Saturday, July 28, 2018

நாடகப்பணியில் நான் - 15

"சோ" அவர்கள் என்னைக் கடிந்து கொண்ட நிகழ்ச்சி என்ன? என்ற ஆவலா...சொல்கிறேன்..

அதற்கு முன்..

எனது சபாவின் ஆண்டுவிழா நிகழ்விற்கு, நான் எழுதிய "Wanted a Bridegroom" , நாடகமும்

அடுத்து, திருவல்லிக்கேணியில் தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக நடித்து மக்களால் "சாம்பு"நடராஜன் என்று அழைக்கப்பட்டவருமான நடராஜ ஐயர் அவர்கள் என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.அவர் நாடகங்களில் மேஜர் சுந்தரராஜன் நடித்து வந்தார்.அப்படி நடந்த நாடகங்களில் "டைகர் தாத்தாச்சாரி" என்ற நாடகமும்

மூன்றாவதாக சோ அவர்களின் "நேர்மை உறங்கும் நேரம்" நாடகமும் நடத்துவதாகத் தீர்மானித்தோம்.

எனது நாடகமும், சோ அவர்களின் நாடகமும் அம்பத்தூரிலும், மேஜரின் நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது

ஆண்டுவிழா நாள் என் நாடகம் சிறப்பாய் நடந்தது.அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் மேஜர் நாடகமும் நடந்தது.

மூன்றாம் நாள் சோ நாடகம் அம்பத்தூரில்.

நாடகத்தன்று காரில் வந்து இறங்கியவரை நான் வரவேற்றபோது, சற்றே கோபத்துடன் "என் கிட்டே பேசாதே! சோ உனக்குக் கிள்ளுக்கீரை ஆயிட்டான் இல்ல" என்றபடியே உள்ளே சென்றார்.

ரங்காச்சாரியிடம் காரணம் கேட்டேன்.அவர் "எனக்கு அது எல்லாம் தெரியாதுப்பா" என நழுவினார்.

நாடகம் முடிந்து நான் பணம் கொடுக்கச் சென்ற போது அவர்"நான் ஏன் கோபப்பட்டேன் தெரியுமா? இந்த சோ நாடகம் போட அம்பத்தூர் வரணும், ஆனால் மேஜர் நாடகத்தை சென்னையிலேயே நடத்துவ..இல்ல" என்றார்.

உடனே நான், 'சார்..உங்க நாடகம் இங்கே நடத்தினா எனக்கு கேட் கலெக்க்ஷன் இருக்கும்.ஆனா மேஜருக்கு இருக்காது.அதுவும் மேஜருக்கு அம்பத்தூர் நாடகத்திற்கு பணமும் அதிகம் தர வேண்டும்" என்றேன்.

என் பதிலால் சற்று சமாதானம் அடைந்தவர், எவ்வளவு கேட்? என்றார்.சொன்னேன்..

"சென்னையில் இதைவிட அதிகாக ஆகியிருக்கும்" என்று சொல்லி விட்டு...என் முதுகில் தட்டி"சும்மா கோபப்பட்டேன்..எனக்கு உன் மேல கோபமே இல்லை" என்றார்.

சோ வின் குழந்தை உள்ளத்தைக் கண்டு மகிழ்ந்தேன்

No comments: