Tuesday, April 10, 2018

ஒய்ஜிபியும் யுஏஏவும் - 9

  


(யூஏஏ குழுவினர் ஜெயலலிதா, சந்தியா ஆகியோருடன்)

1962ல் அரங்கேறிய நாடகம் பட்டு எழுதிய "Hidden Truth" என்ற நாடகம்.14 காட்சிகள்

பின் சகுந்தலா என்ற பட்டு எழுதிய நாடகம் 

1964ஆம் ஆண்டு..யூஏஏ விற்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்தது .

தில்லியில் ஒய்ஜிபி வேலை செய்துவந்த போது பூர்ணம் விஸ்வநாதன் நண்பர் ஆனார்.
பின்னர் அவர் எழுதிய "UNDER SECRETARY"  என்ற நாடகத்தை, திருமதி ஒய்ஜிபி அவர்கள் யூஏஏ நாடகமாக்க விரும்புவதாக பூர்ணத்திடம் சொல்ல அவரும் இசைந்தார்.
                (பூர்ணம் விஸ்வநாதன்)

இந்நாடகம் பல காலம் பேசப்பட்ட வெற்றி நாடகமாக அமைந்தது.50முறை மேடையேறிய இந்நாடகத்தில் தனது 16ஆவது வயதில் ஜெயலலிதா அறிமுகமானார்.அதுமட்டுமல்ல, இந்நாடகத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, சித்தி வித்யாவதி ஆகியோரும் நடித்தனர். 

1965ல் அவர் வெள்ளித்திரையில்  "வெண்ணிற ஆடை" படம் மூலம் அறிமுகமானாலும், திரையுலகில் முழுமூச்சில் ஈடுபடும்வரை இவர்களது நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது

1965ல் யூஏஏ அரங்கேற்றிய நாடகம் P V Y ராமன் என்பவர் எழுதிய (IM)PERFECT MURDER .திரில்லர் வகையைச் சேர்ந்த இந்நாடகம் ஆசிரியருக்கு மட்டுமின்றி, யூஏஏ வின் தொப்பியில் நீண்ட சிறகாகவும் ஆனது.

"Not in the Book"  என்ற ஆங்கிலக் கதையைத் தழுவியது இந்நாடகம்.இக்கதை நாடகத்திற்கு ஏற்றது என நினைத்த ஒய்ஜி பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம் மூலமாக , கதை எழுதியவரிடம் தொடர்பு கொண்டு அதிகாரப் பூர்வ அனுமதியினைப் பெற்றார்.ஒரு கதாசிரியரின் கற்பனையை மறந்தும் திருடிவிடக்கூடாது என்பதில் உறுதியாய் ஒய்ஜிபி இருந்ததை இதன் மூலம் அறியலாம்

இப்போதும் இந்நாடகம் பார்த்தவர்களிடம் கேட்டால் இந்நாடகத்தினைப் பற்றிப் போற்றிக் கூறுவர்.1965லேயே 200 முறைகளுக்கு மேல் இந்நாடகம் நடந்தது என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 8



1961 ஆம் ஆண்டு யுஏஏவிற்கு மறக்கமுடியாத ஆண்டு.
ஆம், பட்டு எழுதிய "பெற்றால்தான் பிள்ளையா?" என்ற நாடகம் அரங்கேறியது.

27 காட்சிகள் இந்நாடகம் நடந்தது.அருமையான கதை, நடிப்பு, பாத்திரப்படைப்புகள்

பின் கேட்பானேன்..தமிழ்த்திரை ரசிகர்களும் இந்நாடகத்தைக் காண வேண்டும் என வெள்ளித்திரைக்குத் தயாரானது.ஆகவே நாடகம் நிறுத்தப்பட்டது.இல்லையேல் மேலும் பல காட்சிகள் நடந்திருக்கும்

ஒரு அமெச்சூர் குழுவின் நாடகம் திரைக்கு வருவதைவிட, அந்நாடகத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிக்கிறார் என்றால்...எந்தக் குழுவிற்கு அந்நாளில் இப்பேறு கிட்டியிருக்கும்? யூஏஏவிற்குக் கிடைத்தது.

"பெற்றால் தான் பிள்ளையா" பார்மகளே பார் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது

ஒரு சிறு சோகம் என்னவென்றால், இந் நாடகத்தில், தனது பதினோராம் வயதில் சிறுவனாக  காலடி எடுத்து வைத்த மகேந்திரனால் திரையில் நடிக்க முடியவில்லை.காரணம் வெள்ளித்திரைக்கென செய்யப்பட்ட சில மாற்றங்களால்.

ஆனால், அதே நேரம் குழுவினருக்கு பெருமை ஏற்படக் காரணம், நாடகத்தில் 'மெக்கானிக் மாடசாமி" என்ற வேடத்தில் ஒரு நடிகர் நடித்தார்.அந்நடிகரே திரையிலும் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் நடிகர்திலகம்.
அப்படி சிவாஜி சொல்லி இப்படத்தில் அறிமுகமானவர் "சோ"ஆவார்

ஆக, இவ்வாண்டு யுஏஏ மற்றும் தனிப்பட்ட முறையில் மகேந்திரன் ஆகியோருக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது.

Monday, April 9, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 6

யூஏஏ ஆரம்பித்து 66 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இதுவரை இக்குழு அரங்கேற்றியுள்ள நாடகங்கள் 66.அதாவது சராசரியாக வருடம் ஒரு நாடகம்
நாடகங்கள் நடத்த சந்தர்ப்பங்கள் அரிதாகி வரும் நிலையில், இக்குழுவினர் மட்டும் அரங்கேற்றம் செய்யும் நாடகங்கள் வெகு எளிதில் நூறு காட்சிகள் நடத்துகின்றனரே! அது எப்படி? என ஆச்சரியப்படுபவர்களுக்கு என் பதில்..

சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம் என்பார்கள்.ஆம்., நம் நாடு சுதந்திரம் அடைய, எவ்வளவு தலைவர்கள் தியாகம் செய்துள்ளனர்?!

தியாகம், நாட்டுப்பற்று,நேர்மை, தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாத சேவை..இவையெல்லாம்தான் நம் நாட்டிற்கான சுதந்திரம் கிடைக்க மூலாதாராம்.

கிட்டத்தட்ட யூஏஏ வெற்றிக்கும் அதுதான் காரணம்.நாடகத்தின்பாற் பற்று, கடின உழைப்பு, குடும்ப நலனைவிட நாடக வளர்ச்சிக்கு அதிக நேரம் செலவிட்டது போன்ற தன்னலமற்ற சேவைகளே காரணம் எனலாம்

இனி இவர்கள் அரங்கேற்றிய நாட்கங்களைக் காண்போம்..

முதல் நாடகமாக, ஏ டி கிருஷ்ணசாமி என்பவர் எழுதிய வரதட்சணை அரங்கேற்றினர்.என்ன ஒரு பொருத்தம்.

நாடகத்தைத் தனது இரண்டாவது மனைவியாக எண்ணிய ஒய்ஜிபிக்கு வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டது யூஏஏ.,

இந்நாடகம் ஒருமுறை நடந்தது.வாழ்வில் திருமணமும் ஒரு முறைதானே நடக்கும்.

ஆனால், அந்நாளில், அமெச்சூர் குழுக்கள் , தங்களுக்குள் நாடகம் போட்டு, ஒருமுறை நடத்தித் திருப்தி அடைந்தனர்.அதற்கு இவர்களும் விதிவிலக்கல்ல.

இரண்டாவதாக அரங்கேறிய நாடகம் திரு டி.கே கோவிந்தன் என்பவர் எழுதிய.மனோரதம் ஆகும்.இந்நாடகம் 3 காட்சிகள்.

மூன்றாவது ஆர்.பார்த்தசாரதி என்பவர் எழுதிய, "கலை கொலை கேஸ்" அரங்கேற்றம் ஆனது.இந்நாடகம் பன்னிரெண்டு முறை நடந்தது

மேலே சொன்ன மூண்ரு நாடகங்களும் 1952ஆம் ஆண்டே அரங்கேறின.மூன்று நாடகங்களும் சேர்த்து அவ்வாண்டு 16 முறை இக்குழுவினர் மேடை ஏறினர்.

அடுத்து, பட்டு எழுதிய "It happened at Mid Nighat" என்ற திரில்லர் நாடகம்.48 காட்சிகள்.அடடா...என்னே ஒரு முன்னேற்றம்.

1954ல் பட்டுவும் ஏ டி கிருஷ்ணசுவாமியும் எழுதிய "Oh! What a Girl" 53 காட்சிகள் நடந்தது. 

Saturday, April 7, 2018

ஒய்ஜிபியும் யூஏஏ வும் - 5



தந்தை ஒய்ஜிபி தாய் ராஜம்மா மகன் மகேந்திரன் ஆகியவர்களின் நாடகப் பற்றிற்கு சற்றும் குறைந்ததில்லை மகேந்திரனின் மனைவியின் நாடகப் பற்று.
மகே ந்திரனின் குடும்பமும், சுதாவின் குடும்பமும் நீண்ட நாட்களாக குடும்ப நண்பர்கள்.
சுதாவும், சுதாவின் சகோதரி லதாவும் பத்ம க்ஷேசாத்ரி பள்ளியில் படித்து வரும் காலத்திலேயே, மகேந்திரன் நடத்திவந்த இசைக்குழுவின் பாடகர்கள்
பின் , திருமணம் முடிந்ததும், சுதாவிற்கு ஏர் இந்தியாவில் வேலை கிடைக்க, வசதியான அக்குடும்பத்திற்கு வேலை க்குப் போக வேண்டிய அவசியமில்லை.ஆனாலும், பெண்கள் சுதந்திரத்தில் தலையிட விரும்பாத ஒய்ஜிஎம், உனக்கு விருப்பமானால் வேலைக்குச் செல் என்றாராம்.

ஒய்ஜிபி , ராஜம்மாவிடம், திருமணமானதும், சமையலறை வேலையே வேண்டாம், வேறு சமுதாய நலப்பணி செய் என்று சொன்னது ஞாபகம் வருகிறதா?

மகேந்திரனும், பெண் சுதந்திரத்தில் அபப்டியே நடந்துக் கொண்டது..
"விதை ஒன்று விதைத்தால் சுரை ஒன்று முளைக்காது" என்ற சொலவடைக்கு ஏற்றார் போல் இருக்கிறது அல்லவா.

அதனால்தான் சுதாவினால் பின்னர் B.Ed., M.Ed., பட்டங்களை பின்னர் வாங்கி, பள்ளி நிர்வாகத்தில் திறம்பட பணியாற்ற முடிந்தது

பின், மலேசியாவில் ஒருசமயம் மகேந்திரனின் "ரகசியம் பரம ரகசியம்" நாடகம் நடைபெற்ற போது சுதாவும் அதில் நடித்தார்.குழ்ந்தை மதுவந்திக்கு ஒரு வயது
நாடகத்தன்று food poison ஆல் குழந்தைக்கு  உடல்நலம் சரியில்லாமல் போயிற்று.மருந்து, மாத்திரைகள்  கொடுத்து, குழ்ந்தையைப் பார்த்துக் கொண்டே , மேடைக்கு ஓடிப் போய் காட்சியில் நடித்து முடித்து, திரும்ப ஓடி வந்து குழந்தையைப்  பார்த்துக் கொண்டார் சுதா.
அவருக்கு நாடகங்களின் பால் உள்ள ஈர்ப்புக்கு இந்த ஒரு உதாரணம் போதும் அல்லவா?

நேர்மை, வேலையில் ஈடுபாடு, கடின உழைப்பு,முழுமையான சுதந்திரம் என பள்ளி நாட்கள் முதல் இன்றுவரை நடந்துவரும் மகேந்திரனையே , குடும்பமும் பின்பற்றிவருவதால்தான், மதுவந்தியும், பள்ளிநிவாகத்தையும், நாடக நடிப்பையும் இன்று வெற்றிகரமாக செய்து வருகிறார் 

Friday, April 6, 2018

ஒய்ஜிபி யும் யூஏஏ வும் - 4



ஒய்.ஜி.மகேந்திரனின்  திருமணத்துக்கும் நாடகமே உதவியது. மகேந்திரனின் பிரபலமான நாடகம் "பிளைட் 172.'' அந்த நாடகம் நடைபெறுகிறபோதெல்லாம், ஒரு பெண் தவறாமல் ஆஜராகி விடுவார்.
 ஒரு நாள் அவர் மகேந்திரனை சந்தித்து, "இந்த நாடகத்தை நான் தினமும் பார்ப்பது உங்களுக்காகத்தான்'' என்றார். அன்று பூத்த மகேந்திரன் - சுதா காதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.
சுதாவின் தம்பி ரவிராகவேந்தர், நடிப்புத்திறமை உள்ளவர். "இவர் நன்றாக நடிப்பார் அப்பா'' என்று அவரை தன் தந்தை ஒய்.ஜி.பி.யிடம் அறிமுகப்படுத்தினார், மகேந்திரன். இதன் விளைவாக ராகவேந்தருக்கு நல்ல நல்ல வேடங்கள் கிடைக்கலாயின. ஏற்கனவே மகேந்திரன் மீது சுதா கொண்டிருந்த அன்பு மேலும் அதிகமாகியது.
மகேந்திரன் - சுதா திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர். 1975 செப்டம்பரில் இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினார்கள். நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், நாடக - திரை உலகப் பிரமுகர்கள் பெருந்திரளாக வந்து வாழ்த்தினார்கள். மகேந்திரனின் குடும்பமே கலைக்குடும்பம். அனைவரும் நடிக்கக்கூடியவர்கள். அதற்கு சுதாவும் விலக்கல்ல.
ஒருநாள், "ரகசியம் பரம ரகசியம்'' என்ற நாடகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கச் சென்றபோது, கதாநாயகி வேடத்தில் நடிக்க மனைவி சுதா மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பதைப் பார்த்து திகைத்தார். அவர் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி சிரித்துக்கொண்டே, "இன்று வரவேண்டிய ஹீரோயின் வரவில்லை. அதனால் இவளை காலேஜிலே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, ஒத்திகை பார்த்து ரெடி பண்ணிவிட்டேன்'' என்றார்.
அதுமுதல், நாடகத்துக்கு எந்த நடிகையாவது வராவிட்டால், சுதாவே அந்த வேடத்தில் நடித்து விடுவார். ஒய்.ஜி.பார்த்தசாரதி, கடைசி மூச்சு உள்ளவரை நாடகத்தை நேசித்தவர். அவர் நாடகங்களில் நடிக்காத காலக் கட்டத்தில், மகேந்திரனின் நாடகங்களைப் பார்க்க வருவார்.
"வேல் வேல் வெற்றி வேல்'' நாடகத்தை பார்க்க வந்தபோது, மேடையில் சிலர் பேசிக்கொண்டு நின்றனர். அதனால் கோபத்துடன் சத்தம் போட்டுவிட்டு, வீட்டுக்குப்போய் விட்டார். மகேந்திரன் நாடகத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது, பார்த்தசாரதிக்கு பக்கவாதம் வந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு "கோமா''வில் இருப்பதாக தகவல் வந்தது. அந்த இக்கட்டான நிலையில், மகேந்திரன் நாடகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.
நாடகம் முடிந்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவைப் பார்த்தார். அவர் உணர்வற்ற நிலையில் இருப்பதைப் பார்த்து கலங்கினார். மறுநாள் மகேந்திரனின் நாடகம் நாகர்கோவிலில் நடப்பதாக இருந்தது. நாடகத்துக்கு போவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய மகேந்திரனால் இயலவில்லை. அதை தந்தையின் முடிவுக்கே விட எண்ணினார்.
"உங்களை இப்படியே விட்டு விட்டு, ஒப்புக்கொண்டபடி நாடகத்துக்கு நான் போகலாம் என்றால், என் கையை அழுத்துங்கள். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன்'' என்று தந்தையின் காதருகே குனிந்து சொன்னார்.
ஐந்து நிமிடம், அசைவற்று இருந்தார், ஒய்.ஜி.பி. பிறகு உடல் லேசாக அசைந்தது. ஒய்.ஜி.பி. தன் கையால், மகேந்திரன் கையை அழுத்தினார். "கோமா'' நிலையிலும், நாடகத்தை குறிப்பிட்டபடி நடத்திவிட வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருப்பதைக் கண்டு, கண்ணீர் விட்டார், மகேந்திரன்.
திட்டமிட்டபடி நாகர்கோவிலுக்கு சென்று நாடகம் நடத்தினார். திரும்பி வந்தபோது, தந்தையை சடலமாகத்தான் பார்த்தார். 


Monday, April 2, 2018

இனிக்கும் தமிழ்


அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் 'மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே' என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப் படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை...

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்
பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்...என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும்.அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் - அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

Saturday, March 24, 2018

உங்கள் குணம் மாற வேண்டுமா?

மனோபாவம்....
இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.

பின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா? கண்டிப்பாக முடியும்...

வெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.

வெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.

வெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.

ஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.

உங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்
வந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.

அவன்தான் உங்கள் தோழன்.

அவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.

Friday, March 23, 2018

திருக்குறள் - இன்பத்துப்பால்

109 தகையணங்குறுத்தல்

காதலனுக்கு தன் காதலி பற்றி எண்ணிக் கொண்டிருப்பதற்கும்,அவளை அழகை வியப்பதற்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.அன்றிலிருந்து இன்று வரை ஆண்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.வள்ளுவனின் இக்குறளைப் பார்த்தால்....

குறள்.- 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

உரை-

கனத்த காதணியை அணிந்துள்ள இவள் தேவ மகளோ! அல்லது அரியதோர் மயிலோ! மானிடப் பெண்தானோ இவள்.என் நெஞ்சு (இவளிடம்) மயங்கித் தவிக்கிறதே!

Thursday, March 22, 2018


கொஞ்சி விளையாடும் தமிழ்
-------------------------------------------------
நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...
வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.
மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்
தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்
முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக
நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.
(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)
இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...
என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.
மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.
இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.
பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு பக கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.
அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..
யானைத் தந்தம் போல
பிறை நிலா
வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா
அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா
இப்படி சொன்னதுடன் நிற்காவில்லை புத்துக்கவிதைகள்
ஒரு கவிஞர் சொல்கிறார்..
பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..
பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
-என்கிறார்..
யார் நிலை என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..
அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்

Thursday, March 15, 2018

ஆகாறு அளவிட்டதாயினும் கேடில்லை...

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்... 

Sunday, March 11, 2018

சவரக்கத்தி

லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் (வேறுயாருதாக இருக்கும்.மிஷ்கினின் பட நிறுவனம்தான்) சார்பில், மிஷ்கின் கதை, தயாரிப்பில் வந்துள்ள படம் "சவரக்கத்தி"
இப்போதுதான் பார்த்தேன்.ஒரு பொழுது போக்குக்கான படம் என்பதால் உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்

ராம் தான் படத்தின் கதாநாயகன்.வாயைத் திறந்தால் பொய்.தொழில் ,முடிதிருத்துபவர்

அவர் மனைவியாக, காது கேட்காமல் நிறைமாத கர்ப்பிணியாக பூரணா

மங்கா எனும் ரௌடி பாத்திரத்தில் மிஷ்கின்

பரோலில் வந்து இருக்கும் அவருக்கு அன்று மாலை 6 மணி யுடன் பரோல் முடிகிறது.

அத்ற்குள், தெருவில் காரில் செல்கையில், ராமுடன் ஒரு தகராறு.ராம் அடித்துவிட வாயில் ரத்தம் ஒழுக, மங்காவின் கூட இருக்கும் அல்லக்கைகள் ஏற்றிவிட, ராமை துரத்தி கொலை செய்ய வேண்டும் என்ற வெறியில் மிஷ்கின்

டஹ்ப்பித் தப்பிப் பிழைக்கும் ராம்.அவருக்கு இவ்வளவு நடிப்பு...அதுவும் நகைச்சுவையாக நடிக்க வருமா? ஆச்சரியப்பட வைக்கிறார்.

பூரணா..அந்தப் பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம்.இவர் திறமையை தமிழ்த் திரை நங்கு பயன் படுத்திக் கொள்ளலாமே!

மிஷ்கின், கேட்கவே வேண்டாம்..சொந்தப்படம் வேறு.கண்களை உருட்டி, மிரட்டி அசத்துகிறார்.

ராமை கொலை செய்ய எடுத்த கத்தி,ஒரு உயிர் பிறக்கவும் பயனாகிறது.

மிஷ்கினின் உடன் வருபவர்களும் கச்சிதம்.

பல இடங்களில் நம்மையும் மீறி வாய் விட்டு சிரிக்கிறோம்

இயக்குநர் ஆதித்யாவிற்கு முதல் படமாம்.பிரபலம் அதிகம் இல்லாத, அதெ சமயம் பாத்திரத்திற்குத் தகுதியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததால் வெற்றி பெற்றுள்ளார்.

குறைகளே இல்லையா? என்ற கேள்விக்கு..நிறைய சொல்லலாம்.ஆனாலும், அனைத்தையும் மறக்க வைத்துவிடுகின்றனர் நடிகர்கள்

இயக்குநரிடமிருந்து இனி இன்னமும் நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது

கொஞ்சி விளையாடும் தமிழ்

திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்



அப்பாலும் பாழென்று அறி .
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..



எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

Friday, March 9, 2018

6 அத்தியாயம்

ஆறு குறும்படங்கள்...தொகுத்து மொத்தமாய் ஒரு திரைப்படம்
1) சூப்பர் ஹீரோ (இயக்கம் கேபிள் சங்கர்)
2) இனி தொடரும் (ஷங்கர் வி தியாகராஜன்)
3) மிசை- (அஜயன் பாலா)
4)அனாமிகா (ரவி சுரேஷ்)
5) சூப் பாய் சுப்ரமணி (லோகேஷ்)
6) சித்திரம் கொல்லுதடி (ஸ்ரீதர் வெங்கடேசன்)

அமானுஷ்ய சக்தியை மையப்படுத்தி எடுத்தப் படங்கள்.
கிளைமாக்ஸ் ஒவ்வொன்றிற்கும் கடைசியில் சொல்லப்படுகிறது
புதிய முயற்சி.நல்ல முயற்சி.
ஆனாலும், ஏதோ குறைவது போல ஒரு உணர்ச்சி.
குறும்படத்தின் முடிவுகள், எதிர்பார்த்த முடிவுகளாகவே இருப்பதால், கிளைமாக்சில் உற்சாகம் குறைகிறது.
சித்திரம் கொல்லுதடி, வேண்டுமானால் சிறிது மாற்றத்தைத் தருகிறது.
கேபிள் ஷ்ங்கரிடம் இன்னமும் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது.சாத்னைகள் புரிவதில் வல்லவர்.
இனி தொடரும்...திகிலுக்கு பதில், சிரிப்புதான் வருகிறது
மிசை...எங்கோ படித்த கதை உணர்வைத் தருகிறது
அனாமிகா..பயந்து ஒடும் காட்சிகளை அருமையாக படம் பிடித்துள்ளனர்
சூப் பாய்...சற்றே புன்னகைக்க வைக்கிறது
சித்திரம் கொல்லுதடி...இயக்குநர், கடஹசிரியர் உழைப்புத் தெரிகிறது.ஆனால், பாடல் வரிகளில் மனம் செல்லாததால், முழுமையாக ரசிக்க முடியவில்லை
புதிய முயற்சி என்று சொன்னாலும், முடிவுகள் புதுமையாக இல்லாதது போலத்தான் தெரிகிறது


Thursday, March 8, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்


அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

கரிக்காய் பொரித்தாள்கன்னிக்காயைத் தீத்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப்பண்ணாள் – உருக்கமுள்ள
அப்பக்காய் நெய்துவட்டலாக்கினா ளத்தைமகள்
உப்புக்காண் சீசீ யுமி. (51)

கரிக்காய் பொரித்தாள் | காயைப் பொறித்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | காயைத் தீயிலிட்டு வாட்டினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | காயைப் பச்சடி பண்ணினாள்
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள் | காயை நெய்யிலிட்டுத் துவட்டினாள்
அத்தைமகள் | அவள் யாருமன்று, என் அத்தைமகள்
உப்புக்காண் சீ சீ யுமி | அத்தனையிலும் உப்பு. சீ சீ உமிழ்ந்துவிடு.

அகப்பொருள்
உடலுறவுப் பொருள்

கரிக்காய் பொரித்தாள் | கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்| உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
அத்தைமகள் | அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
உப்புக்காண் சீ சீ யுமி  | இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. அவளும் நானும் தழுவி எங்கள் உடம்பில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்றில் ஒன்று உமிழ்ந்துகொள்வதற்காக. 

Wednesday, March 7, 2018

தமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2

1917 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள்
1948ல் திருமதி ராஜம்மாளுடன் திருமணம்.
1950ல் பிறந்தார் மகேந்திரன்
அந்நாள் ஆணாதிக்கம் அதிகம் இருந்த நாட்கள்..ஆனால் அந்நாளிலேயே, ஒய்ஜிபி எவ்வளவு பரந்த மனப்பான்மையுட ன் இருந்தார், பெண்கள் முன்னேற வேண்டும் என நினைத்தார் என்பதற்கு ஒரு உதாரணம்

திருமணம் ஆகி வந்ததுமே, ராஜம்மாவிடம், "நீ சமையல் வேலையே செய்ய வேண்டாம்.சமையல் அறைக்குப் போக வேண்டாம்.வேண்டுமானால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பி.சமூக சேவை செய்" என கூறினார்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமதி ஒய்ஜிபி யே சொன்னார்.அத்துடன் மட்டுமல்லாது, "இதுநாள் வரை சமையல் அறைக்குச் சென்றதில்லை"என்றும் கூறினார்.

ஒய்ஜிபியின் பரந்த மனதினைப் பாருங்கள்

1952ல் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவினை ஆரம்பித்தார் என முன்னமேயே சொன்னோம்.அப்போது மகேந்திரனின் வயது இரண்டு.அந்த இரண்டு வயதில் ஆரம்பித்த குழுவினை, இன்று மகேந்திரன் கட்டிக் காத்து வ்ருகிறார் என்பதே சிறப்பு

ஒய்ஜிபிக்கு ஒழுக்கம், நேர்மை தவறாத  குணம் இருந்தது.அதையே, தன்  குழுவினரிடமும் எதிர்பார்ப்பார்.
யாராவது, நாடக ஒத்திகைக்கு தாமதமாக வந்தால், அவரை கண்டபடி திட்டிவிடுவார்.ஆனால், அடுத்த நிமிடமே,  வந்த கோபம் மறைந்து குழந்தையாய் ஆகிவிடுவார்.

அவரைப் புரிந்து கொண்டவர்கள்,ஒருநாள் ஒய்ஜிபி தங்களைத் திட்டவில்லையென்றால், அவருக்கு உண்மையிலேயே நம் மீது கோபமோ? என எண்ணிவிடுவர்

யூஏஏவில் நடித்து வெளியே வந்த பிரபலங்கள் பலர்..உதாரணமாக...ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, வித்யாவதி(சந்தியாவின் சகோதரி), லட்சுமி,நாகேஷ்,சோ, மௌலி,ஏ ஆர் எஸ்., விசு, ராதாரவி இப்படி நீண்டுக் கொண்டே போகும் பட்டியல்

ஒருசமயம் ஒய்ஜிபி ., மகேந்திரனிடம், ;"என் காலத்திற்குப் பிறகு, இக்குழுவினை நீ விடாமல் நடத்த வெண்டும்" என்ற உறுதிமொழியைப் பெற்றார்.அன்று தந்தைக்கு அளித்த உறுதிமொழியம், மகேந்திரன் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது

300க்கும் மேல் பட்ட படங்களில் நடித்திருந்தும், வருடம் 30 படங்கள் என்ற நிலை இருந்த போதும், தவறாமல், நாடகங்களை அவர் நடத்தி வந்தது/ வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

இனி வரும் அத்தியாயங்களில், யூஏஏவின் நாடகங்களைப் பார்ப்போம் 

Tuesday, March 6, 2018

தமிழ் நாடக மேடையும் யூஏஏவும் - 1

1 - தமிழ் நாடக மேடையும் யூஏஏவும்

-------------------------------------------------------------

                           (சங்கரதாஸ் சுவாமிகள்)
சங்ககாலம் முதல், தமிழ் நாடகங்கள் வேறு, வேறு நிலையில் வளர்ச்சியினைக் கண்டு வந்தன.
பல மன்னர்கள் ஆதரவில் நடிப்புக் கலை வளர்ந்தது.கலைஞர்கள் வளர்ந்தனர்.நாடமேடைக்கான அளவுகள், நடிகர்கள் நடிக்கும் போது மேடையில் இருக்க வேண்டிய நிலை.பேசப்படும் வசனங்கள், பேச வேண்டிய முறை என ஒவ்வொன்றான வரையறுக்கப் பட்டன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிவரை, பல நாடகக் குழுக்கள் செயல்பட்டு வந்தன.கிட்டத்தட்ட அனைத்துமே குருகுல வாசம் எனலாம்.அனைவருமே தொழில் முறை நடிகர்கள் ஆவார்கள்
சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், கன்னையா, பாலாமணி, கந்தசாமி முதலியார்,நவாப் ராஜமாணிக்கம்,டி.கே.ஷண்முகம் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவ்ர்கள் ஆவர்

இந்த நாடகக் குழுக்கள் தவிர்த்து, மேலும் என்.எஸ் கே., கே ஆர் ராமசாமி , சஹஸ்ரநாமம் போன்றவரும் நாடகங்கள் நடத்தினர்.
சுதந்திரத்திற்கு முன், தேசிய உணர்வை மக்கள் மத்தியில், நாடகங்கள் மூலம் இவர்கள் பரப்பினர்
ஆனால், சென்ற நூற்றாண்டின் இரண்டாம் பாதி,, அதாவது 1950க்குப் பின்னர் "தமிழ் நாடக மேடையின்"பொற்காலம் தோன்றியது எனலாம்
பல நாடகக் குழுக்கள் தோன்றின.பல சபாக்கள் தோன்றின.இந்த சபாக்கள், அங்கத்தினர்களைச் சேர்த்து.அவர்களிடம் இருந்து சந்தா வசூலித்து, அவர்களுக்கு மாதந்தோறும் நாடகங்கள் நடத்தி , இந்த நாடகக் குழுக்களுக்கு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்தனர்.
                                      ( கன்னையா)
திடீரென பல நாடகக் குழுக்கள் எப்படித் தோன்றின.அவ்வளவு தொழில் முறை நடிகர்களா? என்றால்..
இல்லை..பெரும்பாலானோர் அமெச்சூர்கள்.
அதிகாரிகளாகவும், வங்கி ஊழியர்களும்,தொழிலாளர்களும் என நடிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்.
ஆனால்...அமெச்சூர் குழுக்கள் தோன்ற, முதன் முதல் வித்திட்டவர் யார்? என சற்று எண்ணிப்பார்த்தால்...

                   (நவாப் ராஜமானிக்கம்)
அந்த மாபெரும் நாடக ஆர்வலர் ஒய் ஜி பார்த்தசாரதி என சொல்லலாம்.
மத்திய அரசில், முக்கியமான துறை ஒன்றில் அதிகாரியாய் பணிபுரிந்த இவர், தில்லியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்தார்.
1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்று அழைக்கப் பட்ட பட்டு என்ற நண்பரை தன்னுடன் இணைத்துக் கொண்டு "யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்" என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.
                          (டி.கே.ஷண்முகம்)
இனி வரும் அத்தியாயங்களில், அக்குழுவின் வளர்ச்சியும், ஆலமரமாய் மாறிய அக்குழுவிலிருந்து விழுதுகளாய் நிலத்தில் வேரூன்றிய குழுக்கள் பற்றியும் பார்ப்போம்

Saturday, March 3, 2018

சினிமாவிற்கு கதை எழுதுவது எப்படி.


சினிமாவிற்கு எழுதப்படும் கதைக்கு மூன்று வடிவம் நிலைகள் இருக்கின்றன..

முதலாவது அந்தக் கதையின் சுயவடிவம்.இரண்டாவது அக்கதையைச் சினிமாவிற்காக பண்படுத்துதல் அல்லது மாற்றி அமைத்தல்.இதைத்தான் 'டிரீட்மென்ட்' என்கிறார்கள்.மூன்றாவது படங்களாகவே கதையை எழுதுவது.இதை 'சினாரியோ' என்றும் 'ஸ்கிரிப்ட்' என்றும் சொல்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும்..ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது.அதேபோல ஒவ்வொரு கதையிலுமொரு தனித் தத்துவம் அல்லது அடிப்படையான கருத்து அடங்கி இருக்கிறது.ராமாயணத்தில் 'ஆதர்ஷ புருஷனின் லட்சணங்கள்' ஒரு அடிப்படைத் தத்துவம்.மார்க்கண்டேயன் கதை 'விதியை மதியால்' வெல்லலாம்..என்னும் அடிப்படைக் கருத்தின் மேல் கட்டப்பட்டது.கண்ணகி கதை 'ஒரு கற்புக்கரசியின் கோபம் உலகையே எரித்துவிடும்' என்ற கருத்தின் மேல் எழுந்தது.

எனவே, சினிமாவிற்குக் கதை எழுதுகிறவர் முதலில் அந்தக் கதையின் அடிப்படைக் கருத்து என்ன என்பதை முதலில் நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும்.அந்தக் கருத்தை விளக்கிச் சொல்வதற்காகத்தான் கதை எழுதப் படுகிறது.ஆகையால் கதையின் ஆரம்பம், வளர்ச்சி,முடிவு எல்லாம் அதை விளக்குவதற்காகவே அமைக்கப் பட வேண்டும்.

அதே போல.. கதை தங்குத் தடையின்றி மட மட என நகர வேண்டும்.அனாவசியமாக நிற்கக் கூடாது.ஒரு சம்பவத்திற்குப் பிறகு அடுத்தது...அதற்கடுத்தது என்று, நிற்காமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.படத்தில், கதையை நேருக்கு நேர் நடப்பது போலவே பார்ப்பதால் அது வேகமாக நகராவிட்டால் சலிப்புத் தட்டிவிடும்.ருசி குறைந்துவிடும்

(சிறுகதை எழுத்தாளர்,நாடக ஆசிரியர், சினிமா கதை,வசனகர்த்தா ஆகிய பி.எஸ்.ராமையா எழுதிய சினிமா என்னும் நூலிலிருந்து...
இப்புத்தகம் இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை.யாரிடமாவது இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்.தெரிவிக்கவும்.
பி.எஸ்.ராமையா நாலு வேலி நிலம், போலீஸ்காரன் மகள்..ஆகிய திரைப்படங்களின் கதைக்கு சொந்தக்காரர் ஆவார்)

குருதிப்புலன்

மனப் புண்ணை
நினைவுகள் எனும்
காக்கைகள்
கொத்திக்
கொத்திக்
குருதியை
கொட்டவைத்தன

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்


திருவள்ளுவ நாயனார் தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.
இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ
என்தூங்கும் என்கண் இரா.

Wednesday, February 28, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்


அப்பாலும் பாழென்று அறி .
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..



எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

ஆ(ற)ரத் தழுவினேன்



கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

Tuesday, February 27, 2018

வறுமைக் கோடு



குச்சிக் கால்கள்

எலும்பு துருத்தியகைகள்

ஒட்டிய கன்னம்

வயிற்று சுருக்கங்கள்

உருக்குலைந்த மேனி

இதில்

வறுமைக்கோட்டை

தீர்மானிக்கப் போகும்

அளவுகோல் எது

வெற்றியை அடையும் வழி

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.
எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.
ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..
என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.
ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.
எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.
எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.
வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை
(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)
பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.
வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

Monday, February 26, 2018

உணவும் செரிமானமும்

நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.

நாச்சியார் திருமொழி -3

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்தமலர்
முருக்கமலர் கொண்டு - (கல்யாண) முருங்கை மலர் கொண்டு
முப்போதும் முன்னாடி வணங்கி(த்)- மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று- உண்மையில்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து- மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை-(நீ  சொன்ன சொல் காப்பாற்றுபவன் எனும் எண்ணத்தை) உனை நெஞ்சிலிருந்து அகற்றி
வைதிடாமே- உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை-மலர்க் கொத்துக் கொண்ட அம்புகள் தொடுத்து
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி- கோவிந்தன் என அதில் பெயரினை எழுதி
வித்தகன்- பல வித்தைகள் கற்றவன்
வேங்கடவாணன் என்னும்- வேங்கடவன் என்ற பெயர் பெற்ற
விளக்கினில் புக என்னை-(என் வாழ்விற்கு வெளிச்சம் தரும்)விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே- எய்து விடேன்

(தனக்குக் கிடைத்த) ஊமத்த மலர், முருங்கை மலர் கொண்டு மூன்று பொழுதும் அவனது திருவடிகளை வணங்கி தொழுதவனை, பொய்யானவன். சொன்ன சொல் தவறியவன் என திட்டிவிடும் முன்னர் பூங்கணையைத் தொடுத்து வேங்கடவனிடம் என்னைப் புக வைத்துவிடு என் கிறார்

(முதல் இரண்டு பாடல்களில் கெஞ்சும் தோரணையில் சொன்னவர், இதில் சற்றே மிரட்டல் பாணியில் சொன்னது ரசிக்க வைக்கிறது)

Saturday, February 24, 2018

விதுர நீதியும்..வள்ளுவ நீதியும்


பீஷ்மர்..அம்புப் படுக்கையில் இருந்தபடியே தருமருக்குச் சொன்னது பீஷ்ம நீதி
கண்ணன், அர்ச்சுனனுக்கு உரைத்த நீதி ஸ்ரீமத் பாகவதம்
ஆனால்..
விதுரர், திரிதராஷ்டிரருக்குச் சொன்னவை விதுர நீதி
அதே போன்று..
வள்ளுவன் மக்களுக்கு சொன்ன நீதி திருக்குறள் என்ற பெயரில்..வள்ளுவ நீதி..
விதுரர் சொன்னதையும், வள்ளுவர் சொன்னதையும் தொகுத்து எளிய அழகுத் த்மிழில் நான் எழுதி வெளி வந்துள்ள நூல்
:விதுர நீதியும், வள்ளுவ நீதியும்"
திருவரசு பதிப்பகம் வெளியீடு
இப்புத்தகம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம்

நாச்சியார் திருமொழி= 2


பாடல் - 2

வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே

வெள்ளைநுண் மணற்கொண்டு - வெள்ளைநிறக் கோலப்பொடியைக் கொண்டு
வெள்வரைப்பதன் முன்னம்- வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்னர்
துறை படிந்து - குளத்தின் படித்துறைக்குச் சென்று.
முள்ளுமில்லாச் சுள்ளி எரி மடுத்து-முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை- முயன்று உன்னை
நோற்கின்றேன் காமதேவா-நோன்பு இருக்கின்றேன் காமதேவா
கள் அவிழ்- தேன் வடியும்
பூங்கணை- பூக்களால் செய்யப்பட்ட அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி-கடலின் நிறம் கொண்ட நீலவண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர்- பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு வடிவம் எடுத்து வந்த போது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் பகவென்னை- இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே- எய்து விடேன்


தெருவில் அழகான வெள்ளை நிறக் கோலப்பொடிக் கொண்டு கோலமிட்டு ,வெளிச்சம் வரும் முன் குளத்தின் படித்துறைக்குச் சென்று குளித்து, முட்களற்ற சுள்ளிகளை பொறுக்கி எடுத்து தீ மூட்டி காமதேவா! உன்னை நோற்கின்றேன் (நோன்பு இருக்கின்றேன்).தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு தொடுத்து அதில் கடல் நிறம் கொண்ட நீலவண்ணனின்   பெயர் எழுதி.புள்ளெனவந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை இலக்காகக் கொண்டு அடையுமாறு அதில் என்னையும் வைத்து எய்துவிடேன்

Monday, February 19, 2018

நாச்சியார் திருமொழி

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ  வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வெங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..

பொருள்
================
பாடல் - 1


தையொரு திங்களும்  - தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத்  தூய்மைப்படுத்தி
தரை மண் தலம் இட்டு- குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில்
                                                   இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல்                                                                         கொண்டு (கோலம்)
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து- தெருவில் இட்டு
                                                                           அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா  - காம தேவனே
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி- உன்னைத்                                                                                                           தொழுவதால்
உய்யலாமோ என்று எண்ணி- இந்தத் துன்பத்திலிருந்து
                                                               தப்பிக்கலாமோ என எண்ணி

உன்னையும் உம்பியையும்- உன்னையும் உன் தம்பியான
                                                             சாமனையும்
தொழுதேன்   - தொழுதேன்
வைய்யதோர் தழலுமிழ்- வெப்பமுடைய நெருப்பை உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு  - சக்கரத்தைக் கையில்
                                                        கொண்ட வேங்கடவனுக்கு என்னை  - என்னை
விதிக்கற்றியே- விதித்து விடேன் (அவனுக்கே உரியவள்
                                                                            என்றாக்கி விடேன்)

தை மாதம் முழுவதும் தரையைத் தூய்மைப் படுத்தி. குளிர்ந்த நீர்த் தெளித்த மண்தரையில் மாசி முதல் நாள்..தெருவில் அழகிய கோலமிட்டு அலங்கரித்து , காமதேவனே! உன்னைத் தொழுவதால் , இந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என எண்ணி, உன்னையும், உன் தம்பியுமான சாமனையும் தொழுதேன்.
வெப்பமுடைய நெருப்பை உமிழும் சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கு என்னை உரியவள் ஆக்கிவிடு.

Saturday, February 3, 2018

அடங்காத கை

சொன்னால்
கேட்பதில்லை
என் கை
எப்போதும்
ஏதேனும்
எழுது
எழுது
என
தொல்லை
கொடுத்துக்
கொண்டிருக்கிறது
எழுதுகோலோ
ஓய்வு
கேட்கிறது

Wednesday, January 10, 2018

காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.