Thursday, November 6, 2014

குறுந்தொகை-147



தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனவில் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கோப்பெருஞ் சோழன்

இனி பாடல்-


வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
 
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
 
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
 
இன்றுயி லெடுப்புதி கனவே

எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே.

என்பது தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது.

   
                                              -கோப்பெருஞ் சோழன்

   உரை-
வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினத் துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய தலைவியை கொணர்ந்து கொடுத்தாயைப்போல
இனிய துயிலினின்றும் எழுப்புகிறாய்.மனைவியைப் பிரிந்தோர் உன்னை இகழார்..கனவே




     (கருத்து) தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு என்ன கைம்மாறு செய்வேன்!



.

Wednesday, November 5, 2014

கனவு காண்பேன் கண்ணா...

               


அவள்

கனவை

விரும்புகிறாளாம்

நனவில்

நடக்காதவை

கனவில் நடப்பதால்..

ஊர்

முதிர் கன்னி என்கிறது

அவளை


குறுந்தொகை-146



தோழி கூற்று
(தலைவன் சான்றோரைத் தலைவியின் சுற்றத்தாருடன் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நம் இனத்தார்/சுற்றம் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வெள்ளிவீதியார்

இனி பாடல்-

 
அம்ம வாழி தோழி நம்மூர்ப
   
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
   
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
   
நன்றுநன் றென்னு மாக்களோ

டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

.                          -வெள்ளிவீதியார்.


   

உரை-

தோழி..கேள்...அவ்விடத்திலுள்ள நம்மைச் சார்ந்த குழுவில் உள்ளோர், தண்டைப் பிடித்த கையினரும், நரையையுடைய
தலைக்கண் துகிலையுடைவருமாகிய நன்று..நன்று எனக்கூறும் தலைவன் தமரோடு இந்நாள் நீங்கள் வரப்பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவர்.ஆதலால், நம் ஊரினிடத்து பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர்.


     (கருத்து) தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்.


Thursday, October 30, 2014

அழும் நீர்

         

வேகமாய்

தண்ணீர் வீழ்ந்ததில்

உண்டாகின

பல நீர்க்குமிழிகள்

அவை நொடியில்

பிரியப் போவதை எண்ணி

பாத்திரத்தினுள் வீழ்ந்த

நீர் அழுதது


குறுந்தொகை -145


தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்து சென்றது நீடிக்க அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு தங்குமிடமில்லை” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கொல்லனழிசி
   

இனி பாடல்-

.  
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
   
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி
   
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாட்
   
டுஞ்சா துறைநரொ டுசாவாத்

துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.


                                       =கொல்லனழிசி.

   உரை-

கடல் துறை பொருந்திய இந்தச் சிற்றூர் , கடற்கரையையுடைய சேர்ப்பனது கொடுமையை நினைந்து மிகுகின்ற துன்பத்தோடு துயரமுற்று நடுநிசியில் துயிலாமல் தங்குவாரை..ஏன்? எனக் கேட்காத துயிலுதல் பொருந்திய கண்களையுடைய மாக்களோடு நெடிய இரவை உடையது.அதனால் இது நாம் தங்கியிருக்கும் ஊர் அன்று


      (கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.

Tuesday, October 28, 2014

குறுந்தொகை-144



செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை -பாடலாசிரியர் கோடங்கொற்றன்

இனி பாடல்-
 
கழிய காவி குற்றுங் கடல
   
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
   
பிரிவி லாய முரியதொன் றயர
   
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்

பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
   
சென்மழை தவழுஞ் சென்னி
   
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

                   - கோடங்கொற்றன்

     உரை-

கழியினிடத்து மலர்ந்த காவிமலர்களைப் பறித்தும், கடலிலுள்ள வெள்ளிய தலையையுடைய அலையின்கண் விளையாடியும் மிக தன்னுடன் என்றும் பிரிதலில்லாத ஆயத்தார் தத்தமக்கு உரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கும் உடம்படாளாகி விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய வானத்தளவும் உயர்ந்த விளக்கத்தையுடைய குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டில் அப்பாலை நிலத்தில்
பருக்கைக்கற்கள் தன் பாதத்தின் அழகைச் சிதைக்கும் வண்ணம் தலைவி போயினள்.



     (கருத்து) தலைவி நம்மைப் பிரிந்து தலைவனுடன் சென்றனள்.

தியாகம்

           



பென்சில்

செய்யும் தவறெல்லாம்

அழித்து

அழியும்

அழிப்பானுக்கு

இணையுண்டோ

எத்தியாகமேனும்


குறுந்தொகை-143



தோழி கூற்று
(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்

இனி பாடல்-
 
அழிய லாயிழை யழிபுபெரி துடையன்
   
பழியு மஞ்சும் பயமலை நாடன்
   
நில்லா மையே நிலையிற் றாகலின்
   
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்

கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
   
தங்குதற் குரிய தன்றுநின்
   
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.


                          -  மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

     உரை-

தெரிந்து அணிந்த அணைகலங்களையுடையாய் பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன் நம்மைப்போல இரங்குதலை மிக உடையவன், பழியையும் அஞ்சுவான் நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகில் நிலைபெற்றதாதலின் நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய நீதியையுடைய நெஞ்சையுடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல நினது அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலை தங்குவதற்கு உரிமை உடையதன்று.ஆதலால் நீ வருந்தாதே!


      (கருத்து) தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.



( ‘நீ தலைவரைப் பிரிந்து இரங்குதலைப் போலவே அவரும் நின்னைப் பிரிந்தமையால் இரங்குவர்’ )
 
 (‘நின் பசப்புத் தங்குதற்குரியதன்று’ என்றதனால் போவதற்குரிய தென்பது பெறப்படும்: தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவிக்குப் பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு;)  

Monday, October 27, 2014

குறுந்தொகை-142


தலைவன் கூற்று
(தலைவியைப் பால் வயத்தனாகிக் கண்டு அளவளாவி நீங்கும் தலைவன், “என் உள்ளம் தலைவியினிடத்தே உள்ளது; இதனை அவள் அறிந்தனளோ, இலளோ!” எனக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கபிலர்


இனி பாடல்-

 
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
   
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
   
தானறிந் தனளோ விலளோ பானாட்
   
பள்ளி யானையி னுயிர்த்தென்

உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.

                       -கபிலர்

     உரை-

நடு இரவில் படுத்துத் தூங்கும் யானையைப் போல பெரு மூச்சு விட்டுக் கொண்டு என் நெஞ்சம் ,நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும் அவளிடத்திலேயே இருக்கின்றது.சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மாலையைக் கட்டி, தினைப் புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வீழும் கிளிகளை ஓட்டுகின்ற, பூவைப் போன்ற கண்களையுடைய பேதையாகிய அத்தலைவி இதனை அறிவாளோ? மாட்டாளோ?


     (கருத்து) என் உள்ளம் தலைவியின்பால் உள்ளது.

 . (தனது நெஞ்சம் அவளிடத்தே பொருந்தியிருப்பதை அறியாமையின், ‘பேதை’ என்றான்.)

Saturday, October 25, 2014

குறுந்தொகை-141



தலைவி கூற்று
(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைப் பெருங் கொல்லன்.

இனி பாடல்-
 
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
   
செல்கென் றோளே யன்னை யெனநீ
   
சொல்லி னெவனோ தோழி கொல்லை
   
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த

குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
   
ஆரிரு ணடுநாள் வருதி
   
சார னாட வாரலோ வெனவே.

                            -மதுரைப் பெருங் கொல்லன்.

  உரை-

(தோழி) மலைப்பக்கத்தையுடைய நாட...கொல்லையிலுள்ள நெடிய கையையுடைய யானையினது கடிய பகையினால்
வருந்திய குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல ஆண்புலியானது, பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும்..வருதற்கரிய இருளையுடைய நடு யாமத்தில் வருகின்றாய்.அப்படி வருதலை ஒழிப்பாயாக!வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை விளைந்த தினையிடத்துப் படாமற் கடியும் பொருட்டு நம் தாய் செல்வீராக என்றாள்.என தலைவனுக்குக் கூறின் குற்றம் என்ன? (நீ சொல்வதில் தவறில்லை)
   
   
     (கருத்து) தலைவரை இனிப் பகலில் சந்திக்க வரும்படி நீ சொல்ல வேண்டும்.

Friday, October 24, 2014

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

தமிழ்த் திரையுலகின் பழம் பெரும் நடிகரும், அழகாம உச்சரிப்புடன் தமிழ் பேசியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று நம்மிடையே இல்லை.
அவரைப் பற்றி "தமிழா தமிழா" வில் நான் எழுதியுள்ளதை கீழ்கண்ட சுட்டியில் பார்க்கவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

http://tvrk.blogspot.com/2009/02/blog-post_08.html

குறுந்தொகை-140


தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்த காலத்தில் அவனுடைய பிரிவினால் துன்புற்ற தலைவியை நோக்கி, “நீ ஆற்றாமல் இருக்கின்றாய்” என்று தோழி இரங்க, “இவ்வூர் இப்பொழுது நான்
படுந்துன்பத்தை எங்ஙனம் அறிந்தது?” என்று முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
வேதின வெரிநி னோதி முதுபோத்
   
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
   
சுரனே சென்றனர் காதல ருரனழிந்
   
தீங்கியான் றாங்கிய வெவ்வம்

யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.


                           -அள்ளூர் நன்முல்லை.

  உரை-  

தலைவன், கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓந்தியானது வழிச் செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளுமாறு தங்குகின்ற பாலைநிலத்திற் சென்றனர்.வலிமை இழந்து, அவர் பிரிந்த பிறகு இங்கு இருந்து நான் பொறுத்துக் கொண்டுள்ள துன்பத்தை இரங்குதலையுடைய இவ்வூர் எவ்வாறு அறிந்தது.



     (கருத்து) தலைவர் பிரியுங் காலத்து அவரைச் செல்லாதவாறு செய்யாமல் இப்பொழுது என்னை, “நீ ஆற்றுகின்றிலை” என்று கூறிப் பயனில்லை.

    (ஓந்தி- சுமைதூக்கி)

   


Thursday, October 23, 2014

குறுந்தொகை-139



தோழி கூற்று
(விலைமகள் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் விலைமகள் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வர வேண்டாம்.” என்று கூறியது.)

மருதம் திணை-பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தியார்


இனி பாடல்-


மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
   
வேலி வெருகின மாலை யுற்றெனப்
   
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
   
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்

கின்னா திசைக்கு மம்பலொடு
   
வாரல் வாழிய ரையவெந் தெருவே.

                               -ஒக்கூர் மாசாத்தியார்.

   உரை-

இல்லத்தில் வாழும் கோழியினது குறிய காலையுடைய பேடையானது , வேலிக்கு வெளியில் காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை அழைத்துக் கூவினற் போல இன்னாததாகி  விலைமகளால் கூறப்படும்பழி மொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக! நீ வாழ்க.


  (கருத்து) எம் தெருவிற்கு வந்தால் விலைமகள் பழி கூறுவார்.


     தன்னாற் பாதுகாக்கப்பட்ட பிள்ளையை  கவருமோ வென்னும் அச்சத்தினால் கோழிப் பேடை கூவியது போலத் தம்பால் இருந்து வந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ வென்னும் அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறினரென்று கொள்க.

Wednesday, October 22, 2014

குறுந்தொகை-138



தோழி கூற்று
(முதல்நாள் உரிய இடத்தே வந்து தலைவியைக் காணாத தலைவன் மறுநாள் கேட்கும் அணிமையில் நிற்பதை அறிந்த தோழி, “நேற்றிரவு தலைவரது வரவை எதிர்நோக்கித் துயிலாமல் இருந்தேம்; அவர் வந்திலர்” எனக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கொல்லன் அழிசி

இனி பாடல்-

 
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
   
எம்மி லயல தேழி லும்பர்
   
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
   
அணிமிகு மென்கொம் பூழ்த்த

மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.



                 -கொல்லன் அழிசி.

    உரை-

எமது வீட்டின் அயலதாகிய ஏழிற்குன்றத்தின் மேலுள்ள மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்தையுடைய நொச்சியினதுஅழகு மிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணி போன்ற மலர்களின் ஓசையை மிகக் கேட்டு பெரிய ஊரிலுள்ளோர் தூங்கினாலும் நாங்கள் தூங்கமாட்டோம்.

   

     (கருத்து) நேற்றுத் தலைவரை யாம் எதிர் நோக்கியிருந்தோம்.

   
     தலைவன் கேட்கும் அண்மையில் இருப்பதை அறிந்த தோழி, “ நேற் றிரவு நாம் துயிலாமல் தலைவரது வரவை எதிர்நோக்கி இருந்தோம். ஊரினர் யாவரும் துயின்றனர். நாங்கள் தூங்கவில்லை..வீட்டுக்கு அருகிலுள்ள ஏழிற் குன்றத்தின்மேல வளர்ந்த நொச்சியின் மலர் உதிரும் ஓசையும் எம் காதில் விழுந்தது. தலைவர் வந்தால் நாம் நன்கு அறிந்திருப்போம். அவர் வந்திலர்” என்று கூறியது. 

Tuesday, October 21, 2014

கருவறை

                         


கோயில்

கருவறைக்குள்

கற்சிலைகளைப் பார்த்து

கன்னத்தில் போட்டுக் கொண்டவன்

பத்து மாதம் தன்னைச் சுமந்த

கருவறைக்காரியைக் காண

கருணை இல்லம்

செல்லாததேன்!


குறுந்தொகை-137



தலைவன் கூற்று
(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் பெருங்கடுங்கோ.
   
இனி பாடல்-

 
மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப
   
நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந்
   
திரவலர் வாரா வைகல்
   
பலவா குகயான் செலவுறு தகவே.

                      - பாலை பாடிய பெருங்கடுங்கோ.
உரை-

மென்மைத் தன்மையையுடைய அரிவையே! நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த நின்னைப் பிரிந்து சென்று, சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின் ,நான் அங்ஙனம் செல்வதற்கு தக்க வினையின் கண் என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பலவாகுக



 (கருத்து) நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.

 
 


Monday, October 20, 2014

ஐஸும்..காரியமும்

                           

ஐஸ் வைத்தால்
காரியம் ஆகுமாம்
யார் சொன்னது?
அவன் அதுவானதும்
ஐஸ் வைக்கப்பட்டதில்
அவன்
காரியம் தான்
ஆயிற்று
இவர்கள் செலவில்


குறுந்தொகை-136



தலைவன் கூற்று
(“நீ காம நோயுறல் தகாது” என்று பாங்கனை நோக்கித் தலைவன், “காமம் யாவரிடத்தும் இயல்பாக உள்ளதே; ஆயினும் அது வெளிப்படற் குரியதொரு காலத்தை யுடையது” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்

இனி பாடல்-

 
காமங் காம மென்ப காமம்
   
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
   
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
   
குளகுமென் றாண்மதம் போலப்

பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே.


                               -மிளைப்பெருங் கந்தன்.

   உரை-

காமம், காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்.அக்காமமானதுபுதியதாகத் தோற்றும் வருத்தமும் நோயும் அன்று.நுண்ணிதாகி கடுத்தலும் மிகுதலும் குறைதலும் இலது.யானை தழையுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.
   


  (கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.

     (தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.)

Sunday, October 19, 2014

இல்லை...

       
                     

இரு கைகளைக் கூப்பி

இறைவனை

இன்னமும் வேண்டி

இறைஞ்சினான்

இல்லை என்பானுக்கு

இல்லை என்று சொல்லியவன்




Saturday, October 18, 2014

குறுந்தொகை-135



தோழி கூற்று
(தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)

பாலைத்திணை- பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

இனி பாடல்-
 
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
   
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென
   
நமக்குரைத் தோருந் தாமே
   
அழாஅ றோழி யழுங்குவர் செலவே.


                           -பாலைபாடிய பெருங்கடுங்கோ.

உரை-

தோழி.....தொழில்தான் ஆண்களுக்கு உயிர் ஆகும்.ஒளி பொருந்திய நெற்றியையுடைய இல்லின் கண் உறையும் மகளிர்க்கு கணவன்களே உயிர்  ஆவாரென்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத் தலைவரே! ஆகவேஅழுதலை ஒழிவாயாக! அவர் செல்லுதலை தவிர்ப்பார்


    (கருத்து) தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.

Friday, October 17, 2014

ஆதரவான மழை...



                                                     

இயற்கை அன்னை

செய்வதறியாது

தவிக்கிறாள்...

மழை பெய்தால்

ஆளுங்கட்சிக்கு

ஆதரவாய் மழையாம்..

வெயில் அடித்தால்

யாருக்கு ஆதரவாம்..

புரியாது விழிக்கிறாள்

யாரை ஆதரிப்பது என

அறியாத

அரசியல் கூலிகள் போல..

குறுந்தொகை -134



தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்டப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிப்ப அத்தோழியை நோக்கி, “தலைவன் பிரியாமல் இருப்பின் அவனது நட்பு நன்று; பிரிவுண்மையின் வருத்தம் உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கோவேங்கை பெருங்கதழ்வன்

இனி பாடல்-

 
அம்ம வாழி தோழி நம்மொடு
   
பிரிவின் றாயி னன்றுமற் றில்ல
   
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
   
பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக்

கல்பொரு திரங்குங் கதழ்வீ ழருவி
   
நிலங்கொள் பாம்பி னிழிதரும்
   
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.

                           -கோவேங்கைப் பெருங்கதழ்வன்.

உரை-

தோழி...ஒன்று கூறுவேன்..கேட்பாயாக...குறிய கற்களினிடத்தே பருத்து வளர்ந்த உயர்ந்த அடியையுடைய வேங்கை மரத்தினது மலர்களையுடைய அசைந்த கிளைகள், அம்மலர்களை நீங்கித் தனிக்கும்படி அடித்து கற்களை அலைத்து
ஒலிக்கும் விரைந்து வீழும் அருவியானது நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப்போல இறங்குதற்கிடமாகிய ஒன்றற் கொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு மணந்ததால்
உண்டான தொடர்பு ,தலைவனுக்கு நம்மோடு பிரிவு இல்லாவிடில் நிச்சயமாக நன்றாகும்.அதுவே என் விருப்பம்.
   

     (கருத்து) தலைவன் பிரிவை நான் ஆற்றேனாயினேன்.



     (அருவியின் அருகில் வளர்ந்ததாதலின் வேங்கை பருத்தும் உயர்ந்தும் பூக்கள் மலிந்தும் விளங்கியது. அருவி தாக்குதலால் பூக்கள் உதிர்ந்தன; அதனால் சினை தனிமை யுற்றது. கதழ்வீழ் அருவி - கதழ்ந்து வீழும் அருவி;)

Thursday, October 16, 2014

குறுந்தொகை-133



தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுங்காலம் இருந்ததால், வருந்திய தலைவி, “என் நலத்தை இழந்தும் தலைவர் வரைவாரென்னும் கருத்தினால் இன்னும் உயிர்தாங்கி நிற்கின்றேன்” என்று கூறியது.)


 குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் உறையூர் முதுகண்ணன் சாத்தன்

 
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை

கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
   
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
   
உரஞ்செத்து முளெனே தோழியென்

நலம்புதி துண்ட புலம்பி னானே.


                   -உறையூர் முதுகண்ணன் சாத்தன்.

    உரை-
தோழி, குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப்போன்ற சிறு தினையினது கதிரை கிளி ஒடித்து உண்ணுதலால் கூழையாகிய தாள் பெரிய மழை உண்டானமையால் மீண்டும் இலை தழைத்தாற் போல தலைவர் எனது பெண்மை நலத்தைப் புதிதுண்டமையால் உண்டாகிய தனிமை வருத்தத்தோடு எனது வலி அழிந்தும் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன்.




     (கருத்து) தலைவர் மணப்பார் என இன்னும் உயிர் தாங்கி நிற்கின்றேன்.

     பெரும்பெயல் நீட்டிப்பின் தினை மீண்டும் கதிர் விடுதல் போலத் தலைவன் வந்து மணப்பானானால்  என் நலனை மீண்டும் பெறுவேன் (எனத் தலைவி தோழியிடம் கூறினாள்).

     குறிஞ்சி நிலத்தினளாகிய தலைவி தினைப்புனங்காத்துக் கிளியோப்பிய பழக்கத்தினால் தான் அறிந்த உவமையையே கூறினாள்.

Wednesday, October 15, 2014

மனம் வெளுக்க

           

வானத்தில்

கருமேகம் வலம் வருகிறது

அப்படியே

என் மனதைக் காட்டிடும்

கண்ணாடி போல

மழை வந்தால்

வானம் வெளுக்கலாம்

என் மனம் வெளுக்க....



குறுந்தொகை-132



தலைவன் கூற்று
(பேரறிவுடைய நீ ஒரு மகள் திறத்து உள்ளமுடைதல் அழகோவென இடித்துரைத்த பாங்கனை நோக்கித் தலைவியின் இயல்பும் வனப்பும் கூறி, “ இத்தகைய தன்மையுடையாளை நான் எப்படி மறப்பேன்!” என்று தலைவன் சொல்லியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்

இனி பாடல்
 
கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
 
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
 
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
 
கடுஞ்சுரை நல்லா னடுங்குதலைக் குழவி

தாய்காண் விருப்பி னன்ன்
 
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.

என்பது கழற்றெதிர்மறை.

                     - சிறைக்குடியாந்தையார்

உரை-
 தோழனே! மாமையையுடைய தலைவி தழுவுவதில் விரைவுடையவள்.விருப்பம் தரும் வனப்பை யுடையவள்.குவிதலையுடைய மெல்லிய மார்பகங்களை உடையவள்.நீட்சியையுடைய கூந்தலையுடையவள்,
பக்கத்தில் மேயச் சென்ற மிக்க சுரப்பையுடைய நல்ல பசுவினது ,நடுங்கும் தலையையுடைய கன்று அத் தாய்ப்பசுவைக் கான வேண்டும் எனும் விருப்பத்துடன் இருந்தாற் போன்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பர்வையையுடையவள்.அப்படிப்பட்டவளை எப்படி மறந்து இருப்பேன்!




     (கருத்து) தலைவி மறத்தற்கரிய இயல்புடையவள்.


     ‘கன்று பசுவைப் பார்த்திருத்தலைப் போன்ற விருப்புடையளாதலினாலும், மனங்கவரும் இயல்பினளாதலினாலும் அவளை மறந்து அமைதல் அரிது’ என்று தலைவன் கூறினான்.
     தலைவனுக்குப் பசுவும், தலைவிக்குக் கன்றும் உவமை

Tuesday, October 14, 2014

குறுந்தொகை-131



தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்றபின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.)

பாலைத்திணை - ஓரேருழவனார்

இனி பாடல்-


ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட்
   
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
   
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே
   
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்

தோரே ருழவன் போலப்
   
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே.

                       -ஓரேருழவனார்

உரை-

அசைகின்ற மூங்கிலை ஒத்த அழகினையும் பருமையையும் உடைய தோளையும் ,பெரிய அமர்த்தலையுடைய கண்களையும் பெற்ற தலைவி இருந்த ஊர், நெடுந்தூரத்தில் உள்ளது.எனது நெஞ்சானது ஈரம் உண்டாகிய செவ்வியையுடைய பசிய புனத்தையுடைய ஒற்றை ஏரையுடைய உழவனைப் போல பெரிய விரைவை அடைந்தது.அதனால் வருந்துகிறேன்.



       (கருத்து) யான் கூறிவந்த பருவம் வந்தமையின் என் நெஞ்சம் தலைவியை அடைய அவாவுகின்றது.

        (ஓரேர் உழவன், ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்ற தென்றான்.)

Monday, October 13, 2014

குறுந்தொகை-130



தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் இவ்வுலகில் எங்கேனும் ஓரிடத்தில் இருப்பார்; அவரைத் தேடித் தருவேன்” என்பதுபோலத் தோழி கூறியது.)

பாலைத்திணை- பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-

 
நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
 
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
 
நாட்டி னாட்டி னூரி னூரிற்
 
குடிமுறை குடிமுறை தேரிற்

கெடுநரு முளரோநங் காத லோரே.

              -வெள்ளிவீதியார்

உரை-

   நம்முடைய தலைவர் சித்தி பெற்ற சாரணரைப்போல பூமியைத் தோண்டி உள்ளே புகார்.ஆகாயத்தின் கண் ஏறார்.குறுக்கிடுகின்ற பெரிய கடலின் மேல் காலினால் நடந்து செல்லார்.நாடுகள் தோறும், ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ ?(இல்லை)

 
          (கருத்து) தூதுவிட்டுத் தலைவரைத் தேடித் தருவேன்.



    “நம் தலைவர் இவ்வுலகத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலுள்ள ஓரூரில் ஒரு குடியில் இருப்பர்; சாரணரைப் போல இவ்வுலகுக்குப் புறம்பே செல்பவரல்லர்; ஆதலின் எல்லா நாட்டிலும் உள்ள ஊர்கள் யாவற்றிலும் அமைந்த குடிகளையெல்லாம் தேடின் அகப்படாமற் போதற்கு நியாய மில்லை; அங்ஙனம் தேடித் தருவேன். நீ வருந்தற்க” என்று தோழி, தலைவியை ஆற்றுவித்தாள்.

   
(வரலாறு

     இச்செய்யுளைப் பாடிய வெள்ளி வீதியார் தம்முடைய கணவனைத் தேடித் திரிந்தார் என்றதொரு செய்தி,)
  

Friday, October 10, 2014

அழுத மரம்

                                 


ஊர் எல்லையில்

ஓர் அரசமரம்..

மேடை மீது

ஏறிய மரம்...

வெயிலுக்கு நிழல்

கொடுத்த மரம்...

பஞ்சாயத்து பல செய்ய

இடமளித்த மரம்...

வெட்டப்பட்ட போது

பஞ்சாயத்து செய்ய

யாருமின்றி

அழுத மரம்.


குறுந்தொகை=129


தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “ உனக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக் காரணம் யாது?” என்றவழி, “ஒரு மங்கையின் நுதல் என் உள்ளத்தைப் பிணித்தது” என்று தலைவன் கூறியது.)


நெய்தல் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்

இனி பாடல்-

எலுவ சிறாஅ ரேமுறு நண்ப
   
புலவர் தோழ கேளா யத்தை
   
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப்
   
பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
   
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே.

                  - கோப்பெருஞ்சோழன்
    உரை-

(தோழா) இளைஞர் இன்புறுதற்குக் காரணமாகிய நட்பையுடையோய் அறிவிடையாருக்குத் தோழா கேட்பாயாக! ஓரிய கடலின் நடுவில் எட்டாந் திதிக்குரிய இளை வெள்ளிய சந்திரன் தோன்றியதைப்போல, ஒரு மகளின் கூந்தலுக்கு அயலில் விளங்குகின்ற சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப்போல எம்மைப் பிணித்தது.

        (கருத்து) ஓர் அழகிய மகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தாள்.

 

Thursday, October 9, 2014

அது

                         


கிடைத்ததைக் கண்டு

மகிழ்ச்சியடை...

எது உனக்குக் கிடைத்ததோ

அதன் மதிப்பை

அறியாய் இன்று நீ

அதை இழந்த பின்னர்

உணர்வாய்....

அதற்குள்

உன்னைவிட்டுச் சென்றிருக்கும்

அது

Wednesday, October 8, 2014

குறுந்தொகை-128



தலைவன் கூற்று
(தலைவன் தலைவியை வழக்கமாய் சந்திக்கும் இடத்தில் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்பதற்கு அரியவள்; நீ துன்புற வேண்டியதுதான்” என்று கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-
.  
குணகடற் றிரையது பறைதபு நாரை
   
திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை
   
அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்
   
சேய ளரியோட் படர்தி

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.

                 -பரணர்

உரை-

(நெஞ்சே! கீழ்கடல் அலைக்கு அருகில் உள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப் பெற்ற நாரை,திண்மையாகிய தேரையுடைய சேரனது, மேற்கடற்கரையில் அமைந்த தொண்டி என்னும் பட்டினத்தின் கடல் துறையின் முன் உள்ள அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும் பொருட்டு தலையை மேலே எடுத்தாற்போல நெடுந்தூரத்தில் உள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை பெறுவதற்கு நினைந்தாய்.நீ வருத்ததையுடைய துன்பத்திற்குக் காரணமாகிய உழ்வினையுடையை


   (கருத்து) இனித் தலைவியை நான் அடைய முடியாது

   

குறுந்தொகை -127


தோழி கூற்று
(தலைவன் தலைவியின்பால் பாணனைத் தூதாக விட்டுத் தான் பின் நிற்பத் தோழி அவனை நோக்கி, “நின்பாணன் பொய்யனாயினன்; அதனால் பாணர் யாவரும் பொய்யர் போலுமென எண்ணுவே மாயினேம்” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஓரம் போகியார்

இனி பாடல்-

 
குருகுகொளக் குளித்த கெண்டை யயல
   
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
   
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
   
ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாண ரெல்லாம்
   
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

                      -ஓரம் போகியார்
   
உரை-

நாரை கவர்ந்து கொள்ள அதன் வாயினின்று நிருட் குளித்த கெண்டை மீன் அயலாதாகிய நிறம் பொருந்திய தாமரையின் வெள்ளிய அரும்பை .அஞ்சும் வயல் பக்கங்களையுடைய காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடைய தலைவ.. நின் பாணன் ஒருவன் பொய்யனானமையால் மற்றுள்ள பாணர்கள் அனைவரும்.நீ அகன்றதால்தனித்திருக்கும் மகளிருக்கு பொய்யரைப் போலத் தோன்றுவர்.                                                

   
 (கருத்து) நின் தூதுவனாகிய பாணன் பொய்யன்.

     (வி-ரை.) குருகு - கொக்குமாம். குளித்தல் - மறைதல். உரு - அச்ச முமாம். தாமரை - இங்கே வெண்டாமரை.

     (நாரையாற் கௌவப்பட்டுத் தப்பி நீருட் குளித்த கெண்டை மீண்டும் நீரின்மேல் எழும்போது தாமரை முகையை அந்நாரையென்றே கருதியது; “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழி இங்கே நினைத்தற்குரியது.)

       (“தலைவன் நினை மறப்பானல்லன்; அவர் தூய ஒழுக்கமுடையவன்” என்று அப்பாணன் தலைவிபாற் கூறிய பொய்க் கூற்றுக்களைக் கேட்ட வளாதலின் ஒரு நின்பாணன் பொய்யனாக வென்றாள். நின்பாணன் கூறுவனவெல்லாம் பொய்யென்னும் தன் கருத்தையே சமற்காரமாகப் புலப்படுத்தி வாயில் மறுத்தாள்.)

Tuesday, October 7, 2014

"ல"

                   


நானும்

"ள" வும்

சகோதரர்கள்

ஆனால் உங்களில்

பலர் "ள"என என்னையும்

"ல" என அண்ணன் 'ள" வையும்

அழைப்பதால்..

யாரை அழைக்கிறீர்கள்

என குழப்பம்

எங்களுக்குள்

நாக்கை மடக்கி

முன் பற்களின் பின்

வைத்து அழையுங்கள்

நான் வருவேன்

நாக்கை மடக்கி

பின்னால் அண்ணத்தில்

அழையுங்கள்

அண்ணன் வருவான்..

செய்வீர்களா? நீங்கள்

செய்வீர்களா!


குறுந்தொகை- 126



தலைவி கூற்று
(தலைவன் மீண்டுவருவேனெனக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த பின்பும் அவன் வாராமையால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; முல்லைக் கொடிகள் அரும்பின; தலைவர் இன்னும் வந்திலர்” என்று கூறியது.)

முல்லைத் திணை - பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
 
இவணும் வாரா ரெவண ரோவெனப்
 
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
 
தொகுமுகை யிலங்கெயி றாக

நகுமே தோழி நறுந்தண் காரே.

               -ஒக்கூர் மாசாத்தி.

  உரை-
(தோழி) இளமையது அருமையைப் பாராராகி .பொருளை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர் இவ்விடத்தும் மீண்டு வந்திலர்.எவ்விடத்தில் உள்ளாரோ என்று நான் எண்ணியிருக்க, நறிய தண்ணிய கார் காலத்தில் மழையாற் பாதுகாக்கப்பட்ட பூவையுடைய முல்லைக்கொடியினது தொகு முகைகளை விளங்குகின்ற தன் பற்களாகக் கொண்டு நம்மைப் பிரித்துச் சிரிக்கும்.

(கருத்து) கார்காலம் வந்துவிட்டது; தலைவர் வந்திலர்.

 

     (தொகுமுகையாகலின் பல்வரிசையை ஒத்தன. முல்லைமலரால் நறுமையும் பெயலால் தண்மையும் உடைமையின் நறுந்தண் காரென்றாள்;)

Monday, October 6, 2014

"ழ"

                   
தமிழின் சிறப்பு

"ழ" கரமாம்..

அது வரும் சொல் அனைத்தும்

இனிமையாம்/

குழல்

குழவி

மழலை

பழம்..

இப்படியாக..

ஊழலிலும் "ழ" கரம் இருக்கின்றதே

என்றிட்டேன்

ஊழல் புரிந்த கட்சிக்கு

எதிர்க்கட்சிக்கு இது

இனிமைதானே!

என்றனர்...

வா"ழ்"த்திவிட்டு..

வி"ழி" த்தபடியே திரும்பினேன்.


குறுந்தொகை-125




தலைவி கூற்று
(தலைவன் மணம் செய்யாமல் நெடுநாள் இருந்ததால் வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி, தலைவன் என் நலம் கொண்டான்; அந்நலம் என்னைப் பிரிந்தது. நான் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்கின்றேன்” என்று கூறித் தலைவன் மணக்காவிடின்  உயிர் நீங்குமென்ற குறிப்பை உணர்த்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவன்

இனி பாடல்-
 
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
   
உளெனே வாழி தோழி சாரற்
   
றழையணி யல்குன் மகளி ருள்ளும்
   
விழவுமேம் பட்டவென் னலனே பழவிறற்

பறைவலந் தப்பிய பைத னாரை
   
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
   
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.

 
                             - அம்மூவன்
உ ரை-.

(தோழி) மலைச்சாரலில் விளைந்த தழையினாலாய உடையை அணியும் பெண்மை அழகுடைய மகளிர் யாவரினும், விழாவைப்போலச் சிறப்பெய்திய எனது பெண்மை நலம்,பழைய விறலையுடைய சிறகின் வன்மை தவறியதனால் உண்டாகும் துன்பத்தையுடைய  நாரை,அலைகள் தோயப் பெற்ற வளைந்த மரக்கிளையில்தங்கியிருக்கும் குளிர்ந்த கடல் துறையை உடைய தலைவனோடு என்னை விட்டுப் பிரிந்து சென்ற இடம் பெயர்ந்தது அங்ஙனமாகவும் யான் மாத்திரம் விலங்குகின்ற வளைகள் நெகிழும் படி மெலிந்து இன்னமும் உயிருடன் உள்ளேன்.


   (கருத்து) தலைவன் விரைவில் வவந்து மணக்கவிடின் உயிர் தரியேன்.

மரம் கரையிலிருப்பினும் அதன் கிளை அலைவந்து தோயுமாறு வளைந்தது.  மீனைத் தாராதொழியின் நாரை இரையின்றி உயிர்நீத்தலைப் போலத் தலைவன் இரங்கி வரைந்து கொள்ளானேல் யானும் உயிர்விடுவேன்..

Sunday, October 5, 2014

குறுந்தொகை-124


தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் பாலைபாடிய பெருங்கடுங்கோ

இனி பாடல்
 
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
   

ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
   
டின்னா வென்றி ராயின்
   
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே


                         -பாலை பாடிய பெருங்கடுங்கோ
   உரை- உப்பு வணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் பெற்ற. குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள் இன்னாமையையுடையன என்று கூறித் தனியே செல்ல கருதினீராயின் ,தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? (இல்லை)


     (கருத்து) தலைவியையும் உடன்கொண்டு செல்லுதல் வேண்டும்.

     (வி-ரை.) தலைவியை உடன்கொண்டு செல்லவேண்டுமென்று விரும்பிய தோழியை நோக்கித் தலைவன், “யான் செல்லும் வழியிலுள்ள பாலைநிலம் இன்னாமையை யுடையது” என்று கூற அது கேட்ட தோழி கூறியது இது. “பாலை நிலம் இன்னாதென்றீர்: தலைவர் பிரிந்த மனை, மகளிர்க்கு இனிமையைத் தருவனவோ? இன்னாமையை யன்றோ தருவன? இவளைப் பிரிந்து சென்றால் இம்மனை இவளுக்குப் பாலையினும் இன்னாமையை உடையதாகும்; ஆதலின் இவளை உடன்கொண்டு செல்லுதலே நன்று’’ என்று தோழி கூறினாள்.

Saturday, October 4, 2014

"ங"

                     

"ங"வை

காதலிக்கிறேன்..

இன்னமும் சொல்லவில்லை

எங்கேயும், எப்போதும்

உடன் சகோதரன்

"க" பாதுகாப்பாய் வருவதால்

"ஙே" என விழிக்கிறேன்...



Friday, October 3, 2014

குறுந்தொகை - 123



தோழி கூற்று
(தலைவன் பகலில் வந்து மறைந்து நிற்க, “தலைவர் இன்னும் பாணிப்பாராயின் நம் தமையன்மார் மீன்வேட்டையினின்றும் திரும்பி வருவாராதலின் அவர் நம்மைக் காண்டலரிது; இப்பொழுதே வருவாராயின் நன்றாகும்” என்னும் கருத்துத் தோன்றத் தோழி தலைவிக்குக் கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் ஐயூர் மடவன்

இனி பாடல்-
 
இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல்
   
நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறைக்
   
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
   
இன்னும் வாரார் வரூஉம்

பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.

                   -ஐயூர் முடவன்

உரை-

நிலவைத் தொகுத்தாற் போன்ற தோற்றத்தையுடைய வெள்ளிய மணற்பரப்பின் ஒரு பக்கத்தில் உள்ள இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய கொழுவிய நிழலையுடைய கரிய கிளைகளையுடைய புன்னை மரங்கள் அடர்ந்த பூஞ்சோலை தனிமைப் பட்டிருப்ப தலைவர் இன்னும் வந்தாரில்லர்.பலவகை மீன்களை வேட்டையாடுதலையுடைய தமையன்மார் ஏறிச் சென்ற மீன் படகுகள் மீண்டு வரும்.


     (கருத்து) தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.

 ( பகலில் தலைவியைக் கடற்கரைப் பொழிலிற் கண்டு இன்பந் துய்த்துவரும் தலைவன் ஒரு நாள் அங்கே தலைவி அறியாதவாறு அவளும் தோழியும் பேசுவனவற்றை அறிந்து மகிழும் அவாவினால் மறைந்திருந்தான். அவன் வந்திலனென்று கருதிய தோழி பின்பு அவன் அருகில் மறைந்திருப்பதை உணர்ந்து அவன் கேட்கவேண்டுமென்னும் கருத்தோடு தலைவிக்குச் சொல்லுவாளாய் இதனைக் கூறினாள்.)

   

     “தலைவர் இதற்குள் வந்திருத்தல் வேண்டும். இனி வருவதற்குத் தாமதமானால் மீன்வேட்டைக்குச் சென்ற நம் தமையன்மார் மீண்டு வந்துவிடுவர் ஆதலால், இங்கே நிற்பது இயலாதாகும்” என்று தலைவன் அறியும்படி கூறினாள். இதற்குப் பயன் தலைவன் உடனே மறைவினின்றும் வெளிவந்து தலைவியைக் காண வேண்டும்" என்பதாம்.

Thursday, October 2, 2014

அம்புகள்....

                                         


சிந்திக்கும் திறனற்றவை

அம்புகள்...

அவற்றின் நோக்கமே

எய்தவனின் செயலை

நிறைவேற்றுவதே...

அம்பாய் இருப்பது

தவறல்ல..

நல்லவனாய்...

எய்தவன் இருக்கும் வரை


குறுந்தொகை - 122




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்

இனி பாடல்-

 
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
   
குண்டுநீ ராம்பலுங் கூம்பின வினியே
   
வந்தன்று வாழியோ மாலை
   
ஒருதா னன்றே கங்குலு முடைத்தே.

என்பது தலைமகள் பொழுதுகண்டு அழிந்தது.

                        -ஓரம்போகியார்

 உரை-

பசிய கால்களையுடைய கொக்கினது புல்லிய புறத்தைப் போன்ற, ஆழமாகிய நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன.
இப்பொழுது மாலை நேரம் வந்தது.அது வாழ்வதாக!இங்ஙனம் வந்தது மாலையாகிய தான் ஒன்று மட்டும் அன்று.தன்பின் வரும் யாமத்தையும் உடையது.இனி என் செய்வேன்!


     (கருத்து) இராக்காலம் வந்து விட்டது; இனி யான் மிக்க துன்பத்தை அடைவேன்.

     .

 மாலை வந்ததனால் துன்புற்ற தலைவி, “இம்மாலையோடு என்துயர் ஒழிந்திலது; இதன்பின் வருவது கங்குல்; அதுவும் என்துயரை மிகுவிப்பதாகும்” என வருந்தினாள்.

   (மாலை - இரவின் முதல் யாமம்; கங்குல் - இடையாமம்.)

Wednesday, October 1, 2014

குறுந்தொகை- 121

தலைவி கூற்று
(தலைவன் சொன்ன இடத்தில் சந்திக்க வராமையால் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியை நோக்கி, “நீ உரைப்பது உண்மையோ? முன் அவன் வாராமையால் துன்புறுகின்றேன்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
   
மெய்யோ வாழி தோழி சாரல்
 
மைபட் டன்ன மாமுக முசுக்கலை்
 
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற்
 
கோட்டொடு போகி யாங்கு நாடன்

தான்குறி வாயாத் தப்பற்குத்
 
தாம்பசந் தனவென் றடமென் றோளே.

                   =கபிலர்

உரை-

(தோழி) இப்பொழுது தலைவன் வந்ததாக நீ கூறியது உண்மையோ! மலைப்பக்கத்தில் மைபட்டாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு கொம்பு தாங்கும்படி பாயாத தவற்றினது பயன் அக்குரங்கை ஏற்றுக் கொண்டு முறிந்த அக்கொம்பினிடம் சென்றார் போல தலைவன் சொன்ன இடத்தில் வராத தன் தவற்றின் பொருட்டு என் பரந்த மெல்லிய தோள்கல் பசலையை அடைந்தன.



    (கருத்து) ஏற்ற குறியைச் செய்யாது முன்னர்த் தவறிய தலைவன் இப்போது வந்தான் என்று நீ கூறுதல் மெய்யோ?

     .
    “குரங்கு, கொம்பு ஏற்றுக் கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல, தலைவர் நான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பசந்தன” என்று தலைவி கூறினாள்.

   

Tuesday, September 30, 2014

குறுந்தொகை - 120


தலைவன் கூற்று
(தலைவன் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் வந்ததைக் குறிப்பால் அறிவித்த காலத்தில் தலைவி  வாராதொழிய, வருத்தமுற்ற தலைவன், “தலைவி நன்மையை உடையாள் என்பதை அறிந்தது போலப் பெறுதற் கரியாள் என்பதையும் இதுகாறும் அறிந்திலையே!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
இல்லோ னின்பங் காமுற் றாஅங்
   
கரிதுவேட் டனையா னெஞ்சே காதலி
   
நல்ல ளாகுத லறிந்தாங்
   
கரிய ளாகுத லறியா தோயே.

        - பரணர்

உரை-  பொருளில்லாத வறியவன் இன்பத்தை விரும்பினாற்போல, பெறுதற்கரியதை நீ விரும்பினாய். தலைவி நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்தது போல நாம் நினைக்கும் பொழுதெல்லாம் நமக்கு எளியளாய் வருவதின்றிப் பெறற்கரியளாதலையும் அறியவில்லை.



   (கருத்து)தலைவி பெறுதற்கரியவள்.


 இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைவியைப் பிரிந்து, ‘ இனி இவளைக் காணுமாறு எங்ஙனம்!” என்று மயங்கி, “இதுகாறும் நமக்கு நல்லளாகிய இவள் இனி அரியளன்றே!” என்று நெஞ்சை நோக்கிக் கூறியது.

Monday, September 29, 2014

குறுந்தொகை -119



தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சத்தி நாதனார்

இனி பாடல்-

   
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை
   
கான யானை யணங்கி யாஅங்
   
கிளையண் முளைவா ளெயிற்றள்
   
வளையுடைக் கையளெம் மணங்கி யோளே.


                                   -சத்தி நாதனார்

உரை-

இளமையை உடையவளும், நாணல் முளையைப் போன்ற ஒளியையுடைய பற்களை உடையவளும், வளையினை உடைய கையினை உடையவளுமாகிய ஒருத்தி, வெள்ளிய பாம்பினது அழகிய கோடுகளையுடைய குட்டியானது காட்டுயானையை வருத்தினாற் போல எம்மை வருந்தச் செய்தனள்.



     (கருத்து) ஓர் இளைய மகள் என்னைத் தன் அழகினால் வருத்தினாள்.

(வெள்ளிய பாம்பு_ கோதுமை நாகம்.,


     இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் 

Sunday, September 28, 2014

குறுந்தொகை-118



தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் இருப்ப, தலைவி அவன் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குவாளாய் மாலைப் பொழுதில், “இன்னும் வந்திலர்” என்று கூறி வருந்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் நன்னாகையார்

இனி பாடல்-

 
புள்ளு மாவும் புலம்பொடு வதிய்
   
நள்ளென வந்த நாரின் மாலைப்
   
பலர்புகு வாயி லடைப்பக் கடவுநர்
   
வருவீ ருளீரோ வெனவும்

வாரார் தோழிநங் காத லோரே.

                    -நன்னாகையார்

   உரை-

(தோழி) பறவைகளும், விலங்குகளும் தனிமையோடு தங்க , நள்ளென்னும் ஓசைபட வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில் பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி வினாவுவார் உள்ளே வருவீர் இருக்கின்றனிரோ! என்று கேட்கவும் நம் தலைவர் வாரார் ஆயினர்.
 .


     (கருத்து) நம் தலைவர் இன்றும் வந்திலர்.

 
    ( தனக்குத் துன்பம் பயப்பதுபற்றி மாலையை நாரின் மாலையென்றாள், தன் வீட்டில் விருந்தினர் பலர் வந்து உண்ணுவாராதலின் அவர் தடையின்றிப் புகும் வாயிலைப் பலர் புகுவாயிலென்றாள். இராக் காலத்தில் விருந்தினர்களைப் புகவிட்டுப் பின்னும் எவரேனும் உள்ளாரோ என ஆராய்வாராகி ஏவலாளர்கள் வினவி, ஒருவரும் இலராக வாயிற்கதவை அடைத்தனர். தலைவன் வந்திருப்பின் விருந்தினர் கூட்டத்தில் ஒருவனாகப் புகுவான் அவன் அங்ஙனம் புகவில்லை ஆதலின், அவர் வந்திலரென்று தலைவி கூறினாள்.)

Saturday, September 27, 2014

குறுந்தொகை- 117


தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி மணத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல் -

மாரி யாம்ப லன்ன கொக்கின்
   
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு
   
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
   
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்

வாரா தமையினு மமைக்
   
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே.

                      - குன்றியனார்


உரை-

(தோழி) மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தையுடைய கொக்கினது பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு தாழை வேரினிடையே உள்ள வளைக்குள் செல்லும் பொருட்டு இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல , விரைந்து செல்லுவதற்கிடமாகிய கடல் துறையையுடைய  தலைவன் இங்கு வராமல் பொருந்தினும் பொருந்துக.அவன் வராமையால் உன் உடல் மெலிய உன் கைகளில் அணிந்த வளைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் செரிப்பதற்குரியனவாகிய விற்பார் தரும் கைவளைகளுள் சிறிய அளவையுடையனும் இங்கு உள்ளன.


     (கருத்து) தலைவன் மணந்து கொள்ளாமையால் உண்டான மெலிவை நாம் மறைத்து ஒழுகுவோமாக.

   

   

     (கொக்கின் பார்வையை அஞ்சி நண்டு தன் வளையிலே தங்குவதைப் போல, ஊரினர் பழிமொழியை அஞ்சித் தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொண்டு தன் அகத்தே இல்லறம் நடத்தற்குரியன் என்பது குறிப்பு.)

Friday, September 26, 2014

குறுந்தொகை - 116


தலைவன் கூற்று
( தலைவியைக் கண்டு அளவளாவிய தலைவன் அவளது கூந்தற் சிறப்பைப் பாராட்டி நெஞ்சிற்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் இளங்கீரன்

இனி பாடல்

யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்
   
வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறை
   
நுண்மண லறல்வார்ந் தன்ன
   
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.

               - இளங்கீரன்

உரை-

(நெஞ்சே) என்னால் விரும்பப் பெற்றுத் தங்கும் தலைவியினது வண்டுகள் தாவுகின்ற கூந்தல் ,வளப்பம் பொருந்திய சோழரது உறையூரில் பெரிய நீர்த்துறையில் உள்ள நுண்ணிய கருமணல் நீண்டு படந்தாற் போன்ற நல்ல நெறிப்பை உடையன.வாசனைத் தன்மையும் உடையன.’.


     (கருத்து) தலைவியின் கூந்தல் நெறிப்பையும் நறுமணத்தையும் தண்மையையும் உடையன.

 (உறந்தை பெருந்துறை- காவிரித்துறை நெறிப்பு - படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு).

     இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தலைவியின் கூந்தலாகிய மெல்லணையில் துஞ்சி இன்புற்றவன் ஆதலின் அக் கூந்தலின் இயல்புகளை நினைந்து, இவற்றாற் பெறும் இன்பத்தை இடைவிடாமல் நுகரும் பேறு பெற்றிலேமே என்னும் இரக்கக் குறிப்புப்பட இதனைத் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

Thursday, September 25, 2014

எங்கே போகிறோம்...??

                                       

வாழ்வா..சாவா..

போராட்டத்தில் ஒரு உயிர்

எள்ளளவும் காப்பாற்ற முயலாமல்

கடுகளவும் வருத்தப்படாமல்

படம் பிடித்து அதை

விளம்பரம் ஆக்கும் கூட்டம்

எங்கே போகிறோம் நாம்

மனித நேயம்

செத்துத் தொலைந்ததா

நம்மிடம்..


குறுந்தொகை- 115



தோழி கூற்று
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்
 
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
 
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
 
புலவி தீர வாளிமதி யிலைகவர்
 
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்

மென்னடை மரையா துஞ்சும்
 
நன்மலை நாட நின்னல திலளே.

                -கபிலர்

உரை-


அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண் மெல்லிய நடையையுடைய மரையா இலைகளை விரும்பி உண்டு துயிலுதற்கிடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரிய நன்மை ஒன்றை ஒருவர் நமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ?(யாவரும் போற்றுவர்)அது சிறப்பன்று.சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும் விருப்பம் மாட்சைமைப்பட்டு நீங்கும் வண்ணம் இவளை பாதுகாப்பாயாக!இவள் உன்னை அன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.


      (கருத்து) இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.

( ‘‘இவள் நினக்குப் பலவகையிலும் இன்பம் தரும் நிலையில் இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று; பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில் யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன் றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழி கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள்.)

 
     மரையா(ஒருவகை விலங்கு) தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்தொழுகு வாயாக வென்பது குறிப்பு.

Wednesday, September 24, 2014

குறுந்தொகை - 114


தோழி கூற்று
(தலைவியை அவனை சந்திக்கும் இடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் பொன்னாகன்.

இனி பாடல்-

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
   
நின்குறி வந்தனெ னியறேர்க் கொண்க
   
செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலும்
   
ஆர லருந்த வயிற்ற

நாரை மிதிக்கு மென்மக ணுதலே.

                -பொன்னாகன்.

உரை-

இயற்றப்பட்ட தேரை உடைய தலைவனே! நெய்தல் நிலத்தில் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்.இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றையுடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பெண்ணின் நெற்றியை மிதிக்கும்.நான் செல்கிறேன்.அவளை போகும்படி நீயே சொல்வாயாக.
   
   

     (கருத்து) தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.


     (என் மகள் என்றது பாவையை, பாவையினிடத்தே அன்பு பூண்டு அதனைப் போற்றி வளர்த்தலும், மணம் முதலிய செய்து மகிழ்தலும் மகளிர்க்கு இயல்பு.)

Tuesday, September 23, 2014

வீசப்பட்ட கல்

               


என் மனம் எனும்

ஏரியில்

கல்லினை வீசி விட்டாய்

நீ அறியாய்

அது சென்றடையும்

ஆழத்தை


குறுந்தொகை-113



தோழி கூற்று
(பகல் நேரத்தில் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று அங்கு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் மாதிரத்தன்

இனி பாடல்-
 
ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
 
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
 
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
 
துன்னலபோ கின்றாற் பொழிலே யாமெம்

கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
 
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

                   -மாதிரத்தன்


உரை-

(தலைவா) பொய்கை ஊருக்கும் அருகிலுள்ளது சிறிய காட்டாறு, அப்பொய்கைக்கும் அருகிலே உள்ள சோலை.அப்பொய்கையிலும்,ஆற்றிலும் உணவைத் தேடும் வெள்ளிய நாரைகளை அன்றி வேறு எந்த உயிரும் நெருங்காது ஒழியும்.நாங்கள் எங்கள் கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்னை கொணர அங்கு செல்வோம்.பெரியபேதமையையுடைய தலைவி அங்கும் வருவாள்.


    (கருத்து) பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு பேசலாம்

Monday, September 22, 2014

குறுந்தொகை-112




தலைவி கூற்று
(தலைவன் மணந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாயின், “நான் ஊரார் பழிமொழிக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்;அதனால் என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லை என்னிடம்
” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஆலத்தூர்கிழார்

இனி பாடல்-
 
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
 
எள்ளற விடினே யுள்ளது நாணே
 
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 
நாருடை யொசிய லற்றே

கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

                -ஆலத்தூர் கிழார்

உரை-

பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினால், (என்) காமம் மெலிவடையும்.பிறர் இழித்தலுக்காக அக்காமத்தை விட்டு விட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே! ஆகும்.தலைவன் அனுபவித்த எனது பெண்மை, பெரிய யானை உண்ணுவதற்காக வளைத்து, நிலத்தில் படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையை போன்றாற்போலது ஆகும்.



     (கருத்து) ஊரார் பழிக்கு அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.

 


     களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளை ஆனது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலையில் இருத் தலைப்போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் தன் பண்டை நிலைமையைப் பெறாத நிலையிலிருப்பினும், முற்றும் அழிந்தொழியாமையால் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளது..

Saturday, September 20, 2014

குறுந்தொகை - 111




தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் தீன்மிது நாகன்

இனி பாடல்-
 
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்
   
வென்றி நெடுவே ளென்னு மன்னையும்
   
அதுவென வுணரு மாயி னாயிடைக்
   
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
   
வல்லே வருக தோழிநம்
   
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.

                       - தீன்மதி நாகன்

உரை-

(தோழி) மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெறியாட்டாளன், வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்வான்.நம் தாயும் அதுவென நினைப்பாளாயின் அப்போது கருமையான பெண் யானையினது கை மறைந்தாற் போன்ற கரி நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன் நம வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையை காணும் பொருட்டு சிறிது நேரமிங்கு விரைந்து வந்து செல்வானாக!


     (கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.



 சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு, “தலைவன் இன்னும் வரைந்து கொள்ளாமையால் தலைவி துன்புற்றாள்; அவளுடைய அகத்துன்பம் புறத்தாருக்குப் புலனாகும்படி அவள் தோள்கள் நெகிழ்ந்தன. அதுகண்டு தாய் வெறியாட்டெடுக்க எண்ணியுள்ளாள்” என்பதைப் புலப்படுத்தினாளாயிற்று. தலைவன் இதனை யுணர்ந்து விரைவில் வரைந்து கொள்ளுதல் இதன் பயன்.

Friday, September 19, 2014

குறுந்தொகை-110


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வரவில்லை. “இனி அவர் வந்தாலும், வராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து விடுவேன்” என்று தலைவி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கிளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

 
வாரா ராயினும் வரினு மவர்நமக்
   
கியாரா கியரோ தோழி நீர
   
நீலப் பைம்போ துளரிப் புதல
   
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி

நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த
   
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்
   
றின்னா தெறிதரும் வாடையொ
   
டென்னா யினள்கொ லென்னா தோரே.

                     - கிள்ளிமங்கலங்கிழார்

உரை-

நீரிலுள்ள நீலத்தினது மலரும் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து புதலில் உள்ள மயில்தோகையில் உள்ள கண்னைப் போன்ற கருவிளை மலரை அலைத்து, நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறத்தையும், துய்யையும் உடைய மலர்கள் உதிரும்படி குளிர்ச்சியுடையதாகி இன்னாததாகி வீசுகின்ற வாடைக்காற்றால் எத்தன்மையினள் ஆனாளோ? என நினைத்து கவலைப்படாத தலைவன் இனி வந்தாலும், வராவிட்டாலும் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார்? (வருவதற்குள் இறந்துவிடுவேன்)


   

     (கருத்து) தலைவர் வராவிட்டால் நான் இறந்துவிடுவேன்.

     (“உயிரோடிருப்பின் அவர் வந்தால் இன்புறுவேன்; அவர் வருதற்குரித்தான இப்பருவத்தில் வாராமையால் நான் இனி இறந்து விடுவேன்; நான் இறந்துபட்ட பின்னர் அவர் வரினும் வாராவிடினும் எனக்கு ஆகும் ?பயன் ஒன்றுமில்லை” என்று தலைவி கூறினாள்.)

   

Thursday, September 18, 2014

குறுந்தொகை-109



தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நம்பி குட்டுவன்

இனி பாடல்
 
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை
   
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்
   
புணரிய விருந்த ஞான்றும்
   
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

                    -நம்பி குட்டுவன்

உரை-

வளைவையுடைய காலையுடைய இறாமீனின் , வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலையானது கொண்டு வந்து தருவதற்கு இடமாகிய துறையையுடைய தலைவன், அளவளாவ இருந்த பொழுதும், உனது நல்ல நெற்றியின் அழகு பிறர் பழிக்கும் வண்ணம் குறைபாட்டையுடைய இத்தகையாயிற்று (பசலை நோயால்).இது இரங்கற்குரியது


     (கருத்து) தலைவன் மணந்தால் அன்றி நின் வேறுபாடு நீங்காது.


   நுதற்கவின் இன்னதென்றது பசலை பெற்றதைக் குறித்தது. களவுக் காலத்து இடையீடு உண்மையின் அதனால் வருந்திய தலைவியின் நிலை நீங்க அவளை மணந்து கொண்டு உடனுறைந்து இல்வாழ்க்கை நடத்தலே தகுதியென்று தோழி குறிப்பால் அறிவுறுத்தினாள்.

Wednesday, September 17, 2014

குறுந்தொகை- 108


தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வரவில்லை. இனியும் அவன் பிரிவை பொறுத்திருக்க மாட்டேன்"  என்று வருந்திக் கூறியது.)
 
முல்லை திணை - பாடலாசிரியர் வாயிலான்றேவன்

இனி பாடல்-

 
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
   
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
   
பாசிலை முல்லை யாசில் வான்பூச
   
செவ்வான் செவ்வி கொண்டன்

றுய்யேன் போல்வ றோழி யானே.

                     - வாயிலான்றேவன்

உரை-

(தோழி) மேகங்கள் விளையாடுவதற்கிடமான மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு சென்றிருந்த பசுக்கள், தனது கன்றுகளை நினைத்துச் செல்ல முல்லை நிலத்தில் பசிய இலைகளிடையே முல்லையினது சிறந்த மலர்ப் பரப்பு சிவந்த வானத்தின் அழகைக் கொண்டது’.இக்கார்பருவத்து மாலையில் தலைவர் வராவிடின் நான் உயிர் வாழேன்

 
    (கருத்து) கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனியும் என்னால் பொறுத்திருக்க இயலாது

Tuesday, September 16, 2014

குறுந்தொகை- 107


தலைவி கூற்று
(பொருளீட்ட பிரிந்த தலைவன் மீண்டும் வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.)


 மருதம் திணை- பாடலாசிரியர் மதுரைக் கண்ணனார்

இனி பாடல்-

 
குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன
   
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
   
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
   
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
   
யாண ரூரன் றன்னொடு வதிந்த்
   
ஏம வின்றுயி லெடுப்பி யோயே.

                           - மதுரைக் கண்ணனார்


உரை-

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளீய பூவைப் போன்ற தொக்க சிவந்த கொண்டையையுடைய கூட்டங்கொண்ட சேவலே, ஆழமாகிய நீரில் உண்டாகும் புது வருவாயையுடைய ஊரையுடைய தலைவனுடன் தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும் எம்மை எழுப்பினை..இருள் பிரியா இரவில்.(ஆதலால்) வீட்டிலுள்ள எலிகளை உண்ணூம் பொருட்டு அலையும் காட்டுப் பூனையின் குட்டிக்கு சிலநாள் வைத்திருந்து உண்ணும் உணவாகை..மிக்க துன்பத்தை அடைவாயாக!




     (கருத்து) பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.

(தலைவி காம மயக்கத்தில் இருக்கையில், பொழுது புலர்ந்ததென்று உணர்த்திய சேவல் தவறாக உணர்த்தியது போல இருந்தமையால் இப்படிக் கூறுகிறாள்

.

Monday, September 15, 2014

குறுந்தொகை - 106



தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-


புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
   
வரையிழி யருவியிற் றோன்று நாடன்
   
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
   
வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு்
   
தான்மணந் தனையமென விடுகந் தூதே.

                     -கபிலர்

     (பி-ம்.) 1. ‘வீழாற்றிக்’, ‘வீழித்திக்’; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.

 புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது,  மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர்,  மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும்,  நாட்டையுடைய தலைவன்,  குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம்மிடத்து வந்தது; நாமும்,  நெய்யைப் பெய்த தீயைப்போல,  அத்தூதை ஏற்றுக்கொண்டு,  அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி,  தூதுவிடுவோம்.


    (கருத்து) தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.

     (வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.

 

Saturday, September 13, 2014

குறுந்தொகை - 105



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் நட்பு அவன் வராததால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை-பாடலாசிரியர் நக்கீரர்

இனி பாடல்-
 
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்
   
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
   
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
   
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை்
   
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.

                   -நக்கீரர்

உரை-

குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை, உண்ணும் தெய்வத்திற்குப் பலியாக இட்ட வளர்ந்த கதிரை தெரியாது உண்ட மயில், ஆடுமகள்(கணிகை) வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்குவதற்கு இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு கண்ணீர் மிக்க கண்களோடு நான் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.

   
     (கருத்து) தலைவன் வராததால் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.

, (மலைவாழ் மக்கள் தினையை  விளைத்து அதில் தோற்றும் முதற் கதிரைத் தெய்வத்துக்குப் பலியாக இடுதல் மரபு.)

Friday, September 12, 2014

குறுந்தொகை-104



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் பிரிந்து வாழ்வதில் பொறுக்கமுடியா தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டும் வந்திலர்; நான் எங்ஙனம் பொறுத்து கொள்வேன்!” என்று கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-
 
அம்ம வாழி தோழி காதலர
   
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
   
தாளித் தண்பவர் நாளா மேயும்
   
பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே.

                  - காவன்முல்லைப் பூதனார்



உரை _

தோழி ஒன்று கூறுவேன் கேட்பாயாக! தலைவன் , நூலற்ற முத்துமாலையிலிருந்து தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை விடியலில் பசுக்கள் மேயும் பனி விழும் காலத்திலே பிரிந்து சென்றார்.அங்ஙனம் பிரிந்து சென்று வாழ்ந்த நாட்களும் பலவாகின்றன.நான் அதை எப்படி பொறுப்பேன்.

 
    (கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் திரும்பிவரவில்லை.

(தாளிஅறுகு-ஒருவகைக் கொடி.பசு மேய்கையில் அறுகின் நுனியில் உள்ள பனித்துளிகள்)

   
   

Thursday, September 11, 2014

குறுந்தொகை-103




தலைவி கூற்று
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வராததால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவு பொறுக்கமுடியாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் வாயிலான் தேவன்

இனி பாடல்-

கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற்
   
கவிரித ழன்ன தூவிச் செவ்வாய்
   
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
   
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்

வாரார் போல்வர்நங் காதலர்
   
வாழேன் போல்வ றோழி யானே.

                   -வாயிலான் தேவன்
உரை-

(தோழி) மிக்க புனலால் தொகுக்கப்பட்ட நடுங்குவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து மீனாகிய உணவைத் தேடுகின்ற
முள்ளு முருங்கை மலரின் இதழைப்போன்ற மெல்லிய இறகையும், செம்மையாகிய அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படி தூவும் நீர்த்துளிகளையுடைய பிரிந்தார் துயரடையக் காரணமான வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்திலும் பிரிந்து சென்ற என் தலைவன் வரவில்லை.இனி நான் வாழ்வேனல்லேன்.


     (கருத்து) தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.


    ( “என்னுடன் தாம் சேர்ந்திருத்தற்குரிய இவ்வாடைக் காலத்திலும் தலைவர் வரவில்லை. இவ்வாடையின் துயர் பொறுத்தற்கு அரிதாயிற்று; அவருடைய பிரிவை இக்காலம் மிகுதியாகப் புலப்படுத்தி விட்டதாதலின் இனி உயிரை வைத்துக் கொண்டு ஆற்றும் ஆற்றல் இல்லேன்” என்று தலைவி கூறி வருந்தினாள்.)

Wednesday, September 10, 2014

குறுந்தொகை-102



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கூறியதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.)

நெய்தல் திணி - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
   
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி்
   
வான்றோய் வற்றே காமம்
   
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே.

                    -ஔவையார்

உரை-

தலைவனை நினைந்தால் என் உள்ளம் வேவா நிற்கும்.நினைக்காமல் இருப்பது என்பது எனது ஆற்றலின் அளவிற்கு உட்பட்டதன்று.காம நோயால் என்னை வருந்தச் செய்வது, வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது
எம்மால் மருவப்பட்ட தலைவன் சால்புடையார் அல்லர்.


     (கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.

Tuesday, September 9, 2014

குறுந்தொகை - 101



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர்  மோவாய்ப்பதுமன்
இனி பாடல்-
 
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்
 
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்
 
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
 
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி
 
மாண்வரி யல்குற் குறுமகள்
 
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.

                        - மோவாய்ப்பதுமன்


உரை-

விரிந்த அலையையுடைய பெரிய கடல் வளைந்த பூவுலக இன்பமும்,, பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும் ,
ஆகிய இரண்டும் தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும் , பொன்னைப் போன்ற நிறத்தையும் மாட்சிமைப்பட்ட பெண்ணழகையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும் அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.


     (கருத்து) தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.

(தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல்.)

 

Monday, September 8, 2014

குறுந்தொகை- 100



தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்கு, “நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)


 குறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
அருவிப்பரப்பி னைவனம் வித்திப்
   
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
   
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
   
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்

வல்வில் லோரி கொல்லிக் குடவரைப்
   
பாவையின் மடவந் தனளே
   
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.

                              -கபிலர்

   உரை-

அருவு பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையில் களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலை மல்லிகையோடு, பசிய மரலை களைந்தெறியும் காந்தளையே இயற்கை வேலியாகயுடைய சிற்றூரிலுள்ளார்..உணவின்றி பசித்தாராயின் தறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அப்பணத்தில் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப்போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள் ஆயினும் அவளுடைய மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள் தழுவதற்கு அரியனவாகும்.



    (கருத்து) என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.

     (நான் அவளைக் கண்டு படும் துயரத்தை அறியாத ஒன்றும் அறியாத அவள் பெறுதற்கரியவள்)

Sunday, September 7, 2014

குறுந்தொகை - 99



தலைவன் கூற்று
( தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினவ... தோழியிடம், “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி
   
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து
   
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே
   
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை

இறைத்துணச் சென்றற் றாஅங்
   
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே.

                    -ஔவையார்

உரை-

உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டு பெருகும் வெள்ளம், பிறகு கையால் இறைக்கும் அளவிற்கு சிறுகிச் சென்று இல்லாமல் ஆனது போல. வெள்ளத்தைப் போன்ற காம நோய், இங்கு நான் வருதலால் முடிவடையும் படி ஆழ்ந்து நினைத்தேன் அல்ல போலும்.அங்ஙனம் எண்ணி மீண்டும் மீண்டும் மிக நினைவு கொள்ளவில்லை போலும்.அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுவதற்கு மாறாக இருக்கும் உலக இயல்பை எண்ணி மயங்கினேன் போலும்.


 (கருத்து) யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.

Saturday, September 6, 2014

குறுந்தொகை-98



தலைவி கூற்று
(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தில் வராததால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)

முல்லை திணை - பாடலாசிரியர் கோக்குளமுற்றன்

இனி பாடல்-

 
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த்
   
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
   
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
 
நீர்வார் பைம்புதற் கலித்த

மாரிப் பீரத் தலர்சில கொண்டே.

                      -கோக்குளமுற்றன்

உரை-

(தோழி) நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதரினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கொண்டு தலைவரை நெருங்கச் சென்று நல்ல நெற்றியையுடைய தலைவி இம்மலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவரிடம் சொல்லுவாரைப் பெற்றால் மிக்க உதவியாக இருக்கும்.



    (கருத்து) நான் பசலை நோயடந்ததை தலைவர் அறிந்திலர்; அறியின்  வருவார் போலும்!



    (தலைவன் பொருளீட்டும் பொருட்டு பிரிந்துள்ளான். அவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தகாலத்தில் அவன் வராததால்  வருந்திய தலைவி “தலைவரது பிரிவினால் நான் பசலைபெற்றேன்; என் மேனி அழகு அழிந்தது. அவர் என் நிலையை அறியார் போலும்! யாரேனும் அவர் உள்ள இடத்திற்குச் சென்று ‘உன் பிரிவினால் தலைவி நலனிழந்து பசலையுற்றாள்; நீ கூறிய பருவமும் வந்தது’ என்று நினைவுறுத்தினால் அவர் விரைந்து வந்து மணந்து கொள்வார்” என்று கூறினாள்.)

Friday, September 5, 2014

குறுந்தொகை - 97



தலைவி கூற்று
(தலைவன் மணம் புரியாது நெடுநாள் இருப்பதால் வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் மணக்கும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-
 
யானே யீண்டை யேனே யென்னலனே
   
ஆனா நோயொடு கான லஃதே
   
துறைவன் றம்மூ ரானே
   
மறையல ராகி மன்றத் தஃதே.

                      -வெண்பூதி

உரை-

நான் இவ்விடத்தில் தனியே இருக்கிறேன்.எனது பெண்மை நலம் என்னை நீங்கி அமையாத வருத்தத்துடன் கடற்கரைச் சோலையினிடத்தது,ஆயின் தலைவன் தனது ஊரில் இருக்கிறான்.எங்களது நட்புப் பற்றிய செய்தியானது பலர் அறிந்து பேசும்படியாக பொதுமன்றத்தில் பரவியுள்ளது.


 
  (கருத்து) என் நலனுண்ட தலைவர் இன்னும் என்னை மணக்க  முயற்சியைச் செய்தாரல்லர்.

 


Thursday, September 4, 2014

ஆறடியும் சொந்தமில்லை

                                     

பத்து கால்களுடன் வந்து

தீப் படுக்கையில்

போடப்பட்டு

ஒரு மண்பாத்திரத்தில்

அடங்கிடும் சாம்பலாய்

எப்பேர்பட்டவன் வாழ்வும்

அதற்குள்..

எத்தனை எத்தனை

ஆணவம்..பழிவாங்கல்

கொடூர புத்தி..

வேணாமே இது..

வாழும் வரை

நல்லவனாய் வாழ்ந்திடுங்களேன்

அப்பேராவது நிலைக்கட்டுமே!


குறுந்தொகை -96




தலைவி கூற்று
(தலைமகன் ம்ணக்காமல் வந்து பழுகிய காலத்தில் அவனைத் தோழி தலைவனின் இயல்பை பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
அருவி வேங்கைப் பெருமலை நாடற்
   
கியானெவன் செய்கோ வென்றி யானது
   
நகையென வுணரே னாயின்
   
என்னா குவைகொ னன்னுத னீயே.

                     -அள்ளூர் நன்முல்லை



 உரை-
நல்ல நெற்றியையுடையாய்...அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டிற்குரிய தலைவனை நான் என் செய்வேன் என்று கூறி அவன் இயல்பை பழித்தாய்.அப்படி நீ கூறியதை நான் விளையாட்டாய் எடுத்துக் கொண்டேன்..இல்லாவிடில் நீ (என்னிடம்) என்ன பாடு படுவாய். (மிகவும் துன்பப்படுவாய்)



     (கருத்து) நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.

 

Wednesday, September 3, 2014

குறுந்தொகை - 95



தலைவன் கூற்று
(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு(தோழனுக்கு), “ஒரு குறமகளிடம் கொண்ட காமத்தால் என்னிடம் மாற்றம் உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
   
மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி
   
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்
   
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
   
நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே.

                           கபிலர்

உரை_

பெரிய மலையினிடத்து வீழும் அருவி பாறைகளின் வெடிப்புகளில் ஒலிக்கும், பல மலரையுடைய சாரலில் உள்ள சிற்றூரிலுள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய மகளினது நீரைப் போன்ற மென்மை, தீயையொத்த என் வலியைக் கெடச் செய்தது.
  .


 .(கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.

Tuesday, September 2, 2014

குறுந்தொகை - 94



தலைவி கூற்று
(தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர்

இனி பாடல் -

.  
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்
   
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே
   
யானே மருள்வேன் றோழி பானாள்
   
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்

என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
   
அருவி மாமலைத் தத்தக்
   
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.

                       -கந்தக் கண்ணன்

உரை-

(தோழி) பெரிய தண்மையையுடைய மழைகாலத்துக்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன.அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்.ஆயினும், என்னைப் பிரிந்தவராகிய இன்னும் என்னிடம் வந்து சேராமல் இருக்கும் தலைவர் அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி தொகுதியாகிய பெரிய மேகத்தினது முழங்கும் ஓசையை நடுஇரவில் கேட்டால் தான் பிரிவினால் வருந்துவதன்றி மீண்டும் எந்த நிலையை உடையவராவாரோ?


   (கருத்து) தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?

Monday, September 1, 2014

குறுந்தொகை- 93


தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்து வந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ கோபப்படாதே!; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியர் அல்லர்” என்று தலைவி கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் நன்முல்லையார்

இனி பாடல்-

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
   
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்
   
கன்னையு மத்தனு மல்லரோ தோழி
   
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே.


                            -அள்ளூர் நன்முல்லையார்.

உரை _ (தோழி) நல்ல பெண்மை நலம் கெடவும், மேனியழகு மெலியவும், எல்லாவற்றினும் இனிய உயிர் நீங்கினாலும், அவர் பற்றி பரிவு ஏற்படும் சொற்களை சொல்லாதே!தலைவர் நமக்கு அன்னையும், தந்தையும் ?அல்லரோ!
 தலைவன் தலைவியரிடத்து அன்பு இல்லா இடத்தில் ஊடல் எதன் பொருட்டு?
 

(கருத்து) தலைவன் என்பால் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.

    (வி-ரை.) நலம் இரண்டனுள் முன்னது பெண்மை நலம்; இரண்டாவது அழகு.

 அவரை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்” என்று தோழி கூற, “என்னுடைய நலமும் உயிரும் தொலையுமேனும் பொறுத்துக்கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளல் என் கடன்; அவர் அன்னையையும் அத்தனையும் போல உபசரிக்கத்தக்கவர்; ஆயினும் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவர்பால் இல்லை; என தலைவி கூறினாள். இவ்வயன்மைக் குறிப்பினால் வாயில் மறுத்தாளாயிற்று