Wednesday, June 24, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 4 -கோபுலு






1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம்நாள் தஞ்சாவூரில் பிறந்தவர் கோபாலன்.இளம் வயதில் ஓவியத்தின் மீதான ஆர்வத்தால் குடந்தை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தி அவற்றில் கார்ட்டூன் வரைந்தார்.மாலியின் ஓவியங்களால் லவரப்பட்டு அவரை குருவாக ஏற்றுக்கொண்டார்.1941ஆம் ஆண்டு மாலியை சந்தித்து அவரது ஆதரவில் ஓவியர் ஆனார்.திருவையாறு தியாகராயரின் வீட்டில் அவர் பூஜை செய்த இராமர் பட்டாபிஷேகப் படத்தை அங்கிருந்தே நேரடியாக வரையச் சொன்னார் மாலி.1942ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இந்த ஓவியம் இடம் பெற்றது.கோபாலனை கோபுலுவாக்கினார் மாலி.

1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேரப்பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் அங்கு பணி புரிந்தார்.இவரின், ஆனந்தவிகடன் அட்டைப்பட ஜோக்குகள் பிரபலமானவை.நாடு சுதந்திரம் அடைந்த போது, அதைக் கொண்டாடும்விதமாக ஆனந்த விகடன் அட்டைப்படத்தை வரைந்தார்.

தேவனின் துப்பறியும் சாம்பு சித்திரக் கதைகளுக்கும் அவரது ஏனைய புதினங்களுக்கும் ஓவியங்கள் வரைந்தார்.கொத்தமங்கலம் சுப்புவின்,ராவ் பகதூர் சிங்காரம், தில்லானா மோகனாம்பாள் புதினத்துக்கு ஓவியங்கள் வரைந்து உயிரூட்டினார்.விகடன் ஆசிரியர் சேவற்கொடியோன் என்ற பெயரில் எழுதிய "உன் கண்ணில் நீர் வழிந்தால்" ,சாவியின் வாஷிங்டனில் திருமணம்.விசிறிவாழை,வழிப்போக்கன் தொடர்களுக்கு உயிரோட்டமுள்ள கேரிகேச்சர்-களை வரைந்து புகழ்பெற்றார். எழுத்தாளர் சாவி எழுதிய பயண இலக்கியத் தொடருக்காக அவருடன் இணைந்து அஜந்தா குகைகள்,எல்லோரா,தில்லை,ஜெய்ப்பூர் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களுக்கு சென்றார்.

இருபதாயிரம் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஜெயகாந்தனின், ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரீசுக்குப் போ, ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன்,திருச்சிற்ரம்பலம், நா பார்த்தசாரதியின் நித்திலவல்லி ஆகியவற்றிற்கும் இவர் ஓவியமே!

1963இல் பத்திரிக்கைத் துறையிலிருந்து விளம்பரத் துறைக்கு மாறினார். 1972 ஆம் ஆண்டில் கோபுலு ஆட் வேவ் அட்வெர்ட்டைசிங் என்ற பெயரில் சொந்த விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். குங்குமம் இதழுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் சின்னங்களை வரைந்து கொடுத்தார். பின்னர், விளம்பரத் துறையில் இருந்து விலகி,  கல்கிஅமுதசுரபி, ஆனந்த விகடன், குங்குமம் ஆங்கியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்தார்.ஆமுதசுரபியின் தீபாவளிமலர்களுக்கு முகப்பு  அட்டையினை தொடர்ந்து வரைந்தார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது,முரசொலி விருது,எம் ஏ சிதம்பரம் செட்டியார் விருது,பகடிப்பட ஓவியர்களுக்கான இந்தியக் கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றார் இவர்

ஸ்ட்ரோக் வந்து மருத்துவமனையில் இவர் இருந்த போது நண்பர்களிடம்"என் பாணியை கோபுலுவின் ஸ்ட்ரோக் என்பார்கள்.இப்போது கோபுலுவுக்கே ஸ்ட்ரோக் வந்துவிட்டது"என்றாராம். வலதுகைதானே வரைய முடியாது, இடது கையால் வரைகிறேன் என பின்னர் ஓவியங்களை வரைந்தார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள் அமரர் ஆனார்.

No comments: