Friday, November 21, 2014

குறுந்தொகை-161



தலைவி கூற்று
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் நக்கீரர்.

இனி பாடல்-
   
பொழுது மெல்லின்று பெயலு மோவாது
   
கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப்
   
புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி
   
அன்னா வென்னு மன்னையு மன்னோ

என்மலைந் தனன்கொ றானே தன்மலை
   
ஆர நாறு மார்பினன்

   
மாரி யானையின் வந்துநின் றனனே.


                            -நக்கீரர்.

   

    (ப-ரை.) தோழி,  சூரியனும் விளக்கம் இலனாயினன்; மழையும்,  ஒழியாமல், பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி, வேகமாகப் பெய்யும்;  அதற்கு மேல்,  தாயும், புலிப்பற் கோத்த தாலியை யணிந்த, புத்ல்வனைத் தழுவி அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது, தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன்,  மழையில் நனைந்த யானையைப் போல, இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; !  அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!

 

    (கருத்து) நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.

   

   

No comments: