Monday, December 9, 2019

இருப்பதும்..இல்லாததும்

1)இருப்பது
இல்லை போலும்
இல்லாதது
இருப்பது போலும்
தோன்றுவது ஏன்?

2)இதயத்திற்கு
சிறகு முளைத்து
பறக்கின்றது

3)மண்ணுக்குள்
மண்ணாய்
மக்கச் செய்யும்
மண்தானே
சிறு விதையையும்
பிரசவித்து
மண்ணில்
மக்களுக்காக
அனுப்புகிறது

Friday, November 22, 2019

ஆதி பகவன் முதற்று உலகு
இறைவனுக்கு
 அடுத்து..
இறைவனுக்கு அடுத்தா..?
ஆம்..
அடுத்தது
அது மழையாகும்
ஆகவேதான்
வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை
அடுத்து
வான் சிறப்பை
வைத்தான்

Monday, November 4, 2019

மழை
அடித்து ஓய்ந்ததும்
மழைத்துளிகள் மீது
கோபம் வரத்தான் செய்கிறது..
யார் அனுமதியுமில்லாமல்
மரத்தின் இலைகளையும்,
பூக்களின் இதழ்களையும்
அனுமதியின்றி
முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக்
காணுகையில்..

Wednesday, October 30, 2019

நிலா முகம்
அதில் சிறுபரு
நிலை கொண்டிருக்கும்
லேண்டர்

Monday, October 28, 2019

சிறகடித்து
பறக்கும்
பறவையைப்
பார்த்திட
பரவசம்..
நம் மீது
எச்சமிடாத வரையில்...

Sunday, August 25, 2019

நாடகப்பணியில் நான் - 1

என் நாடக அனுபவங்களை எழுத வேண்டிய அளவிற்கு, தமிழ் நாடக உலகில் என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி, இத் தொடரை ஆரம்பிக்கும் முன் எனக்குத் தோன்றியது.

அதே நேரம், ஆயிரக்கணக்கான வானரங்களுடன், ஸ்ரீராமன் சேது பாலம் அமைத்த போது, தான் மண்ணில் உருண்டு, அதனால் ஒட்டிய மணலை பாலம் கட்டும் மணலுடன் சேர்த்ததால், தன் முதுகில் ஸ்ரீராமனால் தடவிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அணில்களின் மேல் இன்றும் காணப்படும் கோடுகள் என்று கதை உண்டு.தவிர்த்து,அதுவே, பெரும் காரியங்களில், ஒரு சிறு உதவியினை நாம் செய்தாலும், அணில் பங்கு என போற்றப்பட்டது

 தமிழ் நாடகக் கடலில் ஒரு துளியான நான் என் அணில் பங்கு அனுபவங்களைக் கூறுவதில் தவறில்லை என எனக்கு உணர்த்தியது..

இனி என் அனுபவங்கள்

நாடகம் எனும் போதைக்கு நான் எப்போது அடிமை ஆனேன்.என் எண்ணச் சிறகை நாடக வானில் பறக்க விட்டேன்.

அப்போது என் வயது 11..அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.எங்களது பக்கத்து வீட்டில் ராகவேந்திரன் என்னும் இளைஞர் ஒருவர் இருந்தார்.
அவரை நாங்கள் எல்லாம் "ராகவேந்திர அண்ணா" என்றே அழைப்போம்.அவர் அவ்வப்போது அம்பத்தூர் குப்தா பள்ளியில் நாடகம் போட்டு வந்தார்.அவரது நாடகங்களுக்கு எங்கள் குடும்பம் முழுவதற்கும் இலவச பாஸ்.(அன்றே ஓசியில் நாடகம் பார்க்கத் தொடங்கியது, இன்று வரை தொடர்கிறது)

அவர் ஒருநாள் என்னிடம்,"தம்பி, உனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா?" என வினவினார்.

அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை எனக்கு.உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், படிப்பைத் தவிர வேறு எது செய்தாலும் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் தலையைவலம் இடமாகவும் மேலும் கீழுமாக ஆட்டினேன்.அந்த அண்ணன் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என.

அந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ, ஆனால் என்னிடம், "உங்க அப்பா கிட்ட நானே கேட்கிறேன்" என்றார்.அத்துடன் நில்லாது, எனது தந்தை அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதுமே"சார், உங்க பையனை நான் அடுத்ததாகப் போடப்போகும் நாடகத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்

கோபத்துடன் என்னைப் பார்த்த அப்பா, சாந்தத்துடன் அவரிடம், "படிக்கிற வயசுலே அவனுக்கு இதெல்லாம் வேண்டாம் " என்று சொல்லிவிட்டார்.

அந்த அண்ணனுக்கு  ஏமாற்றம்.எனக்கும் ஏமாற்றம்.கூடவே அம்மாவைப் பார்த்தேன்.அம்மாவிற்கும் ஏமாற்றம் என முகம் சொல்லியது.

தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஆவலை ஏற்படுத்தியதே என் அப்பா, அம்மாவின் ஆதரவு தான்.குடும்பப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையாயினும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கண்ணன், கல்கண்டு என பத்திரிகைகளை வாங்கிக் குவித்தவர்கள் அவர்கள்.அந்த வயதிலேயே, அமரதாராவையும், மலைச்சாரல் மாதவியையும், தில்லானா மோகனாம்பாளையும், உன் கண்ணில் நீர் வழிந்தாலையும் படித்து தேர்ந்தவன் நான் .

இரு நாட்களாக நான் சோகமாக இருப்பதைப் பார்த்த அப்பாவிற்கு என்ன தோன்றியதோ.'உனக்கு நடிக்க ஆசை இருந்தால் , இந்த ஒரு நாடகத்தில் நடி பரவாயில்லை.ஆனால் படிப்பு கெடக்கூடாது" என அனுமதி அளித்தார்

நான் உடனே ஓடிப் போய் , ராகவேந்திர அண்ணனிடம் சொல்ல, அவரின் "பிரேமாவின் சபதம்" என்ற நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.

என்ன பாத்திரம் என் கிறீர்களா. கதாநாயகி பிரேமாவின்..பதின்ம பருவப் பாத்திரம் .

ஆம்..எனது முதல் நாடகத்தில், பெண் வேடம் பூண்டு நடித்தேன்

(தொடரும்)

Monday, August 19, 2019

துனை நடிகை

நாயகியைச் சுற்றி
நடனமாட
துணை நடிகைகள்
துடிப்புடன்...
அவர்கள்
தொப்புளை
நெருக்கத்தில் காட்டுங்கள் - என
இயக்குநர்
இயம்ப
புகைப்படக் கருவி
நெருங்குகிறது அதனிடம்...
எக்ஸ்ரே கருவியெனில்
காலியாய்
இருக்கும்
இரப்பையைக்
காட்டியிருக்கும்

Sunday, July 14, 2019

குறுந்தொகை பாடல் ஒன்று

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே 

(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
(யாய் = என்தாய்; ஞாய் = உன்தாய்; எந்தை = என்தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைநீர்)
முன்பின் தெரியாத ஒருவனிடத்து உள்ளத்தைப் பறிகொடுத்தாள் தலைவி. இவன் நம்மை மணப்பானோ அல்லது விட்டுவிடுவானோ என உள்ளம் கலங்குகிறாள். அவளைத் தேற்றுகிறான் தலைவன்.
“என்தாயும், உன்தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்புலப் பெயல் நீர்போல ஒன்று கலந்துவிட்டன.”
இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. இவ்விரண்டையும் இனிப் பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன், தலைவி காதலையும் பிரிக்க இயலாது. முன்பின் அறியாத் தலைவன் தலைவியின் மனத்தில் நம்பிக்கையை உண்டாக்குவதற்கு அருமையான உவமையைப் பயன்படுத்தி உள்ளது பாராட்டத் தக்கது.

Monday, April 15, 2019

குறள் போற்றுவோம் - 8

உணவும் செரிமானமும்

நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

Friday, April 5, 2019

குறள் போற்றுவோம் - 7

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.
அதைப் பார்த்த பின்னரும்...நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை செய்த அவரை நண்பன் என்ற நிலையில் இருந்து மறந்து விட வேண்டும் என்றுதானே எண்ணுவோம்.
ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஆச்சரியம் என்ன வெனில் நாம் எதைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும், வள்ளுவன் அதைக் குறித்தும்...அதற்கான அறிவுரையும் கூறியுள்ளார்

Wednesday, April 3, 2019

குறள் போற்றுவோம் - 6

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்

Tuesday, April 2, 2019

குறள் போற்றுவோம் - 5


மழை...வாழ்வாதாரங்களில் முக்கியமானது.

இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும்.

மழை.....பெய்யத் தவறினால்....விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்...நதிகள் வேண்டுமானல்..அந்நீரை...தன் புகலிடமான கடலில் கொண்டு சேர்க்கும்.ஆனால்..மக்கள் வாழும் பகுதிகளில்..வெள்ளம் புரண்டோடி உயிர்களில் வாழ்வைக் கெடுத்து..பல உயிர்களை பறித்துச் செல்லும்.

இக்கருத்தை வள்ளுவர் எப்படிக் கூறுகிறார்?

"கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
 எடுப்பதூஉம் எல்லாம் மழை"  - 15

பொருள் - பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

Sunday, March 31, 2019

குறள் போற்றுவோம்-4


யானையின் பலம் எதிலே
தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே
நம்பிக்கையிலே

இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதை

இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.

ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.

பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத் திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.

நம்பிக்கை இழக்கா தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.

பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.

பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.

நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும் நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.

இதையே வள்ளுவர்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

என்கிறார்..

துன்பம் சூழும் போது துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்

Monday, March 25, 2019

குறள் போற்றுவோம் - 3

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை....    -12

இது சாதாரணமாக...திருக்குறள் தெரியுமா?  எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
இக்குறளுக்கான பொருள் என்ன? பார்ப்போம்..

இது என்ன  துப்பாக்கி ..என்கிறீர்களா?

அந்தத் துப்பாக்கி ஏந்தி வரும் அர்த்தம் என்ன?..

இன்று  பருவ மழை பொய்த்ததால்..விளை நிலங்கள் வறண்டு காணப்படுகின்றன.நெல் சாகுபடி செய்வது கடினம்...என்றெல்லாம் படிக்கிறோம்..பார்க்கிறோம்..

மழை...மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத் தர முக்கியமாய் பயன்படுகிறது.

அதே மழை தரும் நீர், மக்களுக்கு குடிநீராகவும் ஆகி..மக்களை வாழ்விக்கிறது.

இப்படி பெரிய தியாகத்தை செய்யும் அம்மழை...நான் அதைச் செய்தேன்..இதைச் செய்தேன் மக்களுக்கு என அரசியல் பண்ணுவதில்லை.இதைத்தான் இக்குறள் சொல்கிறது.

இனி....மேற் சொன்ன குறளுக்கான உரை-

மக்களுக்கு உணவுப்பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ,அவர்களுக்கே அம்மழை அருந்தும் உணவாகும் ஆகிய தியாகத்தையும் செய்கிறது.

(துப்பார்க்கு = உண்பார்க்கு துப்பாய = உணவு ஆகி துப்பு ஆக்கி = உடலை வலிமைப் படுத்துகிறது. துப்பார்க்கு = அனுபவிக்கும் அறிவுள்ளார்க்கு துப்பாய = பொலிவு வலிமையுடன் தூய்மையான உடலையும் உண்டாக்குகிறது. துவும் மழை = தூய்மையாகப் பெய்கிற மழை. சொல் விளக்கம்: துப்பார் = உண்பவர், துப்பு = அறிவு, அனுபவம், உணவு, தூய்மை, நன்மை, பொலிவு, வலிவு; துப்புஆக்கி - என்பதே துப்பாக்கி ஆயிற்று, து =து என்றால் தூய்மை; உம் - ஒரு சிறப்புப் பொருள். முற்கால உரை: உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாவது மழையாகும். தற்கால உரை: உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருளை உண்டாக்கி உண்பவர்க்குக் குடிநீர் என்னும் உணவாகி இருப்பதும் மழையேயாம்)

Tuesday, March 19, 2019

குறள் போற்றுவோம் - 2


அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

Sunday, March 17, 2019

குறள் போற்றுவோம் - 1



ஒருவர் அளவிற்கு அதிகமான எடையுடன் இருந்தார்.எடையைக் குறைக்க, மருத்துவரிடம் சென்றார்.மருத்துவர் அவரை சோதித்துவிட்டு, மருந்துச் சீட்டு எழுதினார்.அதில் எழுதியிருந்த மருந்து, நாவின் சுவையை அடக்கு என்பதாம்.அதாவது உணவைக் குறை என்று பொருள். (புலன் -வாய்)

கண் போன போக்கில் எல்லாம் மனிதன் போகலாமா? என்று ஒரு பாடல் உண்டு.அதாவது, நம் கண்கள் பார்த்து, ஆசைப்பட்டு அதன் வழியில் எல்லாம் நடந்தால், அது சிக்கலில்தான் கொண்டு விடும். கண்கள் பார்த்தாலும், மனம் சிந்தித்து நல்லது, கெட்டது உணர்ந்து செயல் பட வேண்டும்.(புலன் - கண்)

நம்மில் கோபம் ஏற்பட்டால் , இடம் மறந்து..வாயில் வந்ததை எல்லாம் உரக்கக் கூறி, அதுவரை நம்மைப் பற்றி நல்லபடியே நினைப்பவர்கள் எண்ணங்களை மாற்றி விடுவோம்.அது சரியா? பிறர் பற்றி புறம் கூறுவோம்..அது சரியா(புலன்-மெய்)

கெட்டவற்றைக் கேட்காத செவி வெண்டும்.நல்லவற்றையே நாளும் கேட்க வேண்டும்.(புலன்-செவி)

வாசனையைத் தரும் பொருள்கள், உணவு போன்றவைக்கூட ஆசையைத் தூண்டும்.ஆனால் அவை உடலுக்கும், உள்ளத்திற்கும் கேடு விளைவிப்பவை என உணர வேண்டும். (மூக்கு -புலன்)

நமக்கு புலனடக்கம் இல்லாவிடில், நம் பெயர், புகழ், வாழ்வு எல்லாம் கெடும்.மனிதனாய் பிறந்தோர் அனைவருமே..தங்கள் ஐம்புலன்களை அடக்கினால், வையத்தில் சந்தோசமாக வாழ்வாங்கு வாழலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான கருத்தை..ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவனைத் தவிர வேறு யாரால் தரமுடியும்?

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு    (28)

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கி ஆளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும் .

Tuesday, January 29, 2019

தினம் ஒரு தகவல் - 2


வள்ளுவன் வாக்கு

சாதாரணமாகவே. ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக உள்ளவர்களுக்கு சற்று அகந்தை இருக்கும்.

பள்ளியில் நன்கு படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை சற்று (வித்யா)கர்வத்துடன் பார்ப்பான்


உயர் அதிகாரி, தன் கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்கையில், அதைத் தட்டிக் கேட்கும் போது...தான் அவர்களுடன் உயர்ந்தவன் என்ற அகந்தையை அடைவார்.


பக்கத்துவீட்டுக் காரர் கார் வாங்கிவிட்டால், நேற்றுவரை சகஜமாகப் பேசியவர், இன்று கண்டும் காணாமல் போவார்.


இதெல்லாம் சில உதாரணங்களே..


மனிதனாய் பிறந்த அனைவருமே, ஏதேனும் ஒரு கோட்டில் சற்று அகந்தைப் பிடித்தவர்களாகவே இருப்பார்கள்.


மனிதர்களே இப்படியெனில்..அவர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு எவ்வளவு அகந்தை இருக்கும்.அது என்ன அகந்தை? என்பதை வள்ளுவர் சொல்கிறார்.


"நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்துவ் வுலகு"
(இந்த உலகமானது, நேற்றுவரை உயிருடன் இருந்தவனை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் கொண்டதாகும்)

Saturday, January 26, 2019

"பத்ம" விருதும்..கலைஞனும்

இந்த ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும், இவ்விருதுகள் அறிவிப்பு வருகையில் இந்த மாபெரும் கலைஞன் ஞாபகத்தில் வருவான்..

ஆம்..கடைசி வரை தனக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என மனம் வருந்தியவன் அவன்.

ஆம்..அக்கலைஞனின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் இல்லை..

அக்கலைஞன் மாபெரும் நகைச்சுவை கலைஞன் மட்டுமல்ல,சிறந்த குணசித்திர நடிகன், வில்லன்..

அக்கலைஞன் தான் நாகேஷ்.

ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும்

வாழை மரமும் சவுக்கு மரமும்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க
அருமையான வார்த்தைகள்...‬

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:

வானொலிக்காரர்கள் கேட்ட கேள்வி:: நியாயமாக உங்களுக்கு
வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்
கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு
வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது
ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம்
மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்
சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்..

தினம் ஒரு தகவல் - 1 ------------------------------------ (வள்ளுவனின் வாக்கிலிருந்து)


நம் நண்பர்களில் பலர், அவ்வப்போது.."எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் வருகிறது" என்றும், "எனக்கு அதற்குக் கொடுப்பினை இல்லை" என்றும் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பதை நாம் காணலாம்.
உண்மையைச் சொல்வதானால், இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
ஆண்டவன் இருக்கின்றான் என நம்பும் இவர்கள்,அந்த நம்பிக்கையே நம்மை வாழ்வில் உயர்த்திவிடும் என எண்ணாமல்..வாழ்வில் உயர நம்பிக்கையும், அதற்கான உழைப்பும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
தனக்கு இணையாக வாழும் நண்பன், தன்னைவிட வசதிகள் படைத்தவனாய் இருந்தால், தனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் இல்லை என பிதற்றுவர்.ஆனால், அந்த வசதியை அடைய அவன் பட்ட துன்பங்கள், வாழும் நெறி ஆகியவற்றை மறந்துவிடுவார்கள்.,எப்போதும் சோம்பித் திரிவர்.சோம்பல் படுபவன் வாழ்வில் உயர இயலாது.
வள்ளுவர் சொல்கிறார்..
"இலமென் றசையி இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்"
(வாழவழியில்லையே என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி செய்வாளாம்)

Thursday, January 10, 2019

பொங்கலோ பொங்கல்




சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

ஏர் முனைக்கு நேர் எதுவுமே இல்லை..

மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் விவசாயி

இப்படி உழைச்சு அவன் கொடுக்கற

அரிசியையும் பருப்பையும், கரும்பையும்

உழைப்பின்றி

இலவசமாக வாங்கி

பொங்கல் வைத்து

"பொங்கலோ பொங்கல்"

என

கூப்பாடு போடுவது

நியாயமா? நண்பனே!

Sunday, December 30, 2018

2018...திரும்பிப் பார்க்கின்றேன்


(இறைவன் கொடுத்த வரம்" நாடகத்தில் பங்கு பெற்ற நன்பர்களுடன்)
2018

இந்த ஆண்டு எனக்கு எப்படி அமைந்தது...

வாழ்க்கை ஏட்டினை புரட்டுகின்றேன்..

சென்ற ஆண்டு எனது கதை, வசனம், இயக்கத்தில் சௌம்யா குழுவினர் அரங்கேற்றிய "இறைவன் கொடுத்த வரம்" சிறந்த கதைக் கருவினைக் கொண்ட நாடகமாக மைலாப்பூர் அகடெமியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு விருது வழங்கப்பட்டது.

இதே நாடகத்தில் நடித்த ஃபாத்திமா பாபு, பி டி ரமேஷ் சிறந்த நடிகை, நடிகருக்கான விருதினை மைலாப்பூர் அகடெமியினரால் மேற்சொன்ன நாடகத்திற்காகப் பெற்றனர்.

ஆண்டாளைக் குறித்து பிரச்னைப் பேச்சுகள் எழ..."நாச்சியார் திருமொழி"யை நூலாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட "திருமொழி" நூலாக வெளி வந்தது

அமெச்சூர் நாடகங்களின் பிதாமகர் என்றழைக்கப்படும் அமரர் திரு ஒய் ஜி பார்த்தசாரதியின், யூஏஏ குழுவினரின் 66 ஆண்டுகளின் சாதனையை ,ஒய்ஜிபியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் போது நூலாக வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டாக, அதை மகேந்திரனிடம் நான் கூறினேன்.

மகேந்திரனின் ஒப்புதல்களுடன்,நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் திரைப்பட நடிகர் சிவகுமார் "யூஏஏ எனும் ஆலமரம்" என்ற பெயரில் நூல் வெளியானது.

2008ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற "மாண்புமிகு நந்திவர்மன்:" எனும் அரசியல் நையாண்டி நாடகத்தை "மீண்டும் நந்திவர்மன்" என ரசிகர்கள் எண்ணும் படியாக நாடகமாக்கி மேடையேற்றினேன்

நண்பர்கள் அம்பி ராகவன், கிரீஷ் வெங்கட்ஆகியோர் புதிதாக நாடகக் குழுவினை ஆரம்பித்தனர்.தமிழ் நாடகங்களில் இளைஞர்கள் பங்கு அதிகமாக ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தபடியால்..இவர்களை ஊக்குவிக்கும் முறையில் "பௌர்ணமி நிலவில்" என்ற நாடகத்தை இவர்களுக்காக எழுதி அவர்களையே இயக்கச்சொன்னேன்.. 

2018ல் என்னால் நாடக உலகிற்கு செய்ய முடிந்தது இவைதான்.

2019ல்..

நிறைய செய்ய ஆவல் உள்ளது..
பார்ப்போம்...எந்த அளவில் மனமும்..உடலும் ஒத்துழைக்கப் போகிறது என்று..

2018ஏ உனக்குப் பிரியா விடை அளிக்கின்றோம்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிகிறோம்..
2019ஏ உன்னை அன்புடன் வரவேற்கின்றோம்.

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Thursday, December 27, 2018

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

4-1-19ஆம் நாள் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.அதில் நீங்கள் வாங்க வேண்டிய நான் எழுதியுள்ள புத்தகங்களின் வரிசை - 1
"திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்"

வைணவத்தில் இவ்வளவு விஷயங்களா? என நம்மை வியக்கவைக்கும் விவரங்கள் அடங்கிய புத்தகம்.அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.


இந்த புத்தகம் பற்றி தினமணியில் வந்துள்ள விமரிசனம்
--------------------------------------------------------------------------------------- 
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் - டி.வி.ராதாகிருஷ்ணன்;  பக். 120; ரூ.80; வானதி பதிப்பகம், சென்னை-17. 
திவ்யதேசம் நூற்றி எட்டினுள் ஒன்று திருக்கோளூர்.  நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்த ஊருக்கு ஒருமுறை ஸ்ரீராமானுஜர் செல்லும் போது,  அவ்வூரிலிருந்து பெண்மணி ஒருத்தி அவ்வூரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துக் காரணம் கேட்கிறார்.

"காரணம், ஒன்றா இரண்டா? முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன? ' என்று கூறும்  அப்பெண்மணி,  அருளாளர்கள் 81 பேரின் அருஞ்செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி,  ""இவர்களைப் போல நான் எதையும் செய்யவில்லையே... எனக்கு இந்த ஊரில் வசிக்க என்ன தகுதி இருக்கிறது?'' என்கிறாள். அவள் கூறிய காரணங்கள் ஒருசிலவற்றைப் படிக்கும்போதே  நமக்கும் ஒருவித ஏக்கம் பிறக்கிறது.
"ஆண்டாளைப் போல சிறு வயதிலேயே ஞானம் பெற்று எம்பெருமானை நான் அடையவில்லையே'; "வசுதேவர் கண்ணனிடம் ஆழியை மறைத்துக்கொள்ளச் சொன்னவுடன் எம்பெருமானும் மறைத்துக் கொண்டாரே... அந்த பாக்கியத்தை நான் செய்யவில்லையே'; "ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்களே. அந்த அளவிற்குப் பெருமை வாய்ந்த யசோதையாக நான் இல்லையே'; 
"ஸ்ரீராமன் பாதம் பட்ட அகலிகையாக நான் இல்லையே...'; "தொண்டைமானைப் போல  நான் பக்தியில் சிறந்தவளாக இல்லையே...'; "கூனியைப் போல கண்ணனுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா, இல்லையே...'; "கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல் (முனிபத்தினி) நானும் உயிரை விடவில்லையே'; "விதுரரைப் போல அகம்  ஒழிந்து விடவில்லையே... (இறைவன் மனதில் குடியேறினால் அகம் (அகங்காரம்) ஒழிந்துவிடும்) அதனால் இவ்வூரை விட்டுச் செல்கிறேன்'' என்கிறாள். வைணவர்கள் மட்டுமல்லர், எம்பெருமானை பக்தி செய்வோர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ரகசியம் இந் நூல். 

Wednesday, December 26, 2018

பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேற்தல் முடிவுகள் குறித்து  செய்திகள் தரும் ஊடகங்களும் சரி, கட்சிகளும் சரி சரியான தகவல்களைத் தருவதாக நான் எண்ணவில்லை.

அவை கண்டிப்பாக பி ஜே பிக்கு பின்னடைவுதான்.ஆனால் சரிவு அல்ல.

எந்த மாநிலமாயினும் சரி.. சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக பெரும்பாலும் இருப்பதில்லை.அப்படிப்பட்ட நிலையில் மத்தியபிரதேசத்திலும் அந்நிலை காணப்படுவதில் ஆச்சரியமில்லை.மேலும்..வாக்குகள் சதவிகிதமும் வென்ற அணிக்கும், தோற்றவர்களுக்கும் பெரும் சதவிகிதத்தில் இல்லை.ராஜஸ்தானிலும் இதே கதைதான்.

இன்றைய நிலையில், வலுவான கூட்டணி யார் அமைக்கிறார்களோ அந்தக் கூட்டணியே வெல்லும் என்ற நிலைதான்.

பாராளுமன்றத் தேர்தல் எனும் போது...சட்டசபைத் தேர்தலுக்கான மக்களின் மனப்பாங்கு மாறக்கூடும்.சென்ற சில தேர்தல்களில் கூட நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.

உண்மைநிலை என்னவெனில்...இன்றைய நிலவரப்படி காங்கிரஸ் பெரியதாக வளரவும் இல்லை..பி ஜேபி பெரிதாகத் தேயவுமில்லை.

இம்முறை எந்த ஒரு தனிக்கட்சியும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தோன்றவில்லை.

பெரும்பாலான இடங்களை வென்ற அணி...கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

மீண்டும் தேவகௌடாக்களுக்கும்,சந்திர சேகர்களுக்கும், குஜரால்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் வரலாம்


Saturday, December 22, 2018

வள்ளுவன்

வள்ளுவனின் ஒவ்வொரு குறளிலும்ஆழ்ந்த அரத்தம் இருக்கும்.
உதாரணத்திற்கு இந்தக் குறளைப் பாருங்கள்..

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"

ஒருவருக்குத் தீக்காயம் ஏற்படுமேயாயின்..அது ஆறக்கூடியதாயினும், ஆறியபின் அதன் வடு உடலில் இருக்கும்.

ஆனால்..ஒருவரை, மற்றவர் காயப்படும்படி பேசினால், அப்படிப் பேசப்பட்ட பேச்சு காலப்போக்கில் இருவரும் மற
ந்துவிடுவார்.ஆனாலும், .தீயினால் சுட்ட வெளி வடு போல அல்லாது..மனத்திற்குள் அவ்வடு காயப்பட்டவர் மனதில் ரணமாய் ஆறாமல் என்றுமிருக்குமாம்.

தீக்காயம் ஆறும் ஆனால் வடு மறையாது
மனக்காயம்  வடு இன்றி மறைந்தாலும், அதனால் ஏற்பட்ட ரணம் உள்ளே ஆறவே ஆறாது.

ஆகவே..மறந்தும்எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனது புண்படும் வார்த்தைகளை பேசிவிடக் கூடாது.

Friday, December 14, 2018

சாகித்ய அகடெமி விருதுகள்

இந்தக் கட்டுரை "சாகித்ய அகடெமி" விருதுகள் பற்றியோ அல்லது அதைப் பெற்றவர்கள் தகுதிகள் குறித்தோ எழுதப் பட்டதல்ல என்பதை மனதில் இருத்திக் கொண்டு படிக்கவும்.

இந்த ஆண்டு சாகித்ய அகடெமி விருது பெற்றவரின் நாவல்  2014 ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பட்டது.

விருது பெற்றவர் பெயர் வெளியாவதற்கு முன் சில பிரபல எழுத்தாளர்கள் பெயர்கள் உலா வந்தன..

எனக்கு எழுத்துள்ள சந்தேகம்..

1)தேர்வுக்கான எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்த பின் அவர் எழுதியுள்ள நாவல்களைப் படித்து (எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை என)தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா?

2)அல்லது பிரசுரமாகியுள்ள அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை , அது பதித்து எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என பார்க்கப்படுகிறதா? (இது சாத்தியமில்லை)

3)இல்லை..விருதிற்காக சில எழுத்தாளர்களின் எழுத்துகளே படிக்கப் படுகிறதா?


பின் எப்படி ஒரு எழுத்து 4 ஆண்டுகளுக்குப் பின் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறது?அத்ற்குப் பிறகு இந்த எழுத்தாளர் எவ்வளவோ எழுதி விட்டாரே!

மேலே சொன்ன முதல் காரணப்படி எனில், பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் இவர்கள் கண்களில் படாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாயிற்றே!

விவரம் அறிந்தவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்களா?

Thursday, December 6, 2018

அடுத்தவீட்டு ஜனன்ல் - 17

_________________
எஸ்.ராதாகிருஷ்ணன்  (ராது)
____________________________

1962ஆம் ஆண்டு..இந்திய-சீன யுத்தம் நடக்கிறது.மக்கள் தங்களால் ஆன நன்கொடைகளை யுத்தநிதியாக வழங்கி வருகின்றனர்,
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னைக் கிளையும் ஒரு நாடகம் நடத்தி யுத்தநிதியினைத் திரட்ட நினைத்தது.
இதுநாள்வரை பிற நாடகக் குழுக்களின் நாடகங்களைக் கண்டு ரசித்து வந்த ரிசர்வ் வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணன்  'ஜெயம் நமதே"என்ற நாடகத்தை எழுதினார்.இது இவரின் கன்னி முயற்சி.
இவரே, பினனாளில் நாடக உலகில் ராது என அறியப்பட்ட பெரும் சக்தியாய் திகழ்ந்தார்.
தன் நண்பர்களுடன் சேர்ந்து "கீதா ஸ்டேஜ்" என்ற குழுவினை ஆரம்பித்தார் ராது. இன்றும் மக்களால் மறக்க முடியாத 45 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்ட "கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
இவரது அடுத்த நாடகம் "வாய்ச்சொல்லில் வீரரடி"
இந்நிலையில், ஆனந்த விகடனிலும் பின்னர் இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையிலும் ஆசிரியராய் இருந்த மணியன், "மயன் தியேட்டர்ஸ்" என்ற குழுவினை ஆரம்பித்து அதை ராதுவிடம் ஒப்படைத்தார்.
"சப்தஸ்வரங்கள்" நாடகம் அரங்கேறியது.அதில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ தங்கவேலுவும். எம் சரோஜாவும் நடித்தனர்
இவரால் நாடக மேடைக்கு வந்தவர்கள் ஏராளம்.காத்தாடி ராமமூர்த்தி, வி.கோபாலகிருஷ்ணன், நவ்ரங் விசு,அறந்தை மணியன் ஆகியோர் இவர் குழுவில் நடித்தவர்கள்

1983ல் ஒரே நாளில் "கல்யாணத்தில் கலாட்டா" நாடகம் எட்டு முறை நடத்தப் பட்டு லிம்கா புக் ஆஃப் ரிகார்ஸில் இடம் பெற்றது.தவிர்த்து ஒரே நாடகம் பத்து முறை நடந்து மீண்டும் ரிகார்ட ஆனது
1992ல் இவரது 15 நாடகங்கள் ஒரே நாளில் நடந்துள்ளன
எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினரால் நடத்தப்பட்டு, பி எஸ் ராமையா எழுதிய "போலீஸ்காரன் மகள்",. "பிரஸிடெண்ட் பஞ்சாட்சரம்" ஆகிய நாடகங்களை 1992ல் ராது மீண்டும் நாடகமேடையேற்றினார்.
தன் குழுவினரைத்தவிர, தில்லை ராஜன், நவ்ரங் விசு,அமிர்தம் கோபாலின் கீதாஞ்சலி ஆகியோருக்கும்  இவர் நாடகம் எழுதித் தந்துள்ளார்
நவ்ரங் ஆர்ட்ஸிற்கு இவர் எழுதித்தந்த . "மை டியர் குட்டிப் பிசாசு".தரை தட்டிய கப்பல்" "மண்ணில் தெரியுது வானம்" ஆகிய நாடகங்களும், தில்லை ராஜனுக்கு எழுதிய , "பாவ மன்னிப்பு",  ஆகியவை மறக்க முடியா நாடகங்கள்.
தவிர்த்து, நாடக அகடெமி என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, பல நாடகக்குழுக்களின் நாடகத்திற்கு வாய்ப்பளித்தார்
தமிழக அரசின், "கலைமாமணி" விருது பெற்ற ராதுவின் கலைப்பணி அளப்பரியது
2009ல் நம்மைவிட்டுப் பிரிந்த இவரது சேவையைத் தொடர்ந்து இவரது மகள் பிரியா,மருமகன் கிஷோர் ,பேரன் அம்பரீஷ் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்   

Sunday, December 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 16

கே.விவேக் ஷங்கர்
------------------------------

2000ஆம் ஆண்டு விவேக் ஷங்கர் என்ற திறமைமிக்க இளைஞர் ஒருவர் பிரயத்னா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை, அமரர் வி.கோபாலகிருஷ்ணனின் நினைவு நாளன்று (29-4-2000) துவக்கினார்.
தனக்கென ஒரு தனிப்பாணியுடன் நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதே நாட்களில் அரங்கேற்றினார்.

நரேந்திரா,ID, நதிமூலம் ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார்.பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் அஃப்சர்,கௌஷிக், கிரீஷ் ஆகியோர் இவர் நாடகங்கள் மூலம் நாடக நடிகர்கள் ஆனார்கள்

மற்றொரு திறமை மிக்க நடிகரான திரு TDS என்று அழைக்கப்பட்ட சுந்தரராஜனை (காத்தாடியின் நாடகக் குழுவின் ஆரம்பகால நடிகர்) தன் நாடகங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க வைத்தார்.தவிர்த்து காத்தாடியின் குழுவினருக்கு இரு நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

"பிரம்மேந்திரர்" இவரது சமீபத்திய நாடகம்.இதில் கிரீஷ் அய்யப்பன் பிரம்மேந்திரராகவே வாழ்ந்திருப்பார்.

விவேக் ஷங்கர் 2014ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு ஸ்தாபனத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நகைச்சுவை நாடகங்களை சிட்னி நகரில் புதிதாக அரங்கேற்றினார்.

மேலும் :ஷ்ரத்தா: நாடகக்குழுவினருக்காக "தனுஷ்கோடி" என்ற நாடகத்தை எழுதி இயக்கி இருந்தார்.இந்நாடகத்தில் மழைக்காட்சிகளை தத்ரூபமாக அமைத்தார்.லாரிகளில் தண்ணீர்  கொணர்ந்து, மேடையின் பின்புறம் நிறுத்தி..சுழற்சி முறையைப் பயன் படுத்தி...மேடையில் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு மேலாக மழையைக் காட்டி சாதனையை உண்டாக்கினார்.

மேடையில் ஒரு சுனாமி என்ற பெயரில் 10-11-2010  அண்ரு விகடனில் வந்த அவரது இந்த விமர்சனம் ஒன்றே இவர் திறமையை நிரூபிக்க போதுமானது.

சுற்றி சுழன்றடிக்கும் சுனாமி, இடைவிடாமல் கொட்டும் மழை, அவ்வப்போது உறுமும் புயல்காற்று…. இவை அனைத்தையும்  ஓரு நாடக மேடையில் கொண்டு வர முடியுமா?… “முடியும்” என்று நிரூபித்து இருக்கிறது ஸ்ரத்தா நாடகக் குழுவின் ‘தனுஷ்கோடி’ நாடகம்!
பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியை புயல் விழுங்கிய பின்னனியில், நகைச்சுவையும் த்ரில்லரும் கலந்த கதை.  ஒரு கண்டிப்பான வங்கி அதிகாரி, அதே வங்கியின் மற்றொரு கிளையில் பணிபுரியும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறார். தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக் கோருகிறார் அந்த ஊழியர். மறுக்கிறார் அதிகாரி.  உடனே, ஆஸ்துமா நோயாளியான அதிகாரியை கட்டிப் போட்டு மிரட்டுகிறார் ஊழியர்.  அதிகாரியின் நண்பர், ஒரு போலீஸ் ஏட்டு, ஒரு காதல் ஜோடி….இவர்கள் மூலம் அந்த அதிகாரி எப்படி மீட்கப்படுகிறார் என்பதே கதை.
ஒரே செட்டில் கதை நடப்பது புதிது அல்ல.  ஆனால், பெரியதொரு வீட்டிலும், அதைச் சுற்றியும், அதன் தாழ்வாரங்களிலும் உட்புறத்திலும், இடைவிடாமல் மழை ஒழுகுவதும், இடியும் மின்னலும், ஒலியும் ஒளியுமக அரங்கத்தையே கிடுகிடுக்க வைப்பதுமான தொழில்நுட்பத்தை இத்தனை சீராக இதுவரை எந்த நாடகமும் தந்தது இல்லை.
சுவையான, கெட்டிக்காரத்தனமான காம்பியர் போல கதையை நடத்திச் செல்லும் காத்தாடி ராமமூர்த்திக்கு ஸ்பெஷல் பாராட்டு.  ஆஸ்துமா நோயாளியான டி.டி. சுந்தர்ராஜன், குறும்புக்கார இளைஞனாக கெள்சிக் ஆகியோரின் நடிப்பு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.
இழுத்துக் கட்டப்பட்ட ஸ்வரக் கம்பியை மீட்டுவது போல, தொட்ட இடம் எல்லாம் தொடர் சஸ்பென்ஸ்.  ஒரு சாதுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி, வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாலாஜி.  கதையையும் உயிரோட்டமாக உள்ளே சஞ்சரிக்க வைத்த இயக்குநர் கே. விவேக்சங்கருக்கு வாழ்த்துக்கள்.  தனுஷ்கோடியில் இடி மழையுடன் கடல் பொங்கி வந்து கதவைத் தட்டுவதை கண் முன்னே காட்டிய ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ பாலச்சந்தர் கவனிக்கப்பட வேண்டியவர்.
அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலர் தாங்கள் நனைந்துவிட்டோமோ என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் வெற்றி

Thursday, November 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 15

-------------------------
எஸ் வி சஹஸ்ரநாமம்
--------------------------------


டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகக் குழுவையும், அதில் அற்புதமாக நடிக்கும் டி.கே.சண்முகம் நடிப்பையும், அதற்கு மக்களிடம் இருந்து கிடைத்த கை தட்டல்களும் கண்டு நாடகங்கள் மீது தீராத மோகம் கொண்டான் அந்தச் சிறுவன்.

பொள்ளாச்சியில் அவனது பெரியப்பா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 வயதே ஆன அச் சிறுவன், அருகில் உள்ள கோவைக்கும் டி.கே.எஸ்., குழுவினர் வந்துள்ள சேதி கேட்டு...அவர்களைக் காண ரயிலேறினான்.

அந்தக் காலத்தில் நாடகத்தில் நடிப்பது மிகவும் சிரமமான காரியம்.நாடகக் குழுவில் ஒருவன் இருக்கிறான் என்றால், அவனுக்கு மூன்று கலைகள் தெரிந்திருக்க வேண்டும்.

உயர்வு..தாழ்வு பாராது எல்லா வேலைகளையும் முகம் சுளிக்காது செய்ய வேண்டும்.
ஊருக்கு ஊர் குழுவினர் மாறும்போது, அனைத்து காட்சிப் பொருள்களையும் மூட்டை..மூட்டையாய்க் கட்டிக் கொண்டு ஊருக்கு பயணிக்கத் தயாராய் இருக்க வேண்டும்
இவ்வளவு செய்தாலும் நிரந்தர வருமானம் என எதுவும் கிடைக்காது என உணர்ந்திருக்க வேண்டும்

பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சேர்ந்த பையனைத் தேடி வந்த அவனது தந்தை, "உனக்கு படிப்பு வேண்டுமா? இல்லை நடிப்பா?" என வினவ..சற்றும் தயக்கம் இல்லாது பையன், "நடிப்புத்தான் வேண்டும்" என்றான்.

பையனின் உறுதியைக் கண்ட தந்தை"சரி..உன் தலையெழுத்து அப்படியெனில் அதன் படியே நடக்கட்டும்" என்று கூறி சென்றார்,

அந்தச் சிறுவனே எஸ்.வி.சஹஸ்ரநாமம் ஆவார்,கோவை சிங்கானல்லூரில் 29-11-1913ஆம் ஆண்டு பிறந்தார்.

நாடக நுணுக்கங்களை அக்குழுவில் இருந்த போது கற்றார்.தனது நாடகப் பயிற்சியின் குருநாதராக அவர் எம்.கந்தசாமி முதலியாரிடம் பயின்று மூன்றே மாதங்களில் "அபிமன்யூ சுந்தரி" என்ற நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

வீரபத்திரன் என்ற நடிகரிடமிருந்து பாடல் கற்றார்.சங்கீத மேதை சம்பந்த மூர்த்தி ஆச்சாரியரிடம் ஹார்மோனியம் கற்றார்.மேடை அமைப்பில் தேர்ச்சிபெற்றவராய் இருந்தார்.

அதனாலேயே..சென்னையில் கட்டப்பட்ட "ராஜா அண்ணாமலை மன்றம்". "ராணி சீதை ஹால்", "கலைவாணர் அரங்கம்" ஆகியவை அவரது ஆலோசனையின் படியே கட்டப்பட்டன.

நாடகத்திற்காகவே வாழ்ந்தவர்களில் சஹஸ்ரநாமமும் ஒருவர் ஆவார்.பாரதியாரிடம் ஈடுபாடு கொண்ட இவர்...பாரதியின் வார்த்தைகள் இப்படி மாற்றி தன்னைப் பற்றிக் கூறினார்.

"எனக்குத் தொழில் நாடகம்.நாட்டுக்கு உழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என.

இவரது சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் நடித்து..பின் பிரபலமான நடிகர்கள் பட்டியல் நீண்டது.அதில் சிலர்...

சிவாஜி, முத்துராமன்,குலதெய்வம் ராஜகோபால்,வி.கோபால கிருஷ்ணன்,சத்தியராஜ்,பி.ஆர்.துரை,எஸ்.என்.லட்சுமி,எம்.என்.ராஜம்,பண்டரிபாய்,தேவிகா, மைனாவதி,ஜி.சகுந்தலா,ஏ.கே,வீராச்சாமி,ஏ.வீரப்பன், கம்பர் ஜெயராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், காந்திமதி...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

இவரது குழுவின் நாடகங்கள் சில...

என்.வி.ராஜாமணி எழுதிய "கண்கள்", "இருளும் ஒளியும்"
தி ஜானகிராமனின், "நாலு வேலி நிலம்'
பி.எஸ்.இராமய்யாவின், "மல்லியம் மங்களம்"
குஹனின் "புகழ்வழி"
கல்கி எழுதிய , "மோகினித் தீவு"
பாரதியாரின் , "பாஞ்சாலி சபதம்"(கவிதை நாடகம்)
சேவாஜ்ஸ்டேஜ் கடைசியான நாடகம் பி.எஸ்.இராமய்யா எழுதிய "தேரோட்டி மகன்" ஆகும்.

1957ல் சேவா ஸ்டேஜ் , நாடகக் கல்வி நிலையம் என ஒன்றை நிறுவி, பாடத்திட்டங்களை வகுத்து மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வி வழங்கியது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் இந்த நிலையத்திற்கு 3000 ரூபாய் மானியம் வழங்கியது

தனது சகோதரி மகன் வி.என்.ராஜாமணியின் உதவியோடு தாகூரின் கதையை "கண்கள்" என்ற தலைப்பில் நாடகமாக்கினார்
நார்வேவைச் சேர்ந்த  ,எழ்த்தாளர் இப்சன் நாடகங்களால் கவரப்பட்டு "எனிமீஸ் ஆஃப் பீப்புள்ஸ்" என்ற நாடகத்தை மக்கள் விரோதி என்ற பெயரில் நாடகமாக்கச் சொன்னார்

1974 மார்ச் மாதம் முதல் 1988 ஃபெப்ருவரி வரை ஐந்து முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.கிருஷ்ணமணி என்பவர் எழுதிய  "நந்தாவிளக்கு" என்ற நாடகத்திற்கான ஒத்திகைக்கு 21-2-88 அன்று வரச்சொல்லி நடிகர்களுக்கு செய்தி அனுப்பியவரின் உயிர் 19-2-1988 மாலை 4-30 அளவில் பிரிந்தது,

எஸ்.வி.எஸ்., அவர்களுக்கு தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பான இடம் உண்டு.

இன்று இவரது மகன் எஸ்.வி.எஸ்.குமார், தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் கலைப்பணியாற்றி வருகிறார். 

Saturday, November 24, 2018

வள்ளுவன் வாக்கு - 3

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.
அதைப் பார்த்த பின்னரும்...நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை செய்த அவரை நண்பன் என்ற நிலையில் இருந்து மறந்து விட வேண்டும் என்றுதானே எண்ணுவோம்.
ஆனால் வள்ளுவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதில் ஆச்சரியம் என்ன வெனில் நாம் எதைக் குறித்து எழுத வேண்டும் என எண்ணினாலும், வள்ளுவன் அதைக் குறித்தும்...அதற்கான அறிவுரையும் கூறியுள்ளார்
ஆகவே தான் திருக்குறள் "உலகப் பொதுமறை" எனப் போற்றப்படுகிறது

Thursday, November 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 14

--------------------
பூவை மணி
-----------------------

30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாடகப் பணியினை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அடக்கமாக செய்து வருபவர் பூவை மணி ஆவார்

இவர் பல வெற்றிநாடகங்களை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.

என் நினைவு அடுக்குகளில் இருந்து...சிலசெய்திகளை அவர் வீட்டு ஜன்னல் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

கீத்மாலிகா என்ர குழுவினருக்காக அவர் எழுதிய சில நாடகங்கள்..

"சபையிலே மௌனம்",

"எங்கள் வீடு கோகுலம் "
(இந்நாடகத்தில் திரைப்பட நடிகை சி ஐ டி சகுந்தலா அவர்கள் நடித்தார்)

"மௌனமான நேரம்", "சாட்சிகள் இல்லையடி பாப்பா""கண்மணியே பேசு", "கற்பூர பொம்மை ஒன்று"

பின்னர் தில்லை ராஜனின் நாடகமந்திர் குழுவிற்காக "ஒரு பொம்மலாட்டம் நடக்குது" நாடகத்தை எழுதினார்

கீத்மாலிகா,கலைவாணி, கீதாஞ்சலி ஆகிய குழுக்களுக்கு இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

இவர் எழுத்தில் வந்த அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களாக அமைந்ததே இவர் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்

"இன்னொரு சீதை" "தவம்"ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் பங்கு உண்டு.இவற்றிற்கு வசனம் இவரே!

2017ல் இவரது "உறவோடு விளையாடு" நாடகம் கோடை நாடக விழாவில் ஒன்பது விருதுகளையும், மைலாப்பூர் அகடெமியின் 3 விருதுகளையும் பெற்று தந்துள்ளது

2018ல் "விளையாட்டு பொம்மைகள்" ஐந்து விருதுகளைப் பெற்று தந்துள்ளது. இவ்விரு நாடகங்களிலும் நடித்த கிரீஷ் அய்யப்பன், கௌதமி ஆகியோர் சிறந்த நடிகர்/நடிகை விருதினைப் பெற்றனர்.

பூவை மணிக்கு தமிழ் நாடக உலகம் 30க்கும் மேற்பட்ட விருதுகளை சபாக்களின் மூலமும், சமூக நிறுவனங்கள் மூலம் பெற்று தந்துள்ளது.

பிரபல தமிழ் எழுத்தாளர் "பூவை" ஆறுமுகத்தின் மகனான, "பூவை" மணியின் "கற்பூர பொம்மை ஒன்று" மற்றும் "சபையிலே மௌனம்" "உறவோடு விளையாடு" ஆகியவை நூல்களாக வெளிவந்துள்ளன.


அடுத்தவீட்டு ஜன்னல் - 13 (பகுதி-2)

------------------------
இளங்கோ குமணன்
--------------------------------

S S International (live) நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன்..இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே தமிழ் நாடக உலகிற்கு அறிமுகமானவர்.பாம்பே கண்ணனின், "நாடகக்காரன்" குழு மூலமாக அறிமுகமாகி.முதலில் சிறு பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பெரிய பாத்திரங்களிலும்..அடுத்து நாயகனாகவும் நடித்தவர்.பாஸ்கி அவர்களின் ஒரு நாடகத்தில் இரட்டை வேடம் தாங்கி நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் நிறுவனம் மூலம் மீண்டும் நாடக உலகிற்கு வந்திருக்கும் இவர், சென்ற ஆண்டு எழுதி, இயக்கி, அரங்கேற்றிய நாடகம் காஞ்சி மகாபெரியவாளின் நூறாண்டு வாழ்க்கை வரலாற்றைப் பேசும் "தெய்வத்துள் தெய்வம்" நாடகம் ஆகும்.காஞ்சி மடத்தின் ஒப்புத்லுடன் நடைபெற்ற இந்நாடகத்தில் 108 கலைஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நாடக அரங்க அமைப்பை ஏற்றவர் பிரபல் ஆர்ட் இயக்குநர் தோட்டா தரணி ஆவார்,இந்நாடகத்திற்கு இசையமைத்தவர் மாண்டலின் யு.ராஜேஷ்.அருணா சாய்ராம், குருசரண் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.

இந்நாடகத்திற்காக இரண்டு பாடல்களை குமணன் எழுதியதுடன் நில்லாது, முக்கிய வேடம் ஒன்றினையும் ஏற்று நடித்தார்.

மிகப்பிரம்மாண்டமான படைப்புகளையேத் தர வேண்டும் என எண்ணும் இவரின் கனவு "மகாபாரத"த்தையும் அதே போன்று மேடையேற்ற வேண்டும் என்பதுதான்.

அவர் எண்ணம் நிறைவேற்ற வாழ்த்துவோமாக.

அடுத்தவீட்டு ஜன்னல் - 13

இளங்கோ குமணன்
----------------------------------

ஒரு எழுத்தாளர்/இயக்குனர் படைப்புகள் பற்றி, அந்த எழுத்தாளரோ/இயக்குனரோ பேசக்கூடாது.அவர்கள் படைப்புகள் பேச வேண்டும் என்பார் "இளங்கோ" குமணன்

இந்த "இளங்கோ" குமணன் தமிழ் நாடக உலகின்  பெருமையை பரப்ப வந்த தாமதமான வரவு என்றாலும், முக்கியமான வரவாகும்

எஸ் .எஸ் ஈன்டெர்னேஷனல் (லைவ்) (S S International (live) என்னும் விளம்பர நிறுவனம் 2014ல் , தங்கள் முதல் படைப்பாக கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாடகத்தை  Magic Lantern  குழ்வினரை வைத்து அரங்கேற்றினர்.

80க்கும் மேற்படட் கலைஞர்கள், அரங்க அமைப்பு தோட்டா தரணி.பால் ஜேகப் அவர்களின் நேரடி இசை என நான்கு மணி நாடகமாக இருந்தது இது.

மேடையிலேயே உண்மையான வாள் சண்டை காட்டப்பட்டது.
நாடகக் காவலர் மனோகருக்கு இணையான அளவிற்கு பிரம்மாண்டத்தை இவர்கள் மேடையில் காட்டினர் என்றால் மிகையில்லை.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும் இந்நாடகம் நடத்தப்பட்டது.

திரைப்பட பிரபலங்கள், பசுபதி, குமரவேள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

குமரவேல் நாடகமாக்கம் செய்திருந்த இந்நாடகத்தை லாண்டன் ப்ரவீன் இயக்கி இருந்தார்

அடுத்து இவர்களின் அரிய படைப்பாக "பாலக்காடு மணி ஐயரின்" வாழ்க்கை வரலாறு "மணியோசை" என்ற பெயரில் மேடை நாடக மாக அறங்கேறியது.இந்நாடகமும் (இதை நாடகம் என்று சொல்லலாமா? எனத் தெரியவில்லை) ஒரு புதுமைப் படைப்பாக அமைந்தது.

கர்நாடக இசைக் கலைஞர்கள், நித்யஸ்ரீ மகாதேவன்,சுதா ரகுநாதன், சௌம்யா,விஜய் சிவா, குருசரண்,அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர் குமார்,உமாசங்கர் மற்றும் பல கலைஞர்கள் இணைந்து இந்நாடகத்தில் நாடகக்கலைஞர்களாக மாறி இந்நிகழ்ச்சியை வெற்றியடைய வைத்தனர்.

இந்நாடகத்தை, எம்.ஆர்.ராஜாமணியின் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸிற்காக "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகத்தை எழுதித் தந்தவரும் (இந்நாடகம் பின்னர் சிவாஜி நடிக்க அதேபெயரில் வெள்ளித்திரைக்கு வந்தது), விசு அவர்களின் "அரட்டை அரங்கம்" நிகழ்ச்சியை இயக்கியவருமான "குரியகோஸ்" ரங்கா எழுதி, இயக்கி இருந்தார்.

(இவர்கள் வீட்டு ஜன்னல் பார்வை தொடரும்)

Wednesday, November 21, 2018

தென்னம்புள்ள... (கிறுக்கல் கவிதை)



புள்ள இல்லேன்னா
என்ன
இந்தப் புள்ள
இருக்குன்னு
இறுமாப்பிலே
இருந்தான்
இசக்கி
அவன்
எண்ணத்திலே
மண்ணைப் போட்டுட்டான்
இந்தப் புள்ளயும்
பிள்ளைகளில்
புள்ளயும் - தென்னம்
புள்ளயும்
ஒண்ணுதேன்னு
ஆகிப் போச்சே!


Sunday, November 18, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் -12 (பகுதி - 1)

-----------------------
"கிரேசி" மோகன்
------------------------------

நடிகர்,நாடக எழுத்தாளர், திரைக்கதை-வசனம் எழுதுபவர்,நாடகத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ரங்காச்சாரி மோகன் ஒரு பொறியியல் பட்டதாரி.தமிழில் வெண்பா எழுதும் திறனைப் பெற்றவர்

சுந்தரம் கிளேட்டனில் சிறிது காலம் வேலை செய்து வந்தார்.அத்தருணம், இவரது எழுத்துத் திறமையைக் கண்டு வியந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், இவரை திரையுலகிற்கு அழைக்க, மோகனால் வேலைப்பளு காரணமாக அதை ஏற்க இயலவில்லை.

மோகன், கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, 1972ஆம் ஆண்டு கல்லூரி விழாவிற்காக "Great Bank Robbery" என்ற நாடகத்தை எழுதினார்.அதற்காக சிறந்த எழுத்தாளர், சிறந்த நடிகருக்கான விருதினை ,அன்று நாடகத்திற்கு வந்திருந்த கமல்ஹாசன் தர பெற்று கொண்டார்.

பின்னர், தன் தம்பி பாலாஜிக்காக , பாலாஜி படித்த விவேகானந்தா கல்லூரிக்காக நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.

1976ல் எஸ் வி சேகரின் நாடகக் குழுவினருக்காக "கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்" என்ற நாடகம் எழுதினார்.அந்நாடகத்தின் வெற்றியே பின்னாளில் "கிரேசி" என்ற சொல்லை அவர் பெயருக்கு முன்னால் சேர்த்தது  .ஆம்..இனி நாமும் "கிரேசி" மோகன் என்றே இனி சொல்வோம்.

பின்னர், அடுத்து சேகருக்காக இவர் எழுதிய நாடகம், "டெனென்ட் கம்மேண்ட்மெண்ட்ஸ்".அடுத்து ஒன் மோர் எக்சார்சிஸ்ட் நாடகம்.
கிரியேடிவ் என்டெர்டெயினர்ஸ் டிவி வரதராஜனுக்காக "36 பீரங்கி லேன்".காத்தாடி ராமமூர்த்திக்காக 'அப்பா..அம்மா..அம்மம்மா" நாடகம்.

1979ல் தனக்காக 'கிரேசி" கிரியேஷன்ஸ் குழுவினை  துவக்கினார்.இதுவரை 30க்கு மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார் மோகன்.இவர் நாடகங்கள் ஆயிரக் கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது குழுவினைத் தவிர வேறு எந்தக் குழுவினரின்  நாடகங்கள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கன முறைகள் நடந்ததில்லை.இவரது ஒவ்வொரு நாடகமும் நூற்றுக்கணக்கான முறைகள் நடந்துள்ளன.

இவரது மற்ற நாடகங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

Saturday, November 17, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 11

----------------------
குடந்தை மாலி
-----------------------

என்.மகாலிங்கம் என்ற குடந்தை மாலி, 1959ல் துர்கா டிராமாடிக் அசோசியேஷன்ஸை ஆரம்பித்தார்.பின்னர் அக்குழு நாடகமித்ரா என பெயர் மாற்றம் அடைந்தது.இன்று அதே குழு மாலி ஸ்டேஜ் என்ற பெயரில் நாடகங்களை நடத்தி வருகிறது.

மகாலிங்கத்தை குடந்தை மாலி என ஆக்கியவர்  ம.பொ.சி ஆவார்

இதுவரை இக்குழு கிட்டத்தட்ட 40 நாடகங்களை மேடையேற்றியுள்ளது.அவற்றுள் பல 100 காட்சிகளைத் தாண்டிய மாபெரும் வெற்றி நாடகங்களாக திகழ்ந்தது.20 நாடகங்கள் மாலி எழுதியது.மீதி நாடகங்கள் இவர் குழுவிற்காக மற்றவர்கள் எழுதியது.

பிரபல எழுத்தாளர்களான நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சி மலர்",ஆர்.சூடாமணியின் , "ஆழ் கடல்", திருப்பூர் கிருஷ்ணனின் 'பொய் சொல்லும் தேவதைகள்", ஷ்யாமளாராவின்"மன்னிக்க வேண்டுகிறேன்" ஆகியவற்றை மேடைநாடகமாக்கியப் பெருமை மாலிக்கு உண்டு.

இவர்களைத் தவிர்த்து, சௌந்தர்யன்,சுந்தர், நாணு,மெரினா, மணிமோகன் ஆகியோர் இவருக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்.

திரைப்பட நடிகை சுந்தரி பாய், ஜான்சி ராணி, திரிசக்தி சுந்தரராஜன்,நவாப் கோவிந்தராஜன், கரூர் ரங்கராஜன் ,எஸ் பி ஐ முரளிஆகியோர் இவர் குழுவில் நடித்த சில நடிகர்கள்.

இவரது ஞானபீடம் மிகவும் புகழ் பெற்ற நாடகம்.125 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ள நாடகம்.

ஆனந்தவிகடனில் வெள்ளிவிழா ஆண்டில் பரிசு பெற்ற ஏ கே பட்டுசாமியின் "கடவுள் எங்கே?" என்று சற்றே சர்ச்சைக்குரிய கதையை அந்த நாட்களிலேயே மேடையேற்றியவர் மாலி.

அன்னை சாரதா தேவியின் 150ஆவது பிறந்தநாள் விழாவில் அவரது வாழ்க்கையை "அன்னை சாரதா தேவி" என்ற பெயரில் நாடகமாக்கினார்.நாடகக்காவலர் ஆர் எஸ் மனோகர் அந்நாடகத்தை இயக்கினார்.

இவரது சில நாடகங்கள், சங்கல்பம்,கடலை சேரும் நதிகள், கோபுரம் தாங்கும் பொம்மைகள்(இந்நாடகம் 350 முறை மேடையேறியது),நம்மவர்கள்,ஆத்மவிசாரணை, நிதர்சனம், சம்மதம் ஆகியவை.

2017ஆம் ஆண்டு மாலியின் 60 ஆண்டு சேவையை பாராட்டி விழா எடுக்கப்பட்டது.

மாலி, தமிழ் நாடக உலகில் ஒரு சாதனையாளர் எனச் சொல்லலாம்.
பல நிறுவனங்கள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.20க்கும் மேற்படட் விருதுகளைப் பெற்றவர் இவர்.

தமிழக அரசின் "கலைமாமணி" விருதைப் பெற்றவர்.

Tuesday, November 13, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி -3 )

ஆர் எஸ் மனோகர்
---------------------------

மனோகருக்கான நாடகங்களை துறையூர் மூர்த்தி, இரா.பழனிசாமி, ஏ எஸ் பிரகாசம்,அறிவானந்தம் ஆகியோர் எழுதினர்

இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், துரோணர், மாலிக்காபூர் ஆகிய நாடகங்களை துறையூர் மூர்த்தி எழுதினார்.

சூரபத்மன்,சிசுபாலன், சுக்கிராச்சாரியார்,சிவதாண்டவம், ஒட்டக்கூத்தர் ஆகியவற்றை இரா.பழனிசாமி எழுதினார்

விஸ்வாமித்திரர் நாடகத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுதினார்

பரசுராமன்,நரகாசுரன்,இந்திரஜித்,துர்வாசர்,திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களை கே.பி.அறிவானந்தம் எழுதினார்.

இந்திரஜித் நாடகத்தை எழுதிய அறிவானந்தம் ஒரு பேட்டியில்...

"எம்.ஆர்.தாவின் குழுவில் நான் சேர்ந்து ரத்தக்கண்ணீர், தூக்குமேடை நாடகங்களில் நடித்து வந்தேன்.ஒருநாள் மனோகரைப் பார்த்து "இந்திரஜித்" நாடகத்தைப் பற்றிக் கூற அதை நாடகமாக எழுதச் சொன்னார்.பிறகு  அவருடன் பணி புரிந்து..அவருக்காக பல நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினேன்.இந்திரஜித் நாடக அரங்கேற்றம் போது, பத்திரிகையாளர்களிடம்,"என்னைப் பற்றி எழுதாவிட்டாலும் பரவாயில்லை...வளர்ந்து வரும் இந்நாடக ஆசிரியர் அறிவானந்தம் பற்றி எழுதுங்கள்" என்றார்.இது அவரது பெருந்தன்மைக்கு உதாரணம்" என்றார்.

அறிவானந்தம் இன்றும் சில சரித்திர நாடகங்களை எழுதி, நடித்தும் வருகிறார்.

மனோகர், 2006 ஜனவரி மாதம் 10ஆம் நாள் நம்மை விட்டு பிரிந்தார்.

இன்னமும் , அவர் குழுவினைச் சேர்ந்தவர்கள், நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களைப் பற்றி பின்னர் காணலாம். 

Monday, November 12, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)

ஆர் எஸ் மனோகர்
-----------------------------

இவரது அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களே! இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள்தான்.கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை நமக்கு அளிக்கும்.

மனோகர், மக்கள் வில்லனாகக் கருதும் இதிகாசம், சரித்திர பாத்திரங்களை ஹீரோவாக ஆக்கி தன் நாடகங்களில் நடித்தார்.இலங்கேஸ்வரன்,சாணக்கிய சபதம்,சிசுபாலன்,காடக முத்திரையன் ஆகியவை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

இன்னமும் இவரது, மேற்சொன்ன நாடகங்களும்,மற்றும் சாணக்கிய சபதம்,இந்திரஜித்,சுக்கிராச்சாரியார்,நரகாசுரன்,திருநாவுக்கரசர் ,விஸ்வாமித்திரர்ஆகிய நாடகங்களும் மக்கள் மனதில் இன்னமும் அழியாமல் நிற்பவை எனலாம்

தமது குழுவின் மூலம் 32 நாடகங்களை 8000 முறைகள் மேடையேற்றி நாடக உலகில் இரு இமாலய சாத்னையைச் செய்தவர் மனோகர் ஆவார்.

எதிரொலி எழுப்பும் "எக்கோலிட்" என்ற கருவியை ,முதன் முதலாகப் பயன் படுத்தியவர் இவரே!நாடகத்தில் சிங்கத்தையும்,ஐந்து தலை நாகத்தையும் 3டி அமைப்பில் மேடையேற்றி மக்களை மிரள வைத்தவர் இவர்.

நாடகத்தன்றுநெருப்பாய் இருக்கும் இவர் மற்ற நேரங்களில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்.சக கலைஞர்கள் மீது அளவில்லா பிரியம் கொண்டவர்.

(அடுத்த வீட்டு ஜன்னல் 10 தொடரும்) 

Sunday, November 11, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி- 1)

-----------------------------------
ஆர்.எஸ் மனோகர்
------------------------------

பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து,அஞ்சல்துறையில் லட்சுமி நரசிம்மன் என்பவர் பணியாற்றி வந்தார்.இவர், படிக்கும் போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆரவமும் கொண்டவராய் இருந்தார்.

திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே சில இளைஞர்கள் தங்கியிருந்தனர்.அவர்களுக்கு நாடகங்கள் மீது ஆர்வம் இருந்ததை லட்சுமி நரசிம்மன் கண்டார்.

1950ஆம் ஆண்டில் சென்னையில் பிரபல வழக்குரைஞராக இருந்தபடியே , அமெச்சூர் நாடகங்களை நடத்தி வந்த வி. சி. கோபாலரத்தினம் என்பவர் குழுவில் பங்கேற்று நடித்தார் லட்சுமி நரசிம்மன்.பின்னர், தோட்டக்கார விஸ்வநாதன் என்பவர் நடத்தி வந்த குழுவிலும் பங்கேற்றார்

இந்நிலையில், கே பி ரங்கராஜூ என்ற எழுத்தாளர் மூலம்"ராஜாம்பாள்" என்ற படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.அப்படத்தின் தயாரிப்பாளர் இவருக்கு 'மனோகர்" என்று பெயரிட்டார்.பின் 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மனோகர் நடித்தார்

முழு நேர நடிப்பை மேற்கொண்ட மனோகர், நேஷனல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.மிகப் பிரம்மாண்டமான அமைப்புகளை அமைத்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் நாடகங்களை நடத்தினார்.

இவரின் பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்ததுண்டு.

"இலங்கேஸ்வரன்" என்ற நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்ற இவர் பெயருக்கு முன் "இலங்கேஸ்வரன்" ஒட்டிக் கொண்டது.

திரைப்படங்களில் பிரபலமாகி நடித்துக் கொண்டிருந்த போதிலும் , விடாது நாடகங்களையும் நடத்தி வந்தார்.ஒரு சமயம், சேலத்தில் கண்காட்சியில் இவர் நாடகத்தைப் பார்த்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம், இவரது நடிப்பு, தோற்றம், வசன உச்சரிப்பு இவற்றைக் கண்டு தங்கள் தயாரிப்பில் வந்த படங்களில் இவரை நடிக்க வைத்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 18 படங்களில் இவர் நடித்தார்.

(பகுதி - 2 அடுத்த பதிவில்) 

Saturday, November 10, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -2)

 (சமீபத்தில் தண்ணீர் தண்ணீர் நாடகத்தை மீண்டும் மேடையேற்றிய கோமலின் மகள் தாரிணி கோமலும்..நாடகத்தில் வந்த ஒரு காட்சியும்)
கோமலின் தண்ணீர் தண்ணீர் நாடகம் தண்ணீர் இல்லாத ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாடகம் ஆகும்.அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், கிராமத்து மக்கள் படும் துயரம், தீவிரவாதம் ஏன் உருவாகிறது ஆகியவற்றை இந்நாடகம் நயம்படச் சொன்னது.

1981ல் கே பாலசந்தர், இந்நாடகத்தைத் திரைப்படமாக்கினார்.இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

1982ல் கோமல் மேடையேற்றிய "ஒரு இந்தியக் கனவு" நாடகம் கோமல் இயக்கத்திலேயே திரைப்படமானது.

இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் கோமல் , சில காலம் உதவி இயக்குநர், வசனகர்த்தாவாக ஏற்கனவே பணியாற்றியவர்,"கற்பகம்" "கை கொடுத்த தெய்வம்" பேசும் தெய்வம் ஆகிய படங்களில் கோமலின் பங்கும் உண்டு

"தண்ணீர் தண்ணீர்" நாடகம், எஸ்.சங்கர் என்னும் ஆங்கில பேராசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு, பி சி ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டது

தன் குழுவைத் தவிர , வேறு சில குழுவினருக்கும் கோமல் நாடகங்கள் எழுதித் தந்துள்ளார்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த "அவன் பார்த்துப்பான்" அவற்றில் ஒன்று

இவரின், "என் வீடு என் கணவன் என் குழ்ந்தை" நாடாம் தொலைக்காட்சியில் மனோரமாவால் நடிக்கப் பெற்று பெரும் பாராட்டுதல்களைப் பெற்றதாகும்.

"சுபமங்களா" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இவர் சில காலம் பணியாற்றியுள்ளார்.

நீரின்றி அமையாது உலகு.கோமலின் தண்ணீர் தண்ணீர் பற்றி சொல்லாமல் தமிழ் மேடைநாடகங்கள் பற்றி யாரும் உரைத்திட முடியாது.கடைசி சொட்டு தண்ணீர் உலகில் உள்ளவரை கோமல் நினைவில் இருப்பார்

இதற்குமேல் "கோமலை"ப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை

Friday, November 9, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 9 (பகுதி -1)

---------------------------
கோமல் சுவாமிநாதன்
------------------------------------

1935ஆம் ஆண்டு பிறந்தவர் சுவாமிநாதன்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோமல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் .சென்னையில் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக தன் வாழ்நாளைத் தொடங்கியவர்.பின்னர் ஊரின் பெயரான "கோமல்" இவர் பெயருடன் ஒட்டிக்கொள்ள கோமல் சுவாமிநாதன் ஆனார்.

புதுமைப்பித்தனின் எழுத்துகளால் கவரப்பட்டவர் இவர்.எஸ் வி சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவிற்காக இவர் எழுதிய முதல் நாடகம் "புதிய பாதை" ஆகும்.

பின்னர், 1971ல் தனது நாடக்குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் துவக்கினார்.பொதுவுடமைக் கொள்கைகளில் மிகவும் பற்று கொண்டவர் கோமல்

இவர் தன் குழுவிற்காக 33 நாடகங்கள் எழுதினார்.அவற்றில் சில..

"கோடு இல்லாத கோலங்கள்" ஆட்சி மாற்றம்" சுல்தான் ஏகாதசி"பெருமாளே சாட்சி,"யுத்த காண்டம்" "செக்கு மாடுகள்" "கிராம ராஜ்ஜியம்" "ஒரு இந்தியக் கனவு"

1980ல் இவர் எழுதிய "தண்ணீர் தண்ணீர்" மாபெரும் வெற்றி நாடகமாகும்.இந்நாடகம் 250 முறைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது.இந்நாடகத்தில் வாத்தியாராக வந்த "ராமன்" பின்னாளில் கோமலின் இணைபிரியா நண்பர் ஆனார்.மக்களால் வாத்தியார் ராமன் என்றே அறியப்பட்டார்.

கோமலின் நாடககுழுவில் நடித்த மேலும் சில நடிகர்கள் , ராஜ்மதன்,ஏ கே வீராச்சாமி.,சாமிக்கண்ணு ஆவர்.

வெள்ளித்திரை நடிகர் சத்தியராஜ், கோமலின் "கோடில்லா கோலங்கள்" 'சுல்தான் ஏகாதசி" "நவாப் நாற்காலி' ஆகிய நாடகங்களில் நடித்தவர் ஆவார்.

(அடுத்தவீட்டு ஜன்னல் - 9 அடுத்த பதிவிலும்) 

Wednesday, November 7, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 8 (பகுதி - 2)


-------------------------------------
நடராஜன் (கூத்தபிரான்)

------------------------------------------

1985ஆம் ஆண்டு கூத்தபிரான், மீண்டும் தனக்கு சொந்தமாக ஒரு நாடகக் குழுவினைத் தொடங்கினார்.குழுவிற்கு "நவபாரத்" என்று பெயரிட்டார்.

"நாராயண கோபாலா", "காசிக்குப் போன கணபதி" "சுபஸ்ய சீக்கிரம்" போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.

பின்னர், அவரது மகன் ரத்னம், அவரது குழுவிற்கு நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.

"ஜேஷ்ட குமாரா", "ரூபாய் 21","உன்னால் முடியும் தாத்தா""ரோபோவின் டயரி".ஆகிய நாடகங்களை அவர் எழுதினார்.

இந்நிலையில்..தன் கலையுலக சேவையை முடித்துக் கொண்டு கூத்தபிரான் 2014ல் அமரர் ஆனார்.அந்த நாளில் கூட காலைக்காட்சி ஒன்றில் அவர் நடித்துவிட்டு வந்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.

பின், ரத்னம்..குழுவின் பெயரை , "கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ்" (KNT) என மாற்றினார்.தந்தையின் ஆசியுடன் ரத்னம் மேடையேற்றிய நாடகங்கள், "சொப்பனக் குழந்தை"(2015), "காளீஸ்வர பவனம்" (2016) ,சதுரங்கப் பார்வை,கிட்டப்பா கலகிட்டப்பா, ஸ்கந்தா,செல்லப்பா ஆகியவை ஆகும்.

இவற்றில் சொப்பனக் குழந்தையும், காளீஸ்வரபவனமும் 2015, 2016 சிறந்த நாடகங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.

ரத்னத்துடன் அவரது சகோதரர் கணேசனும், மகன் விக்னேஷ் ரத்னமும் குழுவில் நடித்து வருகின்றனர்.

இச்சமயத்தில்..கூத்தபிரானின் சிறந்த குணம் ஒன்றினை சொல்லாவிடில் இக்கட்டுரை முழுமைப் பெறாது.

விமர்சனங்களை வரவேற்பவர் அவர்.ஏதேனும் குறைகளைச் சொல்லி விமர்சனங்கள் வந்தாலும், அவை பொய்யாக இருந்தாலும் சற்றும் கோபம் அடையாமல் பதில் அளிப்பார்.

ஒருமுறை அவரது நாடகத்திற்கு ஒரு இதழ் மிகவும் சொற்ப மதிப்பெண்களை வழங்கியது.விமர்சனத்திற்கு  கூத்தபிரான் நன்றி தெரிவித்ததுடன்.."எங்களது அடுத்த நாடகத்தில் குறைகளை நீக்கிவிடுகிறோம்.அது, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருக்கும்" என்று பதிலளித்திருந்தார்.

உபரித் தகவல்
--------------------------------
உன்னால் முடியும் தாத்தா, ரோபோவின் டயரி ஆகிய நாடகங்களில் மூன்று தலைமுறையினர் முறையே கூத்தபிரான்,அவரது மகன்கள் ரத்னம், கணேசன், பேரன் விக்னேஷ் ஆகியோர் நடித்தது எந்த நாடகக்குழுவிலும் நடந்திராத சாதனை என்றே நினைக்கின்றேன்  

Tuesday, November 6, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 8 (பகுதி - 1)


நடராஜன் - (கூத்தபிரான்)

கலாநிலையம் நாடகக் குழுவில் ஆல் இந்தியா ரேடியோவில் வேலை செய்து வந்த நடராஜன் என்ற இயற்பெயர் கொண்டவர் கூத்தபிரான் என்ற பெயரில் நாடகங்களில் நடித்துவந்தார் என்பதை முன்னதாகக் கூறினேன்.

ஆனால்..கூத்தபிரானின் சாதனைகள் பெரியது.அதைத் தனியாகக் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன்,

1952ஆம் ஆண்டிலேயே தான் வசித்துவந்த டையாறில் "அடையாறு நாடக மன்றம்" என்ற குழுவினைத் தொடங்கி நாடகங்களை எழுதி, இயக்கி நடித்து வந்தார் கூத்தபிரான்

வானொலியில் பணியாற்றிய போது அப்போது வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட ரா.அய்யாசாமியுடன் பணியாற்றினார்.முழந்தைகளுக்கான "அன்னைசொல் அமிர்தம்" என்ற நாடகத்தை நடத்தினார்.குழந்தைகளுக்கான இந்நாடகம் நாடகப் போட்டியில் முதல் பரிசினை வென்றது.

சோ, காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் மேடையேற்றிய பகீரதனின் "தேன்மொழியாள்" நாடகத்தில் இவர் பெரும் பங்காற்றியதுடன் அந்நாடகத்தை இயக்கவும் செய்தார்

பின்னர், கல்கியின் மீது மிகவும் பற்று கொண்ட இவர் கல்ல்கி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற குழுவினை ஆரம்பித்து , கல்கியின் "அமரதாரா" வீணை பவானி" "என் தெய்வம்" ஆகிய கதைகளை மேடையேற்றினார்.இந்நாடகங்களில் ஜெயஷங்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்தனர்

1961ஆம் ஆண்டு தில்லி சென்று நாடகங்களை நடத்தினார். தில்லியில் சென்னையில் இருந்து சென்று நாடகம் நடத்திய முதல் குழு இவருடையது எனலாம்.அப்போது அவருக்கு தில்லி வானொலியில் பணியாற்றிய பூர்ணம் விஸ்வநாதன் நட்பு கிடத்தது.

பூர்ணம் தில்லியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் அவருடன் சேர்ந்து, கூத்தபிரானும் கலாநிலையத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

"தனிக்குடித்தனம்" ஊர் வம்பு" கால்கட்டு, "வாஷங்டனில் திருமணம்" ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே, வானொலியில் அய்யாசாமி ஓய்வு பெற, அவர் வகித்து வந்த பணி இவருக்கு அளிக்கப்பட்டது.ஆம்...இப்போது கூத்தபிரான் வானொலி அண்ணா ஆனார்.நிறைய குழந்தைகள் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான  கதைகளைக் கூறி சிறுவர்களை மகிழ்வித்தார்.

தவிர்த்து,கிரிக்கட் மேட்ச் களுக்கான தமிழ் வர்ணனி செய்தார்.

ராமமூர்த்தி, ஜப்பார், கூத்தபிரான் இவர்களே தமிழ் வர்ணனை ஆரம்பித்து வைத்த மும்மூர்த்திகள் ஆவர்

(இவர் வீட்டு ஜன்னல் தொடரும்)

Friday, November 2, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 7

--------------------------------
டி எஸ் சேஷாத்திரி
-------------------------------

1960-70களில்  இருந்து மிகவும் பிரபல நாடக நடிகர்.ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானவர்

இவர் சாந்திநிகேதன் என்ற நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.பல சிறந்த நாடகங்கள்மேடையேறின. டி கே எஸ் சந்திரன், சைமன் ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்தவர்கள்

இவருக்காக மாரா, பிலஹரி,தூயவன், சௌந்தர்யன் ஆகியோர் நாடகங்களை எழுதியுள்ளனர்

பிலஹரி , ஆனந்த விகடனில் எழுதிய நெஞ்சே நீ வாழ்க என்ற சிறுகதையை "ஆலமரம்" என்ற பெயரில் மேடையேற்றினார்.அதுவே பிறகு மேஜர் சுந்தரராஜன், மேடையில் இவர் ஏற்ற பாத்திரத்தை ஏற்க "ஆலயம்" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்து  வெள்ளிப் பதக்கத்தை தேசிய விருதில் வென்றது


ஏ.வி எம் ராஜன், புஷ்பலதா, டைபிஸ்ட் கோபு ஆகியோரும் இவர் நாடகத்தில் நடித்தவர்கள்.முன்னர் சொல்லியுள்ள ஆலமரம் நாடகத்தில் நடித்தப் பின்னர்தான் கோபு என்ற நகைச்சுவை நடிகர் டைபிஸ்ட் கோபு வானார்

30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சேஷாத்திரி நடித்துள்ளார்

இவரது இளவல் பத்மநாபன் என்பவரும் நாடக நடிகர்.இவர் நாடகங்களில் ராஜசேகர், பானுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.பரத் எழுதிய "தொடரும் அத்தியாயம்" என்ற நாடகம் இவர்களின் வெற்றி நாடகமாகும்

Thursday, November 1, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 6

---------------------------------
எம் ஆர் ராஜாமணி
------------------------------

சிறந்த நாடக நடிகர்..இயக்குநர்.

இவர் , விசு, கிஷ்மூ ஆகியோர் சகோதரர்கள்.

ராஜாமணி, ம.பொ.சி.யின் உறவினரான செல்வராஜ் கிராமணியின் இயக்கத்தில் "தங்கத்தாய் மரகதம்" என்ற நாடகத்தில் நடித்தார்.

பின்னர்..நண்பர்கள் மௌலி, கணேஷ், நான் உடபட ஆகியோருடன் சகோதரர்கள் மூவரும் சேர்ந்து, டி கே எஸ் சகோதரர்களிடமிருந்து ' ரத்தபாசம்" நாடகத்தை அம்பத்தூரில் நடத்திட அனுமதி பெற்று மேடையேற்றினோம்.மூத்த சகோதரரானராஜாமணிக்கு நடிப்பில் அவ்வளவு நாட்டமில்லாததால் அந் நாடகத்தை இயக்கும் பொறுப்பினை ஏற்றார்.

பின்னர், விசுவின் விஸ்வசாந்தி குழுவில் நடிக்கத் தொடங்கினார். ஈஸ்வர அல்லா தேரே நாம், அவர்களுக்கு  வயது வந்து விட்டது. மோடி மஸ்தான் ஆகிய நாடகங்களில் இவர் நடிப்பு பாராட்டும்படி இருந்தது.

பின்னர் எம் ஆர் ஆர் தியேட்டர்ஸ் என்னும் குழுவினை ஆரம்பித்தார்.சில நாடகங்களை மேடையேற்றினார்.அதில் குறிப்பிட வேண்டிய நாடகம் குரியகோஸ் ரங்கா எழுதிய "கீழ் வானம் சிவக்கும்" என்ற நாடகம்.இந்நாடகத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை வெள்ளித்திரையில் நடிகர் திலகம் ஏற்றார்.

"அவர்களுக்கு வயது வந்துவிட்டது" நாடகத்தைப் பார்த்த இயக்குநர் சிகரம் கே பாலசந்தர், தன் தயாரிப்பான "மூன்று முடிச்சு" படத்தில் நடிக்க இவருக்கு சந்தர்ப்பம் அளித்தார்.

மோடி மஸ்தான் நாடகத்தில் காதுகேளாதவராய் நடித்து ரகளை பண்ணியவருக்கு , அந்நாடகம்"மணல் கயிறு" என்ற பெயரில் படமானபோது அதே பாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது

"நாலு பேருக்கு நன்றி" என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார்

காலன் இவரது முத்திறமையை வெளியிடுமுன் இவரை தன்னிடம் அழைத்துக் கொண்டான்.