Sunday, February 6, 2011

குறள் இன்பம் - 8





ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து..

இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..?

ஒருவரிடம் நட்பு பாராட்டுமுன் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்..அதைச் செய்யாமல் நண்பனாகி விட்டால் அது தீய நட்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது.

இதைத்தான் வள்ளுவர் சொல்விளையாட்டுடன் நட்பாராய்தல் அதிகாரத்தில் முதல் குறளாகச் சொல்லியுள்ளார்.



நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு

என்கிறார்..ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும் என்பதே இதன் பொருள்.

புல்லறிவாண்மை அதிகாரத்தில் ஒன்பதாம் குறளைப் பார்ப்போம்..

ஒரு முட்டாள் இருக்கிறான்.அவனுக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அறிந்தோரிடம், தனக்கும் எல்லாம் தெரியும் போல நடந்துக் கொள்கிறான்.அவனை அறிவுடையோன் ஒருவன் அறிவுடையவனாக்க முயற்சிக்கிறான்..அந்த சமயத்தில் அறிவுடையோனும், அறிவற்றவனாகவே தன்னை ஆளாக்கிக் கொள்ள நேரிடும்..

உதாரணத்திற்கு..சேறும் சகதியுமான இடத்தில்..தண்ணீர் தேங்குமாயின் அதுவும் சேற்றின் நிறம் அடையும்..(செம்புலப்பெயல் நீர்),இதில் சேறு அறிவற்றவன்..தண்ணீர்.. அறிவுடையவன்.இப்போது இந்த குறளைப் படியுங்கள்..



காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு



காணாதான்,காணான்,காணாதான்,கண்டானாம்,கண்டவாறு..அடடா..சொல்லழகும்,சொல் விளையாட்டும் ..இந்த ஒன்றே முக்கால் அடியில்..இது வள்ளுவனன்றி வேறு யாரால் முடியும்!!!!

இதன் பொருள்- அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

அடுத்து...

நமக்கு நெருங்கிய உறவினர்..அவர் நம்மிடம் மிகவும் அருமையாக உறவுடன் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்..நம்மைப் பற்றி வன்மம் பாராட்டுகிறார்..இப்படியிருப்பதால் நமக்கு என்றேனும் ஒருநாள் அவரால் கேடு உண்டாகும்..இதற்கு உதாரணம் சொல்வதானால்...இப்போதெல்லாம் ஒரு ரூபாய்க்கு தண்ணீர் பாக்கெட் கிடைக்கிறது.வெயிலில் அலையும் நாம் தாகத்திற்கு அதை வாங்கி அருந்துகிறோம்.அது பார்க்க தெளிவாக, இனிமையாகத் தெரிந்தாலும்..அந்த நீர் சாக்கடைக்கு அருகில் இருக்கும் குழாய் ஒன்றிலிருந்து அப்படியே பிடித்து அடைக்கப் பட்ட கிருமிகள் அதிகம் உள்ள நீர்.இதை அருந்துவதால் தீமைதான் உடலுக்கு உண்டாகும்.அதே போன்றதுதான் சுற்றத்தினர் உட்பகையும்..தீங்கு விளைவிக்கும்.

இதையே உட்பகை என்னும் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்கிறார்...

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்



நீர் என இரு இடங்களிலும், இன்னா என்பது நான்கு இடத்திலும் சொல்லி சொல் விளையாட்டு விளையாடுகிறார் வள்ளுவர்.

இதன் பொருள்- இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்..

அடுத்து இடுகையில் சந்திப்போம்..

6 comments:

Chitra said...

காணாதான்,காணான்,காணாதான்,கண்டானாம்,கண்டவாறு..அடடா..சொல்லழகும்,சொல் விளையாட்டும் ..இந்த ஒன்றே முக்கால் அடியில்..இது வள்ளுவனன்றி வேறு யாரால் முடியும்!!!!


.....உண்மை...உண்மை.... குறள் தேன் இனிமையில், எங்களையும் மூழ்க வைத்ததற்கு நன்றிங்க...

goma said...

குறள்தேன் குடித்தால் மனம் சீராகும் ஒரு நாளைக்கு ரெண்டு டீஸ்பூன்.இரண்டு வேளை

ஹேமா said...

வாழ்வில் அனுபவப்பட்ட சமபவங்களோடு கூடிய குறள்கள்தான்.என்றாலும் 2/3 முறைகள் வாசித்தேன்.நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஹேமா