Thursday, March 5, 2015

குறுந்தொகை-197



தலைவி கூற்று
(பருவ வரவின் கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” என ஆறுதல் கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)


நெய்தல் திணை- கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-


யாதுசெய் வாங்கொ றோழி நோதக
   
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை
   
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய
   
கூதி ருருவிற் கூற்றம்

காதலர்ப் பிரிந்த வெற்குறித்து வருமே.

                             கச்சிப்பேட்டு நன்னாகையார்
                            -
 நோதல் பொருந்தும்படி, நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலியதொகுதியை யுடையனவாகிய,  கார்காலத்தை ஏற்றுக் கொண்ட கிளைத்த மழையையுடைய, ஊதைக் காற்றினது குளிர்ச்சியோடு, மிக மயங்கிக் கலந்த,  கூதிர்க் காலமாகிய உருவத்தையுடைய கூற்றம், தலைவரைப் பிரிந்திருக்கும்என்னைக் கொல்லுதல் குறித்து வாரா நின்றது; யாதுசெய்வாம்--!



    (கருத்து) தலைவர் கூதிர்க் காலத்தும் வந்திலராதலின் இனி உயிர்வாழேன்.

No comments: