Thursday, December 18, 2014

குறுந்தொகை-176



தோழி கூற்று
(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வருமுலையாரித்தி


இனி பாடல்.

 
ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
   
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
   
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
   
வரைமுதிர் தேனிற் போகி யோனே

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
   
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
   
ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.


                                      -வருமுலையாரித்தி.

உரை-

 ஒருநாள் வந்தானல்லன்; இரண்டு நாட்கள் வந்தானல்லன்;  பல நாட்கள் வந்து,  பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி,  எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு,  மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்த தேனிறாலைப் போலப் போயினவனும்,  நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன், எங்கே இருக்கின்றானோ?  வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டிற்பெய்த, இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு கலங்கும்.

No comments: