Sunday, December 14, 2014

மூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சிறுகதை)




கையில் இருந்த பணத்தை எண்ணினான்..முத்து

மீண்டும் எண்ணினான் ...அதேதான் இருந்தது.ஐநூறு ரூபாய்.

இன்றைக்கு டாஸ்மாக் போயிட வேண்டியதுதான்.நாளைக்குப் போனால்..காந்தி ஜெயந்தி..கடை இருக்காது என்பதால்..மக்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சரக்கை வாங்கி கை இருப்பில் வைத்து விடுவார்கள்.சமயத்தில்.. கடைசியில் வருபவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

அப்படியெல்லாம் சொல்லி விடக்கூடாது என ஆண்டவனை எல்லாம் வேண்டிக்கொண்டு..டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மூன்று பீர் பாட்டில் வாங்கினான்.

**** **** **** ***

'என்னங்க..போன மாச வாடகையே பாக்கி..வீட்டு ஓனர் வந்து கத்திட்டுப் போனார்.

பால் காசு கொடுத்தாத் தான் பால் கொடுப்பேன்னு சொல்லிட்டார் பால்காரர்..குழந்தைக்கு பால் இல்லை 'என்றாள் பாக்கியலட்சுமி.

'ம்..ம்..' என்றான்.

அப்படின்னா என்ன அர்த்தம்ங்க..என்றாள்

அடச்சே..மனுஷனுக்கு வீட்டிலே நிம்மதி இல்ல..ஏண்டா வரோம்னு இருக்கு

அப்படி சொன்னா எப்படி..கையில இருந்த பணத்திலே டாஸ்மாக்குக்குப் போய் தொலைச்சுட்டீங்க..வீட்டு ஞாபகமே இல்லை உங்களுக்கு..குழந்தைகள் எல்லாம் நான் யாருக்கோவா பெத்தேன்..உங்களுக்குத் தானே..அப்ப அவங்களுக்கான செலவு பத்தியும் யோசிக்கணும்

என்னடி சொன்னே..என்றபடியே அவள் கன்னத்தில் பளார் என அறைந்தான்..பின் வாங்கிவந்த பீர் பாட்டிகளை ஜாக்கிரதையாக உள்ளே கொண்டு சென்று வைத்தான்.

***** ***** ****** *****

'முத்து..எவ்வளவு பணத்தோட வந்திருக்க?'

'..கையில நூறு ரூபாயும்..கொஞ்சம் சில்லறையும் தான் இருக்கு'

'என்ன முத்து.. நீயே இப்படிச் சொன்னா எப்படி..முப்பது அடி தலைவர் கட் ஆவுட்டுக்கு பீர் அபிஷேகம் பண்ணனும்னா எவ்வளவு பீர் வேணும்..அதைத்தவிர படத்துக்கு டிக்கட் இரு நூறு ரூபாய்' என்றவாறு தலையைச் சொறிந்தான்..லோகல் தலைவன்.

'இல்ல தலைவா..என்னால முடிஞ்சது மூணு பீர் வாங்கியாந்திருக்கேன்'

'அப்படியா..சரி..சரி..அந்த அண்டாவுலபோய்க் கொட்டு..படத்துக்கு துட்டு இல்லேனா படம் அப்புறம் பார்த்துக்கலாம்'

படம் பார்க்க முடியா..ஏமாற்றம் அடைந்த முத்து..பீரை அண்டாவில் கொட்டிவிட்டு..தன் தலைவன் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க முடியாத துக்கம் தாளாது ..கையில் இருந்த காசுக்கு கள்ள சாரயத்தை வாங்கி குடித்துவிட்டு..அந்த நடிகர் நடத்த படம் வெளியாகும் தியேட்டரின் நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான்..

**** ***** **** *****

குழந்தை பசியால் பாலுக்கு கத்தியது. சத்தான உணவில்லாததால் பால் சுரக்காத வற்றிப் போன தன் மார்பை குழந்தை சுவைக்க அதன் வாயில் திணித்தாள் பாக்கியலட்சுமி.

**** ***** ***** *****

தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்

No comments: