Thursday, August 2, 2018

நாடகப்பணியில் நான் - 19

தமிழ்த் திரையுலகில் "பா" வரிசையில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பல வெற்றி, வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ பீம்சிங்.

அதில் படல படங்களுக்கு வசனம் எழுதியவர் எம்.எஸ் சோலைமலை என்பவர்.குறிப்பாக சொல்லவேண்டுமெனில் மாபெரும் வெற்றி காவியமான "பாவமன்னிப்பு" படத்தின் ,  கதை-வசனகர்த்தா எம் எஸ் சோலைமலை.

தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி, ஏ பீம்சிங் , எம் எஸ் விஸ்வநாதன், சோலைமலை இணைந்து ஆரம்பித்ததே புத்தா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்.

சோலைமலை தயாரிப்பில் நகைச்சுவை சிகரம் ஆச்சி மனோரமா நாடகங்களில் நடித்து வந்தார்.

அவர் நடித்து, சோலைமலை கதை, வசனம்.,இயக்கத்தில் மேடையேறிய "கோல்டன் சிடி" நாடகத்தை அம்பத்தூரில் நடத்த அணுகியபோது, உடனடியாக ஒப்புக்கொண்ட சோலைமலை..சென்னையில் வழங்கும் சன்மானமே போதும் என வாங்கிக் கொண்டார்.தொழில்முறை கலைஞர்கள் அவர்கள்.ஆனாலும் பணம் பெரிதல்ல என்ற மனப்பன்மையைக் கொண்டிருந்தனர்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால்..பணத்தைவிட கலையை அதிகம் விரும்பியவர்கள் . அதனால்தான் இவர்களை இவர்கள் போற்றிய கலை கடைசிவரை கைவிடவில்லை.

கோல்டன் சிடி க்கு அடுத்து மனோரமா நடிக்க இவர் தயாரித்த நாடகம் "கமர்கெட் காத்தாயி". இந்நாடகமும் மாபெரும் வெற்றி நாடகம்.

சோலைமலையின் மகன் ராஜேந்திரன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.சோலைமலையின் மறைவிற்குப் பின் இவரும் மனோரமா நடிக்க பல நாடகங்களை நடத்தினார்.  

No comments: