Thursday, December 25, 2014

பண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )


வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த இப்பாடலாசிரியர் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கக் கூடும்.

 இனி பாடல்-

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

                    -  பக்குடுக்கை நன்கணியார்.


உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.


அருஞ்சொற்பொருள்:
1. நெய்தல் = இரங்கற் பறை (சாவுப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல்,

இதைத்தான் கண்ணதாசனும், நமக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்றாரோ?!

2 comments:

Unknown said...

வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!

T.V.ராதாகிருஷ்ணன் said...

thanks Gurunatha sundaram