Tuesday, December 2, 2014

குறுந்தொகை-166




தோழி கூற்று
(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் கூடலூர் கிழார்

இனி பாடல்-

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
   
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
   
ஊரோ நன்றுமன் மரந்தை
   
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.


                                     -கூடலூர் கிழார்.


 குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால்,  வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய,  ஊராகியமரந்தை, தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது;  தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின்,  வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.

 

    (கருத்து) தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.

    (வி-ரை.) திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர்முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.

No comments: