Saturday, November 29, 2014

குறுந்தொகை-163




தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே; யாரால் வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் அம்மூவன்

இனி பாடல்-

யாரணங் குற்றனை கடலே பூழியர்
 
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
 
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
 
வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.


                                 -அம்மூவன்.

 

    (ப-ரை.) கடலே, பூழி நாட்டாரது, சிறிய தலையையுடைய,  வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற,  மீனை உண்ணும் கொக்குகளையுடைய,  சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து,  வெள்ளிய பூவையுடைய தாழையை,  அலைகள் அலைக்கின்ற, நடு இரவிலும்,  நினது ஆரவாரம் செவிப்படும்;  நீ யாரால் வருத்த மடைந்தாய்?



    (கருத்து) கடலே, நீ யார் பிரிவுபற்றி வருந்துகின்றாய்?

தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் கடலைப் பார்த்துத் தலைவி கூறியது இது. நள்ளிரவிலும் துயிலாமல் ஆரவாரம் செய்யும் கடலையும் தன்னைப் போன்றதெனக் கருதி,நான் ஒரு தலைவனால் வருந்துவது போல, நீயும் ஒரு தலைவனால் வருந்துகிறாய் போலும்! அத்தலைவன் யார்?” என்று வினவினாள்.

No comments: