே பிரம்மாண்டமாக கட்டமைக்கப்படுவதுபோல தெரிகிறதேயன்றி அது தமிழ்நாட்டின் ஆறுகோடி பேருக்கும் அந்த உணர்வு இருக்கிறதா?? என்பது மதிப்பு வாய்ந்த கேள்வியாக எனக்குப் படுகிறது!

வருண் said...

***கோவி.கண்ணன் said...

பாராளுமன்ற தேர்தலில் ஜெ வேட்பாளர்களின் வெற்றியைத் தடுக்க, காங்கிரசு தரப்பில் இருந்து தனித்து நின்று வாக்குகளைப் பிரிக்க வி.காந்துக்கு 60 கோடி வரைக் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ***

கோவியா இது!!!!

ஏன் 60 கோடியோட நிறுத்தீட்டீங்க? நீங்க 500 கோடினுகூட சொல்லலாம்!

இது மாதிரி "உண்மை பிரச்சாரத்தில்" காங்கிரஸ் மட்டுமல்ல விஜய் காந்தும் பொணம்நக்கினு அழகா சொல்லீட்டீங்க! அம்மையாரை உத்தமியாவுக்ம் ஆக்கிப்புட்டாச்சு! பெரிய சாதனைதான் போங்க!!

ஜெயோட கூட்டுச்சேரந்தால், ஜெ ஊத்திக்கொடுக்க விஜய் காந்து தண்ணியடிக்கிறார்னு சொன்னால் மக்கள் நம்பிவிடுவாங்களே! அந்த பயத்தில்கூட ஒதுங்கி இருந்து இருக்கலாம்!

***இது ராசதந்திரம் என்றால் சீமான் செய்வது ஒன்றும் தவறான செயலாகத் தெரியவில்லை
January 26, 2011 9:31:00 PM PST ***

நீங்க இங்கே செய்வது என்ன கோவி? அதாவது இதுபோல் விஜய்காந்து காசு வாங்கினார்னு "சொன்னார்கள்"னு சொல்றது?

Unknown said...

அட்டகாசமான பதிவுதான். ஆனால் அய்யகோ இன்னமும் கருணா நிதி, எம் ஜி யார் ஜெயலலிதா, விஜயகாந்த், சீமான் என் நம்மை உய்விக்க புறப்பட்டவர்கள் எல்லாரும் அரிதாரம் பூசியவர்கள்தான் எனும் போது நெஞ்சு பொறுக்குதில்லயே இந்த நெறி கெட்ட தமிழனை நினைத்திடும் போது, அப்புறம் எங்கே தமிழினமும் தமிழீழமும் தமிழன் மானமும் இறையாண்மையும்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கும்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரிஷி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கிணற்றுத் தவளை