Wednesday, December 10, 2014

தமிழனுக்கு....பாரதியார்

                                 

தமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.
ஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.
பெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.

பொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய
நோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.
வீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.



பாரதி- தமிழன்

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான இதுவரைப் படித்திராத
பாரதியின் கட்டுரையை இன்றைய சிறப்புப் பதிவாகக்
கொடுத்திருப்பது மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரமணி291 ஐயா