Tuesday, July 24, 2018

நாடகப்பணியில் நான் - 13

ரங்காச்சாரி சொன்னது போல அன்று மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கிற்குச் சென்றேன்.

சோ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.என்னை சோ விடம் அறிமுகப்படுத்தி விட்டு ரங்காச்சாரி , அம்பத்தூரில் அவரது சபாவிற்கு நம்ம "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத்தைப் போட தேதி கேட்கிறார் என்றார்.

சோ உடன் என்னிடம் அம்பத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் செய்ய முடியுமா? என்றார்.

நானும் கண்டிப்பாக செய்து தருவதாகக் கூறினேன்

உடன் , அவர் தன் குழுவினைச் சேர்ந்த திரு எஸ் வி சங்கரனிடம் , "என்ன தேதி கொடுத்திடலாமா?" என்றார். பின் ஒரு ஞாயிற்றுக் கிழமை நடத்தித் தருவதாகக் கூறி, ரங்காச்சாரியிடம் தேதி கொடுக்கச் சொன்னார்

அம்பத்தூரில் நாடகம் போட வரும் குழுவினருக்கு சென்னையில் கொடுக்கப்படும் சன்மானத்தைத் தவிர வண்டி வாடகை என அதிகப்படியாகக் கொடுப்பதுண்டு.அதை மனதில் வைத்து நான் , "எவ்வளவு ரெம்யூனரேஷன் கொடுக்கணும்?" என்றேன்.

அதற்கு சோ "நான் கேட்டதைக் கொடுப்பியா..அப்ப பத்தாயிரம் கொடுத்துடு" என்றவர், பின் சிரித்தபடியே ரங்காச்சாரியிடம், சென்னையில் வாங்கும் பணமே வாங்கிக் கொள் என்றார்.

அது எவ்வளவு என நினைக்கிறீர்கள்? ஆயிரம் ரூபாய் அவ்வளவுதான்

நாடகத்தன்று கணக்கில் அடங்காக் கூட்டம்.அதிகப்படியான நாற்காலிகள் போட்டேன்.கிட்டத்தட்ட கேட் கலெக்க்ஷன் இரண்டாயிரம் ஆனதாக ஞாபகம்.

பாதுகாப்பாக 4 போலீஸே வந்து விட்டது.

நாடகம் முடிந்ததும்  சோ, "என்ன சந்தோசமா" என்றார்.மிகவும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினேன்

பின் தொடர்ந்து அவரது நாடகங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டேன்

அப்படிப்பட்ட சோ வும், ஒருமுறை நாடகத்தன்று என்னைக் கூப்பிட்டு கடிந்து கொண்டார்?

அது ஏன்? அப்படி என்ன தவறு இழைத்தேன் நான்..

விவரங்கள் அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: