Wednesday, February 29, 2012

தங்கக்குடைகள்







மெலிதான இருள்

மெழுகுவர்த்தியின் சன்ன ஒளி

ஹேப்பி பர்த் டே பாடல்

அவனுக்கு பிறந்த நாள்

மெழுகுவர்த்திக்கு இறந்த நாள்


2)கொட்டும் மழையில்

தொப்பலாக நனைகிறாள்

இரு தங்கக் குடைகள்

காதில் நடனமாட..


3)பூக்களைப் பறிக்காதீர்

பூங்காவில் வாசகம்

பெருமூச்சு விடுகிறாள்

பேரிளம் பெண்


4)குளத்தில்

முழு நிலா

குளிரில் நடுங்குகிறது

Tuesday, February 28, 2012

கூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: பிரேமலதா தகவல்



சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, தங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்ட 3 பேர் காலில் விழாத குறையாக கெஞ்சியதாகக் கூறியுள்ளதோடு, அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனியும் விஜய்காந்தை அதிமுக சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவரான விஜயகாந்த், இனி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த 'ராமு வசந்தன் இறந்ததும் அந்தப் பதவிக்காக, பல முக்கிய தலைகளும் போட்டியிட, இதை வைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுக முயன்றதாகவும், இதனால் தான் அந்தப் பதவியை தானே வைத்துக் கொண்டார் விஜய்காந்த் என்கிறார்கள்.

கூட்டத்தில் பிரேமலதா பேசுகையில், கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் நடந்தன. அதில் தன்னந்தனியாகத் தைரியத்தோடு போட்டியிட்டது தே.மு.தி.க. ஆனால், 5 இடைத் தேர்தல்களில் போட்டி போடாமலேயே ஓடி ஒளிந்தவர்கள், பென்னாகரத்தில் டெபாசிட்டைப் பறி கொடுத்தவர்கள் எல்லாம் திராணி பற்றிப் பேசுகிறார்கள்.

அதிமுகவோடு கேப்டன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அந்த அம்மா ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தே.மு.தி.கவோடு கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார் ஜெயலலிதா. நம்மோடு கூட்டணி சேர அவர்கள் எவ்வளவு இறங்கி வந்தார்கள் என்று சொன்னால், அவர்கள் முகத்திரை கிழிந்து தொங்கும். இப்போது, அமைச்சர்களாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அப்போது கேப்டனை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள்.

அவர்கள் என்னென்ன பேசினார்கள். நம்மோடு கூட்டணி வைக்க எப்படி எல்லாம் அலைந்தார்கள், காலில் விழாத குறையாக எப்படிக் கெஞ்சினார்கள் என்பதை எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதைக் கேட்கும் தைரியம் அந்தம்மாவுக்கு உண்டா?. இனியும் எங்களை சீண்டினால் அந்த ஆதாரங்களை வெளியிடு​வோம் என்றார்.

நன்றி தட்ஸ் தமிழ்


Monday, February 27, 2012

எதை அறுப்பான்..??




தினை விதைத்தவன்

தினை அறுப்பானாம்

வினை விதைத்தவன்

வினை அறுப்பானாம்

ஊரைக் கொள்ளையடிப்பவன்

எதை அறுப்பான்

மக்களை கொன்று குவித்தவன்

எதை அறுப்பான்...

Sunday, February 26, 2012

எம்.பி.க்கள் கொள்ளையர்கள்- கொலைகாரர்கள்:



நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்ளையர்கள் என்றும் கொலைகாரர்கள் என்றும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புக் குழுவினரும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியை அடுத்த காஜியாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் இப்போது சர்ச்சைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது.

காசியாபாத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:

இப்போதைய நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்கள் மீது பல தரப்பட்ட குற்றங்களுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது முதல், கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வரை இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஊழலை ஒழிக்கும் வலுவான லோக்பால் சட்டத்தை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எப்படி நம்புவது? வறுமையிலிருந்தும் ஊழலிலிருந்தும் நமக்கு எவ்வாறு விடிவு கிடைக்கும் என்பதுதான் கெஜ்ரிவாலின் பேச்சு.

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை திரும்பும் தமிழர்கள் சித்ரவதை, கற்பழிப்பு






போரின் போது அயல்நாடுகளுக்குச் சென்று அகதிகளாக தஞ்சம் புகுந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பும் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் ச‌ர்வதேச மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. 

போரின் போது சிறிலங்க ராணுவத்திற்கு பயந்து ஏராளமான தமிழர்கள் அயல்நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். அவர்கள் தற்பொழுது, அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். 

இந்நிலையில், அவ்வாறு இலங்கைக்கு திரும்பும் தமிழர்கள் சிறிலங்க ராணுவத்தால் சித்ரவதை செய்யப்படுவதாகவும், பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 

எனவே, அயல்நாடுகள் தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 


(நன்றி வெப்துனியா) 

Friday, February 24, 2012

கருணாநிதி தமிழர் அல்ல - அன்புமணி ராமதாஸ்





பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்,

மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்று சொல்ல முடியாது. நீங்கள் அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருவதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதேபோன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதை பார்த்து விட்டு அப்போதே மறந்துவிட வேண்டும். ஆனால் நமது மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இனி தமிழ்நாட்டை படித்தவர்கள்தான் ஆள வேண்டும்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அதிமுகவுக்கு அவர்கள் ஒட்டுப் போடவில்லை. திமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள் என்பதுதான் உண்மை.

பாமக ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த தவறை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம். பாமக தலைமையில் தனி அணி அமைப்போம்.

கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை.

திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. திராவிடர்கள் தான். தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் அன்புமணி.


Wednesday, February 22, 2012

சென்னை வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களும் 'என்கவுண்ட்டரில்' சுட்டு வீழ்த்தப்பட்டனர்!



 சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் வைத்து இன்று சுட்டு வீழ்த்தினர். ஹாலிவுட் திரைப்படங்களையும் மிஞ்சும் வகையில் இன்று அதிகாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த என்கவண்ட்டர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரு பெரும் வங்கிக் கொள்ளைகள் தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. ஜனவரி 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கியில் புகுந்து ரூ. 20 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமையன்று கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் ரூ. 14 லட்சத்தை அள்ளிச் சென்றனர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்களை பெரும் சவாலாக கருதிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பிறவங்கிகளில் பதிவான கண்காணிப்பு காமரா பதிவுகளையும் போலீஸார் ஆராய்ந்ததில் கொள்ளையர்கள் இருவர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டதை உணர்ந்த போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டனர்.

மேலும் கொள்ளையர்கள் குறித்த விவரத்தையும் வெளியிட்ட போலீஸார் கொள்ளைக் கும்பலின் தலைவன் என்று கருதப்படும் நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இதற்கு உடனடி பதில் கிடைத்தது.

சென்னை வேளச்சேரி பகுதியில் ஹவுசிங் போர்டு காலனி, ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன.

இதையடுத்து பெரும் போலீஸ் படை அந்த வீட்டுக்கு விரைந்தது. உள்ளே பதுங்கியிருந்த கொள்ளையர்களை நாலாபுறமும் முற்றுகையிட்ட போலீஸார் கொள்ளையர்களை சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கொள்ளையர்கள் வரவில்லை. மாறாக, போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த சண்டையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி மற்றும் ரவி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் மற்றும் சரிகர் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் சரிகர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன்.மற்ற நால்வரும் உ.பி. அல்லது பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

என்கவுண்ட்டர் நடந்த வீட்டிலிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு துப்பாக்கிகளும் கிடைத்தன. இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்டவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவன். படித்து முடித்து விட்டு ஊருக்குச் செல்லாமல் இங்கிருந்தபடி கொள்ளைச் சம்பவத்தை நடத்தியுள்ளான்.

இரு வங்கிகளிலும் கொள்ளை போன பணம் மொத்தம் ரூ. 34 லட்சமாகும். இதில் பத்து லட்சம் மட்டும்தான் கிடைத்துள்ளது. மற்ற பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. அதை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கொடுத்து வைத்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதிகளில் சோதனையிட போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

நன்றி தட்ஸ்தமிழ்


தினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)





இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது.
 இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.
 அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.
 இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.
 இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
 ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!
 8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
 இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.
 ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?
 ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?
 இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.
 பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
 நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
 கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்.


Tuesday, February 21, 2012

மின்வெட்டிற்கு காங்கிரசே காரணம்....




'இன்றைய மின் தடைக்கும், தமிழக மின் வாரியம் கடன் சுமையில் தத்தளிப்பதற்கும் 1991 களில் மத்தியில் பொறுப்பு வகிச்ச காங்கிரஸ் அரசுதான் முதல் காரணம்.அப்போ காங்கிரஸ் அரசு பின் பற்றிய புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக எதிர்கால மின் உற்பத்தி அனைத்தும் தனியாரின் கட்டுப்பாட்டிர்கு விடப்பட்டது. அதன்படி மின் வாரியங்கள் தங்கள் தேவைக்காக புதுசா மின் உற்பத்தியில் ஈடுபடுகிற தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமா மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்க தனி சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது.உண்மையில் தமிழ் நாடு மின்சார வாரியம் மின்சாரத்தை வாங்கி விற்கும் ஒரு ஏஜென்சிதான்.மின்சாரத்திற்கு  அநியாய விலை வைக்கும் தனியார் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒருமுறை ஆந்திர அரசு பேச வேண்டிய விதத்தில் பேசி விலையைக் குறைக்க வைத்தது.அந்த அணுகுமுறை இப்போது நமக்குத் தேவை.வாரியத்திற்கு இருந்த கொஞ்சநஞ்ச அதிகாரமும் 1998ல் ஒரு தனிச்சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை அணையத்திடம் குவிக்கப்பட, இப்போது ஒழுங்குமுறை ஆணையம் தனியார் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு இருக்காங்க' என்கிறார்களாம் மின்சார அரசியல் தெரிந்தவர்கள் .

தகவல் -குமுதம்


Saturday, February 18, 2012

ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா




சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இப்போது சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன.

எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசு, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.

கடைசி முயற்சியாக, 'சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்' என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார்.

சசிகலா தந்த பதில்களை ஆங்கிலத்தில் நீதிபதிக்கு மொழிபெயர்த்தார் ஹரீஸ்.

கதறி அழுத சசி

பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதாராம்.

வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி தட்ஸ்தமிழ்)


Thursday, February 16, 2012

ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால தனித்தன்மை இழந்தேன் - தனுஷ்




ரஜினி மகளைக் கட்டிக் கொண்டதால், என் சொந்த அடையாளத்தை இழந்துவிட்டேன் என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு பல வாய்ப்புகளைப் பெற்றுள்ள தனுஷ்.

சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு விருது விழாவில், தனது ‘கொலவெறிடி’ பாடலை நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமர்ப்பிப்பதாகவும் ரஜினிக்கு தன்னால் இப்படி செய்ய முடியாது என்றும் அறிவித்தார் தனுஷ். அவரது இந்தப் பேச்சு, லேசாக முணுமுணுப்பை கிளப்பியது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர், இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் ரஜினி இருக்க, பிரபலமான ஒரு பாடலை அமிதாப்பச்சனுக்கு சமர்ப்பித்தது ஏன்? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தனுஷ், “குடும்பத்துக்குள் இப்படியெல்லாம் செய்துகொள்ளக் கூடாது. என் மாமனார் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரது தனிமையை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினியின் மருமகன் என்பது எனக்கு மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறது. 2004-ல் அவரது மகள் ஐஸ்வர்யாவை நான் திருமணம் செய்த போதே என் சுய அடையாளத்தை இழந்துவிட்டேன். அதற்கு முன் நான் சம்பாதித்த பேர் புகழ் அனைத்தையும் ரஜினி மருமகன் என்பது அடித்துச் சென்றுவிட்டது. எங்கே போனாலும் என்னை அவரது மருமகனாகத்தான் பார்க்கிறார்கள்.

எப்போது நான் பேட்டி கொடுத்தாலும், என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, ‘ரஜினியின் மருமகன் என்பதை எப்படி உணர்கிறீர்கள்’ என்பதுதான். முன்பெல்லாம் இந்தக் கேள்வியைத்தான் எடுத்த எடுப்பில் கேட்பார்கள். கொலவெறி பாட்டுக்குப் பிறகு, இந்தக் கேள்வியை இடையில் கேட்கிறார்கள். இனி வரும் நாட்களில் இந்தக் கேள்வியே கேட்கப்படாது என நம்புகிறேன்!” என்றார்

தனுஷின் பேச்சு மிகவும் முரண்பாடானதாகவும், ஏதோ புதிய வெறுப்பில் பேசுவதாகவும் அமைந்துள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இவ்வளவு பேசும் தனுஷ், சூப்பர் ஸ்டாரின் படிக்காதவன், பொல்லாதவன் தலைப்புகளை எதற்குப் பயன்படுத்தினார்? மாப்பிள்ளை படத்தை எந்த அடிப்படையில் ரீமேக் செய்தார்? என்னம்மா கண்ணு…, என்னோட ராசி நல்ல ராசி பாடல்களை ரீமிக்ஸ் செய்தது எதற்காக? இதையெல்லாம் அவர் ரஜினியின் மருமகனான பிறகே செய்தார்.

ரஜினியின் புகழ் தனக்கு வேண்டாம் என்று உண்மையிலேயே நினைப்பவராக இருந்தால், அவர் இதையெல்லாம் செய்திருக்க வேண்டாமே...

உண்மையில் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்யும் போது தனுஷ் ஒரு ஜீரோ. அவரது எந்தப் படமும் ஓடவில்லை. புதுக்கோட்டையிலிந்து சரவணன், சுள்ளான் என எல்லாம் குப்பைப் படங்கள். மேலும் கால்ஷீட் சொதப்பல் காரணமாக வரிசையாக வழக்குகளைச் சந்தித்து வந்த நேரம் அது.

ரஜினி மருமகன் என்ற அந்தஸ்தை வைத்துதான் இவர் பல சிக்கல்களிலிருந்து வெளியில் வந்தார்," என்கிறார் ஒரு ரசிகர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு முக்கிய இயக்குநர் இதுபற்றி கூறுகையில், "ரஜினி ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார். அவருக்கு முன் தனுஷ் ஒரு சுள்ளான் என்று கூட சொல்ல முடியாது. சினிமாவில் தான் சொந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ரஜினி பெயரையே யாரும் சொல்லக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது தனுஷ்... கொலைவெறிடி என்ற பாட்டுக்காக இவரை பாலிவுட் கூப்பிடவில்லை. ரஜினி மருமகன் என்ற கூடுதல் தகுதி காரணமாகத்தான்," என்றார் கொதிப்புடன்.

(தகவல் தட்ஸ்தமிழ்)



Wednesday, February 15, 2012

பாமக நிறுவனரின் நகைச்சுவை...


.
 தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று, பாமகவின் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே திமுகவும், விஜயகாந்தின் தேமுதிகவும் கூட்டணி சேர்ந்து போட்டியிட முயற்சித்தன. ஆனால் அது அப்போது முடியாமல் போய்விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது விஜயகாந்தும், ஸ்டாலினும் சந்தித்துள்ளனர். அடுத்த கூட்டணிக்கு அடித்தளம் போடுகின்றனர். ஆனால் அவர்களால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.

ஆனால், பாமக, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுடனோ, திராவிடக் கட்சிகளுடனோ கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும். தனித்துப் போட்டியிட்டு 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனரின் இந்த நகைச்சுவைப் பேச்சு..சினிமா நகைச்சுவை நடிகர்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.தங்களது மார்க்கேட்..இவரின் இது போன்ற பேச்சுகளால் சரிந்து விடுமோ என பயப்படுகிறார்களாம்.



Tuesday, February 14, 2012

ராசாவை சந்தித்த முன்னாள் மந்திரிகள்





திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவை
நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கிட்டத்தட்ட திமுக கைவிட்டு்
விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அவரை முக்கியத் தலைவர்கள் யாரும் கடந்த பல மாதங்களாக போய்ப் பார்க்கவில்லை.
தனது மகள் கருணாநிதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மட்டுமே கட்சித் தலைவர் கருணாநிதி சில முறை திஹார் சிறைக்கு வந்து போனார்.

இந்த வழக்கில் ராசா மட்டுமே இதுவரை ஜாமீன் கோராமல் இருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை.
வெளியில் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால்தான் ராசா ஜாமீனில் வெளியே வர மறுத்து வருவதாக ஒரு தரப்பு கூறுகிறது.
 திமுக தலைமையுடன் அவர் மனஸ்தாபததில் இருப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி,எ.வ.வேலு ஆகிய இருவரும் நேற்று திடீரென டெல்லி வந்தனர்.
 பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்திருந்த ராசாவை இருவரும் சந்தித்துப் பேசினர்.

திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை அவர்கள் ராசாவிடம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதவி உயர்வும், கனிமொழிக்கு முக்கியப் பதவியையும் கொடுக்க திமுக தலைமை முடிவு
செய்திருப்பதாக பேச்சு இருந்து வருகிறது. கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைத் தருவது என்ற முடிவில்
திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பதவியை வகித்து வருபவர் ராசா.

கனிமொழிக்கு இந்தப் பதவியைத் தருவதற்கு வசதியாக, ராசா அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதாக தெரிகிறது.
 இதுதொடர்பாகவே ராசாவை, பொன்முடியும், வேலுவும் நேரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

(தகவல் தட்ஸ்தமிழ்)


Monday, February 13, 2012

மெரினா...சொல்வது என்ன?




"பசங்க" தந்த எதிர்பார்ப்பில் மெரினா வுக்கு விஜயம் செய்தால்....

எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தைத் தருகின்றன.

மெரினாவில் சிறுவர்கள்..ஒவ்வொருவருக்கும் ஒரு கதை..அதை சொல்ல முயன்ற பாண்டிராஜின் எண்ணத்திற்கு ஒரு வணக்கம்..ஆனால் நினைத்ததை சொல்லியிருக்கிறாரா?
சந்தேகம் தான்.

எந்த சிறுவர் பாத்திரத்தின் கதைகளும் மனதில் ஒட்டவில்லை..

உண்மையில் எனக்குத் தெரிந்த மெரினா கதை ஒன்று உண்டு..தந்தையை இழந்த தாய் படிக்கும் தன் மகனை பள்ளி விட்டு வந்ததும் சுண்டல் தூக்கை கையில் கொடுத்து அனுப்பியதை நான் அறிவேன்.அப்படிப்பட்ட மகனும் படித்து முன்னுக்கு வந்திருக்கிறான்..

ஆனால் பாண்டிராஜ் சொல்லும் பசங்க எல்லாம் வீட்டை விட்டு வந்தவர்கள்..அல்லது ஆதரவற்றவர்கள்.

படிக்க ஆசைப்படும் அம்பிகாபதியை அரசு தத்து எடுக்கும் நிலையிலும்..ஒரு அரசு ஊழியரே வந்து...தான் படிக்க வைப்பதாக உறுதி சொல்லி அழைத்து வந்துவிட்டு..மெரினாவிலேயே சுண்டலுக்கு விடுவதை ரசிக்க முடியவில்லை.ஒருவேளை அந்த தபால் ஊழியர் பாத்திரத்தை உயர்த்த வேண்டும் என இயக்குனர் நினைத்து விட்டாரோ//

காவல் அதிகாரி ஒரு பையனை அக்யூஸ்டு எனத் தேடுகிறார்..அனைத்து காவல் நிலையத்திலும் அவன் புகைப்படம் வேறு இருக்குமாம்..அவனைத் தேட இரு காவலர்களை சென்னைக்கு அனுப்புகிறார்.பணத்தை பற்றி கவலைப்படாது.அவர்களும் பையனைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு சென்னையை சுற்றிப் பார்ப்பதிலும், தண்ணீ அடிப்பதிலும் காலத்தை கடத்துகின்றனர்.கடைசியில் அப் பையனை அழைத்து வந்தால்..அவன் செய்த குற்றமாகச் சொல்லப்படுவது... ஒரு அம்புலிமாமா கதையில் கூட நடக்காதது.

பையன்,.மருமகளிடமிருந்து..அவர்கள் வன்சொல் பொறுக்காமல் வீட்டைவிட்டு வெளியே வரும் போது தாத்தாவிற்கு அவ்வளவு வயது ஆகவில்லை.ஆனால் பையனின் பெயரைக் கெடுக்க வேண்டும் என பிச்சை எடுக்கிறாராம்.(ஆனால் பையன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை நமக்கு)..கடைசியில்..புல்லாங்குழல் விற்பவராக..மெரினா பையன் சொல்ல திருந்துகிறாராம்.இதில் இயக்குனர் என்ன சொல்கிறார்..மகன், மருமகள் மோசம் என்கிறாரா..பெரியவரின் வீண்பிடிவாதம் பற்றி சொல்கிறாரா....அனுதாபம் வரவேண்டிய பாத்திரம் ஆத்திரத்தையே வரவழைக்கிறது.

ஒண்ணுக்கு அடிப்பது, சிறுநீரை பிடிப்பது,ஓட்ட பந்தயம், கிரிக்கெட், குதிரைப் பந்தயம்..இப்படி கிட்டத்தட்ட அரை மணி நேரம் சிரமப்படாமல் திரைக்கதை.

கல்லூரி மாணவி..சும்மா..பொழு போக காதல்..தின்ன காதல்...பாண்டிராஜ்..பாவம் பெண்களை இப்படி சித்தரிக்க மனம் எப்படி உங்களுக்கு வந்தது.எவ்வளவு உண்மைக் காதலர்கள், இளம் தம்பதிகள்..(அவர்கள் வீட்டில் தனிமை கிடைக்காததால்) மெரினா வந்து..தங்கள் மனக்குறைகளை கொட்டித் தீர்க்கிறார்கள்..அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.

இவன் இல்லையேல் அவன் என பெண்களை சித்தரிப்பது...சாரி பாண்டிராஜன்..

மேலே சொன்னவை..சில விஷயங்களே...இதுபோல பல லாஜிக்கே இல்லா சம்பவங்கள்..

இதையும் மீறி மெரினா ஓடுகிறது என்றால்...  இயக்குநர் மீது உள்ள நம்பிக்கையில் வருகிறார்கள்..ஆனால் இயக்குநர் ஏமாற்றிவிட்டார்.


இன்னும் சற்று அழுத்தமாக சிந்தித்து..சிறப்பான திரைக்கதை எழுதியிருந்தால்...பசங்க படத்திற்கு பிறகு இயக்குனர் திறமை..'கிராஃப்' ஏறியிருக்கும்..இப்போது இறங்கிவிட்டது.அவ்வளவுதான்.


Sunday, February 12, 2012

விஜய்காந்தை பாராட்டும் அதிமுகவினர்...




சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்த் நாக்குத் துருத்தலுக்கு பிறகு ஜெ திராணி இருந்தால் சங்கரன் கோயில் இடைத் தேர்தலில் தனித்து நில்லுங்கள் என்றும்..மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்பட்டதும்...தொண்டர்கள் போஸ்டர் யுத்தம் ஆரம்பித்துவிட்டனர்.

இதில் ஒரு குழுவினர் விஜய்காந்த் வீட்டருகே வைத்த போஸ்டர் இது.




ஆத்திரப்பட்டால் காரியம் சிதறும் என்பது எவ்வளவு உண்மை.தேமுதிக எம் எல் ஏ க்கள் திருடர்கள் என்று சொல்ல ஆசைப்பட்டு..விஜய்காந்தை அந்த திருடர்களை அழிக்கும் நல்லவனான அலிபாபா உடன் ஒப்பிட்டுள்ளனர்.

ஆம் ..அலிபாபா நல்லவன்...திருடர்களை அழித்தவன்..தான தருமங்கள் செய்தவன்..அது போலத்தான் விஜய்காந்த் என்பதை அதிமுக வினர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்கிறார் ஒரு தேமுதிக தொண்டர்.
   

Saturday, February 11, 2012

மண் பற்றி வைரமுத்து...




மண் பற்றியும், ரசாயன உரம் பற்றியும் முன்றாம் உலகப் போரில் வைரமுத்து எழுதியுள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மண் தான் சாமி என்றால் மண்ணை ஏன் கொல்கிறீர்கள்?

நெல்லுக்கு எறிகிறீர்களே ரசாயன உரம்..அது மண்ணைக் கொல்லும்.மண்ணுக்கும் உயிருள்ளது..அதனால்தான் மண் ஈனுகிறது.மண் என்பது ஜீவராசிகள் தங்கி வசிக்கும் உயிர்க்கூடு.கண்ணறியாத நுண்ணுயிர்களை - காளான் உயிரிகளை - மண்புழுக்களை- பாசி இனங்களை - பூச்சிகளின் கரு முட்டைகளை- ஒன்று கூட்டி வைத்திருக்கும் உயிர்த் தொகுதிதான் மண். இந்த உயிர்த் தொகுதியின் உந்து சக்திதான் மண்.புதைக்கப்பட்ட விதைக்கு ஜனனம் தருவதே அந்த நுண்ணுயிர்கள்தான்.கடப்பாரைக்கு உடையாத கடும்பாறை, ஒரு தாவரத்தின் வேருக்கு நெக்குருகி நிற்கிறதே,,எப்படி? எல்லாம் பாக்டீரியாக்கள் படுத்தும் பாடு. பாறைகளை உடைக்கும் பாக்டீரியா பழங்குப்பைகளை மக்கச் செய்யாதா? உலோகங்களையே கரைக்கும் அந்த உயிரணுக்கள் தாவரங்களின் வேர்களுக்கு தாய்ப்பால் ஊட்டாதா? மண்ணை எது உயிரோடு வைத்திருக்கிறதோ, அதைக் கொல்கிறீர்கள்.ரசாயன உரம் தெளித்து, மண்ணைக் கொன்று விவசாயம் செய்கிறீர்கள்.பிறகு, பிணத்துக்கு எல்லாரும் கூடிப் பிரசவம் பார்க்கிறீர்கள்.மண் என்பது ஜடமில்லை.அது ஓர் உயிரி.மனிதக் கொலையிலும் கொடியது மண் கொலை.

நாம் உணவுக்கு பதிலாக விஷம் உண்ணமுடியாது என்பது போலத்தான்..எருவுக்கு பதிலாக ரசாயனம் இடுவதும். உரம் பிறந்த கதை தெரியுமா?

உலகப் போர்களின் எச்சம் தான் இந்த உரங்கள்.முதல் உலகப் போரில் எட்டு லட்சம் சிறைக் கைதிகளைக் கொல்ல அம்மோனியா நச்சுப் புகை பயன் படுத்தப் பட்டது.உலகப் போர் முடிந்ததும் அதுவே பூச்சிக் கொல்லி மருந்தாக அவதாரம் எடுத்தது.இரண்டாம் உலகப் போர் முடிந்ததில், வெடிகுண்டுக்காரர்களின் சந்தை சரிந்தது.வெடிகுண்டுத் தயாரிப்பில் மிச்சப்பட்ட அம்மோனியா - சூபர் பாஸ்பேட் போன்ற வெடி உப்புக்களை எங்கே கொட்டுவது? வியாபார மூளைகளில் கந்தகம் எரிந்தது.எந்த உலோக உப்புகள் மனிதச் சந்தையை இழந்து விட்டனவோ, அதே உலோக உப்புகளுக்கு ஒரு மண் சந்தை தயாரிக்கப்பட்டது.அவை ரசாயன உரங்களாய் ரசவாதம் பெற்றன.மனிதனைக் கொன்ற மிச்சம் மண்ணைக் கொன்றது.இதுதான் பூச்சிக் கொல்லி மருந்தும், உரமும் பிறந்த கதை.

சாணமும், எருவும், சாம்பலும், தழையும் குழைத்துக் குழைத்துக் கொட்டிச் செய்யப்பட்ட விவசாயம், சோதனைக் குழாய்களின் கைகளுக்குப் போய் விட்டது.மலடாகிப் போனது மண்.விஷமாகிப் போனது உணவு.

மனிதா இயற்கைக்குத் திரும்பு.



Friday, February 10, 2012

அடப் பாவிகளா..எப்படியெல்லாம் ஏமாத்தறீங்க..



உத்தர பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வரும் வேளையில்..அங்கு பெருவாரியான இஸ்லாமியர் இருப்பதால் அவர்கள் வாக்குகளைப் பெற..எப்படியான தகடுதத்தங்கள் காங்கிரஸ் நடத்துகிறது..

மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முதலில் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடாக ஒன்பது விழுக்காடு ஒதுக்கப்படும் என்றார்.அவரது இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்..இப்போது புதிதாக தில்லி ஜாமியா நகரில் நடைபெற்ற எங்கவுண்டரில் 2 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி கண்ணீர் விட்டு அழுதார் என புதுக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்,மேலும் இது சம்பந்தமாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார் (சோனியா எந்த அதிகாரத்தில் உத்தரவிட்டார்?) என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் மறுத்துள்ளார். சோனியா காந்தி அழவில்லை என்றுள்ளார்.

டிஸ்கி -அவர் ஏன் அழப் போகிறார்...கொத்து கொத்தாய் இலங்கை தமிழர்கள் கொன்று வீழ்ந்த போதே வாயை மூடிக் கொண்டு தானே இருந்தார்.

FLASH NEWS

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் சல்மான் குர்ஷித் அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

ஆனால் இதை சல்மான் குர்ஷித் நிராகரித்து பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் பேசிய சல்மான், சிறுபான்மையினர் உரிமை தொடர்பாக பேசுவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. சிறுபான்மையினரது உரிமை பற்றி பேசினால் எனக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். சிறுபான்மை ஆதரவு நிலைப்பாட்டிற்காக என்னை தூக்கில் வேண்டுமானால் போட்டுக் கொள்ளுங்கள் என்றார்.


தமிழ் எழுதத் தெரியாது - ரஜினிகாந்த்.




(தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (10-2-12))

ஒரு சமயம் பெர்னார்ட்ஷா சர்ச்சிலுக்கு 'இன்று ஒரு பெரிய விழாவில் நான் கலந்து கொள்கிறேன்.நீங்களும் வாருங்கள்...உங்கள் நண்பர்கலுடன் - அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்' என்று கிண்டலாக கடிதம் எழுதினார்.
அதற்கு சர்ச்சிலின் பதில்..'இன்று ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் -  அப்படி ஏதேனும் ஒன்று நடந்தால்.."

ஏட்டிக்கு போட்டி...???!!!

2)தாயார் பெயரை இனிஷியலாக பயன் படுத்தி வரும் நாடு ஸ்பெயின் ஆகும்.

3)கடுகை ஆயிரம் பங்கிட்டு
 அதிலொரு பங்கு அளவுள்ள
 ஒரு பொருள் கருப்பையில் தங்கி
 தானே ஊட்டிக் கொண்டு
 தன்னையே பகிர்ந்து
 பல்கி ஓரண்டம் போலாகி
 காற்றடைத்த பந்தில் காற்றுக் குறைந்து
 சப்பையாதல் போல் ஒடுங்கிப் பள்ளம்
 விழுந்து, இதுவே நீண்டு, மேலும்
 உருமாறிக் கொண்டே போய்
 உறுப்புகளையும் படிப்படியாக தோற்ருவித்து
 ஒரு மனிதக் குழந்தையாகத் தாயின்
 கருப்பையிலிருந்து வெளியே வந்து
 ஒரு சரித்திரத்திற்கு ஆளாகிறது

(இப்படி தாயின் கருவில் குழந்தை வளர்வதை வர்ணித்தவர் டாக்டர் என்.சேஷாத்திரி நாதன் அவர்கள்)

         - அமுதசுரபியில் சுதா சேஷய்யன்

4)அரசியல்னா என்னன்னு தெரியாம, முழுதும் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வைச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது என்கிறார் அஜீத்...

5)1022 நில அபகரிப்புகள் இதுவரையில் செயல்பட்டுள்ளதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

6)எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்து விட்டது என்றுள்ளார் ரஜினிகாந்த்.

7)ஜோக்ஸ்...

  இங்கே நேற்று வரை இருந்த அணையை திடீர்னு காணலையே..
  அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய பல நிபுணர் குழுக்கள் வந்து ..ஆங்காங்கே..துளையிட்டு..சுண்ணாம்பு..கலவையை எடுத்துச் சென்றுட்டாங்க.

8) தலைவர் பெயர் கின்னஸ்ல வந்திருக்கு
  என்ன சாதனைப் பண்ணினார்
  நில அபகரிப்பு அதிக பட்சமாக செய்திருக்கிறாராம்

Thursday, February 9, 2012

ஆசிரியையை கொலை செய்த மாணவன்






சென்னை பாரிமுனையில் 167 ஆண்டுகளாக நடந்துவரும் பாரம்பரியம் மிக்க பள்ளி புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி.

இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகவும்..ஹிந்தி ஆசிரியையாகவும் இருந்து வந்தவர் உமா மகேஷ்வரி,இவர் இன்று காலை ஒன்பதாம் வகுப்பிற்கு ஹிந்தி பாடம் எடுத்துள்ளார்.அப்போது திடீரென முகமது இர்பான் என்னும் மாணவன் திடீரென கத்தியுடன் அவர் மீது பாய்ந்து அவரது வயிற்றிலும்..கழுத்திலும் அவரைக் குத்திக் கொலை செய்தான்.

பின் அவன் வாக்குமூலத்தில், 'தன்னைப் பற்றி பெற்றோரிடம் குறை கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்து போட்டதாலும் ஆசிரியையை குத்திக் கொன்றதாக'  சொல்லியுள்ளான்

ஒரு ஆசிரியைக்கும் நடந்த இந்த நிலை...நம் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது..? என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

மாணவர்கள் அனைவருக்கும் நீதி போதனை வகுப்புகள் மீண்டும் இருக்க வேண்டும்.அவர்களை வெற்றி, தோல்வி இரண்டும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் உருவாக்க வேண்டும்.

நம் நாட்டு கல்வியாளர்கள் இது பற்றி சிந்தித்து ஆவண செய்ய இதுவே சரியான நேரம்.


Wednesday, February 8, 2012

மாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு





2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன்
ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தம் மூலம் இவர்கள் முறைகேடாக ரூ.550 கோடி அளவிற்கு பணம் ஈட்டியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று அமலாக்கப் பிரிவினர் இந்த வழக்கை பதிவு செய்து எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act-PMLA), அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம்
(Foreign Exchange Management Act-FEMA) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் மிக மிகக் கடுமையானதாகும். இதன் கீழ் சன் டிவி மற்றும் மாறன் சகோதரர்களின்
 சொத்துக்களைக் கூட முடக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவுக்கு உண்டு.

2ஜி லைசென்ஸ் பெற சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்தபோது அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும்,
பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு
நிர்பந்தப்படுத்தியதாகவும், இந்த நெருக்குதலால் ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும்,
இதன் பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கித் தந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சன் டைரக்ட் நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் நிறுவனம் ரூ. 550 கோடி அளவுக்கு
 முதலீடு செய்தது. செளத் ஏசியா எண்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங்ஸ் என்ற துணை நிறுவனம் மூலமாக இந்தப் பணத்தை முதலீடு செய்தார் அனந்தகிருஷ்ணன்.

இதன்மூலம் மாறன் சகோதரர்கள் ரூ. 550 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்ததாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவிலியிருந்து விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்து வந்தாலும், இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.