Wednesday, March 11, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 76

ஒருவருக்கு சிறப்பினையும், செழிப்பினையும் தரக்கூடியது,அறவழி  மட்டுமே

மனத்தூய்மையாய் இருப்பதே அறம்.

மனத்தூய்மைக்கு பொருந்தாதவை என வள்ளுவர் சிலவற்றைக் கூறுகிறார்.

அவை என்ன?

"அழுக்கா றவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம் (35)"

பொறாமை,பேராசை,பொங்கும் கோபம்,புண்படுத்தும் சொல் ஆகிய நான் கும் அறவழிக்கு பொருந்தாதவையாகும் என்கிறார்

ஒருவன் அறவழி வாழ்வில் வருவது மட்டுமே புகழ்..இன்பம் ஆகும்.மற்றவை புகழும் ஆகாது,இன்பமும் ஆகாது..

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல (39)

Tuesday, March 10, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 75


ஆந்தணர் என்பவர் யார்?
--------------------------------------
நன்மை, தீமை ஆகியவற்றை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களை உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்..என்று சொல்லும் வள்ளுவர், துறவறம் மேற்கொள்ள ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வேண்டும் என்கிறார்.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

என்கிறார்.பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விடமுடியும்

இப்படிச் சொல்வதுடன் நில்லாது..அந்தணர் என்பவர்கள் யார்? என்பதையும் சொல்கிறார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (30)

அனைத்து உயிகளிடத்தும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் (எவராயினும் சரி) எவராயினும்..அவர் அந்தணர் எனப்படுவார்.

நாமும் எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருப்போமாக!

தமிழ்நாடகமேடை

தமிழ்நாடகமேடை
---------------------------

இப்பதிவிற்கு..ஆதரவாகவும்,எதிர்ப்பு தெரிவித்தும் பல பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும் இதுதான் உண்மைநிலை.

நாடகம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை...இது முதல் குற்றச்சாட்டு..

இதில் ஓரளவு உண்மை இருக்கிறது.ஆனால்..இது இன்று நேற்றல்ல..ஒரு சமயத்தில் திருச்சியில் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்திற்கு வந்திருந்து ரசிகர்கள் 12 பேர்தானாம்.உடன் நடிக்கும் சக நடிகர், "மேடையில்..கீழே நாடகம் பார்க்க வந்திருப்போரைவிட அதிகம் "என்றாராம் மேடையிலேயே, முத்லியாரிடம்.

ஆகவே..ரசிகர்கள் வருவதில்லை என்பதை முதல் காரணமாக நினைக்கக்கூடாது.அது நிரந்தரமல்ல..நாடகம் காண மக்களை நாடகக் குழுக்கள்தான் ஈர்க்க வேண்டும்.அதற்கு உண்மையிலேயே நாடகத்தில் பற்றுள்ள குழுக்களும்,சபாக்களும் வேண்டும்.
ஊடகங்கள் உதவ வேண்டும்.

150க்கும் மேற்பட்ட சென்னை சபாக்களில் இப்போது இருப்பவை அதிகபட்சமாக 15 தான்.அதிலும், தங்களுக்கு என அரங்கம் இல்லாதவர்களால், அரங்க வாடகையும் கொடுத்து, குழுக்களுக்கு ஊதியமும் கொடுத்து நாடகங்களை நடத்துவது இயலாத காரியமாக ஆகி வருகிறது.இதே நிலைதான் தமிழகம் முழுதும் நடத்து வந்த, வரும் சபாக்களின் நிலை

பொதுமக்கள் ஆதரவு இல்லாவிடின்..ஸ்பான்சார்களும் எவ்வளவு நாட்கள் ஆதரிக்க முடியும்?

பல இளம் கலைஞர்கள் பல புதுக் குழுக்களைத் தொடங்கி..பிரம்மாண்டமான காட்சியமைப்புகளை அமைத்து தமிழ்நாடகமேடைக்குள் சமீபத்தில் வந்திருப்பதைப் பாராட்டினாலும்...இதே போன்று நாடகம் பார்க்க இளம் சமுதாயத்தினரை அரங்கிற்கு இழுக்க வேண்டும்.அதே நேரம் நாடக இலக்கணத்தை மறந்துவிடக் கூடாது.

அதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு..பல புது சபாக்களை ஆங்காங்கே மீண்டும் ஆரம்பிக்க முயல வேண்டும்.

தங்களுக்கு என அரங்கு உள்ள சபாக்கள் குறைந்த வாடகைக்கு அரங்கை வாடகைக்கு விடுவதன் மூலம்..பல சிறிய சபாக்கள் நாடகங்களை நடத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தலாம்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றம், ராணி சீதை ஹால், மியூசிக் அகடெமி ஆகிவற்றில் நாடகங்களே நடப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கான வாடகையை அரங்குகள் குறைத்தால்..குழுக்களேக் கூட நாடகங்களை தங்கள் செலவில் நடத்த முன் வருவார்கள்.

திறமையுள்ள,சமூக அந்தஸ்து உள்ள இளைஞர்கள் புது சபாக்களை உருவாக்கும் முயற்சியிலோ அல்லது உள்ள சபாக்களில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியிலோ இறங்கலாம்.

ஊர் கூடி தேர் இழுத்தால்தான்..தேர் நகரும்..
நாடகக் கலைஞர்கள், சபாக்கள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாடகத் தேரை இழுப்போம்...

கலைஞர்களுக்கும், கலைக்கும் என்றும் ஆதரவு கரங்களை நீட்டுவோமாக 

Monday, March 9, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 74


நீரின்றி அமையாது உலகு
---------------------------------------
ஒரு நாடு நல்ல வளத்தோடும், செழிப்போடும் விளங்குகிறதென்றால்..அந்நாட்டில் நீர் வளம் சிறப்பாக இருப்பதும் ஒரு காரணமாகும்.அப்படி நல்ல நீர்வளம் அமைய காலத்தே தவறாது மழை பொழிதல் அவசியமாகும்.

மழைநீர் பொய்த்து விட்டால்..

வறுமை, பசி,பஞ்சம் வாட்டும்.உழவுத் தொழில் குன்றும்.உயிர்கள் செத்து மடியும்.

வாழ்வு சிறக்க மழையின் பங்கு அதிகம் என்பதாலோ என்னவோ..வள்ளுவரும், திருக்குறளில் கடவுள் வாழ்த்திற்கு அடுத்த அதிகாரமாக வான்சிறப்பை வைத்தார்.

கடல்நீர் ஆவியாகி..அந்தக் கடலில் மழையாக பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்.மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என்கிறார் இக்குறளில்..

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)

மேலும் சொல்கிறார்..

உலகில் மழையில்லை என்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்னும் நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு (20)

நீரின் இன்றியமையாமையை உணர்வோமாக. 

Sunday, March 8, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 73

நற்பண்பு
--------------------
ஒருவர் பேசுவதை வைத்தே, அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிட முடியுமாம்.

அது எப்படியாம் என்றால்..

சாதாரணமாக ஒரு பயிரைக் கண்டதுமே அந்து எப்பேர்ப்பட்ட நிலத்தில் விளைந்தது என்பதை ஒரு விவசாயி கூறிவிடுவான்.அதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்திட முடியும் என்கிறார்.
இதை வைத்துதான், ஒருவன் செயல் வீரனா அல்லது வாய்ச்சொல் வீரனா என்பதையும் சொல்லி விடலாம்.
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
(விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச்சொல்லை வைத்தே அவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதை உணரலாம்)
மேன்மக்கள் விரும்பாத சொற்களைக் கூறமாட்டார்கள்.எந்த ஒரு துயரம் வந்தாலும் தன் நிலை மாறாதிருப்பர்.புறங்கூற மாட்டார்கள்.

இதைத்தான், "கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார் மூதுரையில் ஔவையார்.
பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன் சுவையில் குன்றாது.அதுபோல எவ்வளவு துன்பங்களில் இருந்தாலும் நற்பண்புகள் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பர்.அது எப்படிப்பட்டது என்றால் வெண்மை நிறத்தில் உள்ள சங்கு தீயில் எவ்வளவு சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் அதுபோல., என்கிறார்.
என்னவொரு அழகான உவமை
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

நற்பண்புடைவனாக நாமும் இருப்போமாக!

Saturday, March 7, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 72

பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள்
-------------------------------------------------

பிறருக்கு உதவித் தேவைப்படும்போது .நம்மால் முடிந்தால் அவர்களுக்கு அவ்வுதவியினைச் செய்திட வேண்டும்.

அப்படி செய்த உதவிக்கு, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது.எப்படியாம் தெரியுமா?

அந்தந்த காலங்களில் தவறாது பொழிந்து, மக்கள் வாழ்வினை செழிக்க வைக்கிறது மழை.அதற்கு
பதிலாக மக்களிடம் இருந்து அது எதனையும் எதிர்பார்ப்பதில்லை அதுபோலவாம்


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு (211)

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறுகருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
என்கிறார்.

உதவி செய்வோரிடமிருந்து பலனை எதிப்பார்க்காதீர்கள்..நமக்கு உயிர் வாழ உதவி செய்யும் மழை நம்மிடம் இருந்து என்ன பிரதிபலனை எதிப்பார்த்து பெய்கிறது.(சூரியனைக் கூட பொங்கல் அன்று வணங்கும் நாம்..மழையை என்றாவது துதிக்கிறோமா? )


ஆகவே..எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலனை எதிப்பார்க்காதீர்..கடமையை செய்யுங்கள்..

Friday, March 6, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 71

அறிவு


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (423)

எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும்,அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை
ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்று அறிவுடைமைப் பற்றி சொன்ன வள்ளுவர்..

அறிவுடையவன் என்பவன் எப்படி இருப்பான்..

என்றும் சொல்கிறார்..

உலகில் உள்ள அறிவுடையோர், சிறந்தோர் ஆகியோருடன் நட்பு கொள்வது கூரிய அறிவாகும்.அப்படி நட்பு கொண்டபின், அந்த நட்பைவிட்டு விலகாமல் இருப்பதும் அறிவு ஆகுமாம்.

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு (425)

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.(அவனே அறிவுடையவன் ஆவான்)

நமக்கு பகையால் அழிவு வராமல் பாதுகாப்பது நம் அறிவு மட்டுமேயாகும்.




Thursday, March 5, 2020

வித்து

தாய் மண்ணே!
தரணி செழிக்க
எனை
பிரசிவித்து அனுப்புகிறாய்
பாதி ஆயுளில்
வெட்டப்படாமல் இருப்பின்
பணி முடிந்து
பரவசமாய்
உன்னிடம் வருகின்றேன்!

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -70

செய்நன்றி மறவேல்!


ஒருவர் என்ன தவறு செய்தாலும்..அந்த பாவத்தில் இருந்து அவரால் விடுபட முடியும்.ஆனால்..அவருக்கு ஒருவர் செய்த நன்மைகளை மறந்தவர்க்கு அந்த பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லையாம்.

ஆகவே, ஒருவர் செய்த நன்றியை எக்காலத்தும் மறந்து விடக்கூடாது என்கிறார்.

செய்ந்நன்றியறிதல் என்று நன்றியினைப் பற்றி ஒரு அதிகாரமே ஒதுக்கியுள்ளார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

எந்த அறத்தினை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு.ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.



ஒருவர் நமக்குச் செய்த நன்மைகளை மறந்தர்வகளுக்கு ஒரு காலும் அந்தப் பாவத்தில் இருந்து விடு பட வழி இல்லை என்கிறார் வள்ளுவர்.


இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள சில குறள்களுக்கான பொருளை மட்டும் பாருங்கள்..

1) செய்யாமற் செய்த உதவிக்கு வானமும், பூமியும் கூட ஈடாகாது.

2) தேவைப்படும் காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தைவிட பெரிதாக மதிக்கப்படும்

3)தினையளவு உதவியினைக் கூட பனையளவாகக் கொள்வர் நன்றியுள்ளவர்கள்


 ஔவையாரும் தனது "மூதுரை"யில் சொல்கிறார்..

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.


நல்லவர் ஒருவருக்கு செய்த உதவி கல்லில் வடித்த எழுத்து போல என்றும் நிலைத்து நின்றிருக்கும்.அப்படியில்லாத, மனதில் நன்றியுணர்ச்சியற்றோர்க்கு செய்த உதவி நீர் மேல் எழுத்தாய் அழிந்துவிடும்.

நல்லவகள் செய்த உதவியை மறக்கமாட்டார்கள். 

நமக்கு நன்மை செய்தவர்களை நினைத்துப் பாத்து, அந்நன்மைகளை மறக்காமல் இருப்போமாக! 

Wednesday, March 4, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -69

திட்டமிட்டு செயல் படுவோமாக!


அறிவுடைமை எனும் அதிகாரத்தில் "அறிவுடையவர்களுக்கு  ஒர் திறமை இருக்கிறது "என்கிறார் வள்ளுவர்.

அது என்ன திறமை

 அவர்கள் வருவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல, அப்படி அறிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிர்ச்சி அடையும்படி ஒரு துன்பம் வராது.

வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (429)

பெரும்பாலோர், ஒரு காரியத்தை செய்யும் போது, அதனால் துன்பம் உண்டாகுமா? என சிந்திப்பதில்லை.அப்படி பின்னால் துன்பம் ஏற்படின்..பதற்றமும், பிறர் உதவியை நாடுதலும், தேவையில்லா கோபமும், இறைவா..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று இறைவனை வேண்டுதலும் செய்வார்கள்.

ஆனால், அறிவுள்ளவர்கள் அப்படி செய்யமாட்டார்களாம்.துன்பம் வரும் முன்னரே அதை எதிர்பார்த்து அது வராமல் இருக்கும் வழிகளை மேற்கொள்வார்களாம்.


அடுத்த "குற்றங்கடிதல்" அதிகாரத்தில் சொல்கிறார்..

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (430)

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போலக் கெடும்.

திட்டமிட்டு செயல் படுவோமாக!

Tuesday, March 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -68


வாழ்க்கையில் இன்பம், துன்பம் இல்லாமல் இருப்பது இல்லை.

ஆனால்..துன்பம் ஏற்படுகையில், இன்பம் வராவிடினும் பரவாயில்லை,துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது.

துன்பம் ஏன் வருகிறது..

அளவிற்கு மேல் ஆசைப்படுவதால்..பேராசையால்தான் பல துன்பங்கள் வருகின்றன.

இன்பம் வரும்போது அதற்காக ஆட்டம் போடாமல் இருந்தாலே போதும்.அதுவே துன்பத்தை கண்டு வருந்தாத மனதைக் கொடுத்துவிடும்.

இதையே வள்ளுவர்..

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன் (629)

என்கிறார்.

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்,துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.(இன்ப, துன்பங்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதி ஏற்பட்டுவிடுமாம்)

அதேபோல..இன்பம்..இன்பம்...என இன்பத்தைத் தேடி அலையாமல் இருந்தால் போதும்..அப்படிப்பட்டவர்களுக்கு துன்பம் ஏற்பட்டால் துவண்டுவிட மாட்டார்களாம்.


இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன் (628)

இன்பத்தை விழையான் துன்பத்தை இயல்பானது எனபான்.அதனால் துன்பப் பட மாட்டான்


எல்லா துன்பத்துக்கும் காரணம் இன்பம் வேண்டும் என்று அலைவதுதான்.

ஆமாம்..வாழ்க்கையில் இன்பமே வேண்டாமா?

கண்டிப்பாக வேண்டும்.ஆனால் ஓரளவே வேண்டும்.அளவிற்கு அதிகமாக
 வேண்டும் என்று அலைந்தால் துன்பமே வந்து சேரும்.

அதனால்தான் வள்ளுவர் சொற்களை தெரிந்து எடுத்து கையாள்கிறார்.


"இன்பம் விழையான்" என்றார். விழைதல் என்றால் மிக விரும்புதல் என்று பொருள்.


ஆசையை விட்டு ஒழிப்போம்/


Monday, March 2, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 67

மறப்போம்..மன்னிப்போம்

உங்களுடன் இணைபிரியா நண்பன் ஒருவன் இருக்கிறான்.அவனுக்கு நீங்கள் பல உதவிகள் செய்துள்ளீர்கல். அவனும் உங்களுக்கும் பல உதவிகள் செய்துள்ளான்.

இந்நிலையில், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு நல்ல வாய்ப்பை உங்களுக்கேத் தெரியாமல் அவன் அபகரித்துக் கொள்கிறான்.இதனால் நீங்கள் மீண்டும் எழ முடியா இழப்பு...

அடுத்து..

உறவினர்கள்..நமக்கு நெருங்கிய உறவினர்கள்.நமது சுக துக்கங்களில் பங்குக் கொண்டவர்கள்.அவர்கள் தவறிழைத்து விடுகின்றனர்.இதனால் உங்களுக்கு வேதனை, அவமானம்..."இனி உங்கள் முகத்திலேயே விழிப்பதில்லை" என்று விடுகிறீர்கள்

இப்படி வாழ்வில் நமக்கு பலரால்..பல போது பல சிக்கல்கள் வரலாம்.பலரால் நாம் வஞ்சிக்கப்படலாம்..

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்.

நட்பை, உறவை துண்டித்துக் கொள்ள வேண்டுமா?

தேவையில்லை...அதற்கும் வள்ளுவர் சொல்கிறார்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் (109)

ஒருவர் நமக்குக் கொலை செய்வது போன்ற மிகக் கொடுமையான தீமையைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால்,அதற்கு முன்னர் அவர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதுமானது


உறவுகள், நட்பு, அலுவலகம் என எங்கு வரும் பெரும் சிக்கல்களும் தீர  ஒண்ணே முக்கால் அடியில் வழி சொல்கிறார் வள்ளுவர்.

மறப்போம்..மன்னிப்போம்

Sunday, March 1, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 66

 இக்குறளைப் பாருங்கள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)

மயில் இறகாய் இருந்தாலும், அதிகமாக (ஒரு வண்டியில்) ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்து விடும்.

இது என்ன குறள்..இந்த விஷயம் அனைவரும் அறிந்ததுதானே! பின், வள்ளுவர் எதற்காக இப்படிச் சொல்கிறார்? என்று பார்ப்போமா..?

இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் வருகிறது.

வலிமை அறிதல்...

அரசர்களுக்கு சொல்லப்பட்ட குறளாக இதைப் பார்ப்போமாயின்..

சின்ன பகைவன் தானே என பகைவர்களை அதிகரித்துக் கொண்டேப் போனால்..அவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால் பலம் பெற்று உன்னை (மன்னனை)அழித்துவிடுவர்...என சொல்லுவதாகக் கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்திலும் இக்குறள் அரசியலுக்கு உதவுகிறது..

சின்னக் கட்சிதானே..என பெரிய கட்சிகள் ஒதுக்கினால், அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பலம் பெற்று பலமான கட்சியினைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பது கண்கூடு.

தனிப்பட்ட மனிதனுக்கான அறிவுரையாக எடுப்போமாயின்..

கொஞ்சம் கொஞ்சமாக உண்ண ஆரம்பித்து..கண்டதையெல்லாம் சாப்பிட்டு உடல் எடையைக் கூட்டிக் கொண்டே போனல் உடலை இயக்கும் அச்சாணியான இதயம் பளு தாங்காது செயலிழந்து மரணத்தைத் தழுவ நேரிடலாம்.ஆகவே..நாம் நம் உடல் நலத்தில் கவனாய் இருக்க வேண்டும்.

அப்போது சாப்பிடவேக் கூடாதா? என்று கேட்டால்..

வள்ளுவர் சாமன்யரா? நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என் அதற்கான பதிலையும் அதில் வைத்துள்ளார்.

"சால மிகுத்துப் பெயின்"  என்று "சால" என்ற வார்த்தையைப் போட்டுள்ளார்.சால என்றால், அதிகமாக..அதாவது அளவிற்கு அதிகமாக உண்டால்..அந்நிலை ஏற்படலாம் .  

"அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு"

சுருங்கச் சொல்லி..அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசித்தோமானால் எல்லா குறள்களுமே மனிதனுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரையாகவேத் தோன்றுகிறது. 

  


.

Friday, February 28, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -65



அவனும் அவளும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்தார்கள். திருமணமும் செய்து  கொண்டார்கள்.  திருமணம் செய்து கொண்ட கொஞ்ச நாள் வாழ்க்கை மிக இனிமையாக  இருந்தது.

நாள் ஆக நாள் ஆக, இனிமை குறையத் தொடங்கியது.

காரணம் என்ன ?

வள்ளுவர் சொல்கிறார்

நாள் ஆக நாள் ஆக ...ஒருவர் மற்றவரின் குறைகளை காண ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் காரணமாம்.

மனைவி கணவனின் குறையை கண்டு அதை அவனிடம் சொல்கிறாள்.

அவனுக்கு கோபம் வருகிறது.

நீ மட்டும் என்ன உயர்வா என்று அவன் அவளின் குறைகளை கண்டு சொல்கிறான்.

அவளுக்கு கோபம் வருகிறது.

 இதுதான் காதல் குறையக் காரணம்.

காதல் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒருவர் மற்றவரின் குறைகளை காணாமல் அவர்களின் நல்ல திறமைகளை கண்டு பாராட்ட வேண்டும்.

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு (1298)

தவறு கண்டு சிரித்தால், அது இழிவு என்று எண்ணி, அவருடைய திறமைகளை நினைக்கும் உயிர் போல காதல் கொண்ட மனம் ”   


ஆகவே..

கணவன், மனைவியின் நல்ல பண்புகளை, திறகைகளை பாராட்டட்டும்.அவளை உயர்வாக பேசட்டும்.

அதே போன்று கணவனின் நல் பண்புகளை, திறமைகளை பாராட்டட்டும்.அவனை உயர்வாக பேசட்டும்..

வாழ்வு முழுதும், அவர்கள் காதல் வளர்ந்து கொண்டுதானே இருக்கும்.



Thursday, February 27, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 64

மேன்மேலும் வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என எண்ணுபவர்கள், தமது செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருக்க வேண்டும்..எனவும், தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்களெனவும் கீழ் கண்ட இரு குறள்களில் சொல்கிறார்.

ஓஒதல் வேண்டும் ஒளியாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர் (653)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் (654)

எல்லாம்  சரி..ஒருவேளை"ஐயோ..என்ன தவறு செய்து விட்டோம்"என்று நினைக்கும் படியான செயலைச் செய்து விட்டால் என்ன செய்வது?

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (655)

'என்ன தவறு செய்துவிட்டோம்" என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது.ஒருவேளை அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

அதாவது, தவறு செய்வது மனித இயல்பு.அப்படி செய்த தவறை உணர்ந்து , மீண்டும் அது போன்ற தவறினை செய்யக் கூடாது


ஒரேவரியில் சொல்வதானால்..மீண்டும் மீண்டும் வருந்தத் தக்க தவறுகளை செய்யக் கூடாது  


Wednesday, February 26, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 63

கற்க கசடற

எல்லோருக்கும் தெரிந்த குறள்தான் . 

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக  (391)



கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

சற்று ஆழ்ந்து சிந்திப்போமா?

கற்க கசடற....உயர்ந்த நூல்களைப் படித்து, மனம்வாக்கு,செயல் ஆகியவற்றில் உள்ள கசடுகளை (மாசுக்களை)போக்க வேண்டும்.

அப்படி, படித்தும் மன மாசு போகவில்லையெனில், கற்றதனால் என்ன பயன்?

அதனால்...கற்றதற்கு ஏற்றாற்போல பண்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும்.

அப்படி மாசு அகல கற்றபின், நாம் வாழ்நாளில் அதன்படி நடந்திட வேண்டும்.
வாக்கில் இனிமை வேண்டும்.

செயல் சிறந்ததாக இருக்க வேண்டும்.

மனம் தூயதாக இருக்க வேண்டும்.

சரி, படித்தது போதும் என நிறுத்தி விடலாமா? எவ்வளவு படித்தாலும் கற்றது கைம்மண் அளவு அல்லவா?அதனால் படிப்புக்கு இவ்வளவுதான் என்ற எல்லை இல்லை

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்றும் கூறுகிறார்,

தொட்டனைத் தூறு மணற்கேனி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு (396)

நல்ல நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வோமாக!



.

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 62

  துணையோடு அல்லது நெடுவழி போகேல்...
அதாவது  துணையாக யாரும் இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செல்லக் கூடாது.

தனியாக நெடும் பயணம் செய்யக்கூடாது..

வாழ்க்கை என்பதும் ஒருவருக்கு பெரும் பயணம்ணத்தை தொடர துணை வேண்டாமா? அத்துணையே மனைவி ஆகும்

வள்ளுவரும்,வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியைக் குறிப்பிடுகிறார் 

நாம் பயணம் செய்யும் போது யாரைத் துணையாகக் கொள்வோம்?


நம்மை விட பலசாலியையா அல்லது நம்மை விட பலவீனமானவனையா ?

பலசாலியைத்தானே..

துணை என்பது நம்மை விட சிறந்ததாக இருக்க  வேண்டும்.



இப்படி , துணை என்பது நம்மை விட மிக மிக  உயர்ந்தது.

துணை என்பது தாழ்ந்தது அல்ல.

மனைவி எப்போது வாழ்க்கைத் துணையாவாள் என்றும் வள்ளுவர்  சொல்கிறார்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)

என்கிறார்.

இல்லறத்துக்குரிய  பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.


குடும்பத்தின் நல்ல பெயருக்கு களங்கம் வராமல், வருமானத்திற்கு அதிகமாக செலவு  செய்யாமல், அதிகமாக கடன் வாங்காமல்...வளத்துக்கு தக்க வாழ்பவள் வாழ்க்கைத் துணை.

Tuesday, February 25, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 61




நம் நாடு,   துறவிகளை கொண்டாடும் அளவு  வேறு எந்த நாடாவது, சமுதாயமாவது கொண்டாடி இருக்கிறதா என்று தெரியவில்லை.



நீத்தார் பெருமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார்.  
.

 எத்தனை சாமியார்கள்..அவர்களில் போலி எவ்வளவு? 
அவர்களுக்குப் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டும் மக்கள்.

ஆனால் உண்மையில்
எல்லாம் துறந்தவனுக்கு எதிலும் நாட்டம் இருக்கக் கூடாது....

ஆதலால், நாம் நல்லவர்களைப் பார்த்து(என நம்மிடம் தேர்வை விட்டு விடுகிறார்),அவர்களின் சொல்படி கேட்பதுதான் என்பது உலகில் உள்ள அனைத்து நூல்களின் முடிவு என் கிறார் வள்ளுவர்...

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு (21)


ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,சான்றோர் நூலில் விருப்பமுடனும்,உயர்வாகவும் இடம் பெறும்..


மேலும்..

ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவனே,துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் என இக்குறளில் சொல்கிறார்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து (24)

உறுதியென்ற அங்குசம் கொண்டு ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன்,துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான் என்கிறார்.

போலிகளைக் கண்டு ஏமாறக்கூடாது

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 60



வாழ்வில் வெற்றி பெற  எளிமையான வழி என்னவென்று தெரியுமா?

வள்ளுவர் சொல்கிறார்..

ஒண்ணு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுய புத்தி இருக்க வேண்டும்.

தனக்காக தெரிய வேண்டும்.  இல்லை என்றால் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்டு அதன் படி நடக்க வேண்டும்.

ஏவவுஞ் செய்கலான் தாந்தேறான் அவ்வுயிர்
போஒம் அள்வுமோர் நோய் (848)

சொந்தப் புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் கேட்காதவர்க்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.

அறிவு பஞ்சமே மிகக் கொடுமையான பஞ்சமாம்.மற்ர பஞ்சங்களைக்கூட உலகு அவ்வளவாகப் பொருட்படுத்தாதாம்.

மொத்தத்தில்

நோய் யாரிடம் இருக்கிறதோ அவர்களை மட்டும் வருத்தாது. ஒருவரிடம் இருந்து  மற்றவர்களுக்கு பரவி அவர்களையும் வருத்தும். அது போல சொல் புத்தி, சுய புத்தி இரண்டும் இல்லாதவர்கள் தங்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பார்கள் என்கிறார் பொய்யாமொழியார்.


முதலில் மற்றவர்கள் சொல்வதை கேட்டு செயல் பட வேண்டும். நாளடைவில் நமக்கே சொந்த அறிவு வர வேண்டும். எனவேதான் முதலில் சொல் புத்தியையும் பின் சுய புத்தியையும் சொன்னார் வள்ளுவர்.

Monday, February 24, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 59

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயைவிடக் கொடுமையாகவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் என்கிறார் இக்குறளில்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)


 மிக மிக ஆழமான பொருள் பொதிந்த குறள்.

தீயவை நமக்குத் தீமை தருவதால், அத்தகைய தீமைகள் தீயை விடவும் அஞ்சப் படும்.


இதில் இன்ன பெரிய ஆழமான அர்த்தம் இருக்கப் போகிறது?

தீ யை வைத்துதான் சமையல் செய்கிறோம்.தீ நம் அன்றாட வாழ்வில் பல நிலையில் பயன்படுகிறது/.

ஆனால்...தீ அழிக்கவும் செய்கிறது

வீட்டையும், நாட்டையும் எரித்து சாம்பலாகி விடும்.

அது போலத்தான் தீயவைகளும்.

தீயவை என்றால் என்ன ?

உதாரணத்திற்கு....

உணவு நல்லது தான். அதையே அளவுக்கு அதிகமாக உண்டால் இல்லாத பிரச்சினகைள் எல்லாம் வந்து சேரும். அதுவே நம் உயிர்க்கு உலை வைத்து விடும். அளவுக்கு அதிகமான தீயைப் போல.

அது சரி..ஏன் வள்ளுவர் "தீயினும்" என "உம்"மை சேர்த்தார்.


தீ தொட்டவுடன் சுடும். விலகினால் சுடாது.

ஆனால், தீயவையோ, தொடும் போதும் சுடும். விட்டு விலகிய பின்னும் சுடும், . வருத்தும். அதனால், தீயினும்.,அதாவது தீயைக்காட்டிலும் என்று பொருள் படுகிறது அல்லவா?

. தீயவற்றை விலக்குவோமாக!