Monday, September 29, 2014

குறுந்தொகை -119



தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சத்தி நாதனார்

இனி பாடல்-

   
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை
   
கான யானை யணங்கி யாஅங்
   
கிளையண் முளைவா ளெயிற்றள்
   
வளையுடைக் கையளெம் மணங்கி யோளே.


                                   -சத்தி நாதனார்

உரை-

இளமையை உடையவளும், நாணல் முளையைப் போன்ற ஒளியையுடைய பற்களை உடையவளும், வளையினை உடைய கையினை உடையவளுமாகிய ஒருத்தி, வெள்ளிய பாம்பினது அழகிய கோடுகளையுடைய குட்டியானது காட்டுயானையை வருத்தினாற் போல எம்மை வருந்தச் செய்தனள்.



     (கருத்து) ஓர் இளைய மகள் என்னைத் தன் அழகினால் வருத்தினாள்.

(வெள்ளிய பாம்பு_ கோதுமை நாகம்.,


     இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் 

Sunday, September 28, 2014

குறுந்தொகை-118



தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் இருப்ப, தலைவி அவன் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குவாளாய் மாலைப் பொழுதில், “இன்னும் வந்திலர்” என்று கூறி வருந்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் நன்னாகையார்

இனி பாடல்-

 
புள்ளு மாவும் புலம்பொடு வதிய்
   
நள்ளென வந்த நாரின் மாலைப்
   
பலர்புகு வாயி லடைப்பக் கடவுநர்
   
வருவீ ருளீரோ வெனவும்

வாரார் தோழிநங் காத லோரே.

                    -நன்னாகையார்

   உரை-

(தோழி) பறவைகளும், விலங்குகளும் தனிமையோடு தங்க , நள்ளென்னும் ஓசைபட வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில் பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி வினாவுவார் உள்ளே வருவீர் இருக்கின்றனிரோ! என்று கேட்கவும் நம் தலைவர் வாரார் ஆயினர்.
 .


     (கருத்து) நம் தலைவர் இன்றும் வந்திலர்.

 
    ( தனக்குத் துன்பம் பயப்பதுபற்றி மாலையை நாரின் மாலையென்றாள், தன் வீட்டில் விருந்தினர் பலர் வந்து உண்ணுவாராதலின் அவர் தடையின்றிப் புகும் வாயிலைப் பலர் புகுவாயிலென்றாள். இராக் காலத்தில் விருந்தினர்களைப் புகவிட்டுப் பின்னும் எவரேனும் உள்ளாரோ என ஆராய்வாராகி ஏவலாளர்கள் வினவி, ஒருவரும் இலராக வாயிற்கதவை அடைத்தனர். தலைவன் வந்திருப்பின் விருந்தினர் கூட்டத்தில் ஒருவனாகப் புகுவான் அவன் அங்ஙனம் புகவில்லை ஆதலின், அவர் வந்திலரென்று தலைவி கூறினாள்.)

Saturday, September 27, 2014

குறுந்தொகை- 117


தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணக்காமல் நெடுநாள் ஒழுகினானாக, அவ்வொழுக்கத்தால் வரும் அச்சத்தினும் அவன் வாராதமைவதால் வரும் துன்பம் பொறுத்துக் கொள்ளுதற்கரியது என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி மணத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல் -

மாரி யாம்ப லன்ன கொக்கின்
   
பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு
   
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
   
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்

வாரா தமையினு மமைக்
   
சிறியவு முளவீண்டு விலைஞர்கை வளையே.

                      - குன்றியனார்


உரை-

(தோழி) மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தையுடைய கொக்கினது பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு தாழை வேரினிடையே உள்ள வளைக்குள் செல்லும் பொருட்டு இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல , விரைந்து செல்லுவதற்கிடமாகிய கடல் துறையையுடைய  தலைவன் இங்கு வராமல் பொருந்தினும் பொருந்துக.அவன் வராமையால் உன் உடல் மெலிய உன் கைகளில் அணிந்த வளைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் செரிப்பதற்குரியனவாகிய விற்பார் தரும் கைவளைகளுள் சிறிய அளவையுடையனும் இங்கு உள்ளன.


     (கருத்து) தலைவன் மணந்து கொள்ளாமையால் உண்டான மெலிவை நாம் மறைத்து ஒழுகுவோமாக.

   

   

     (கொக்கின் பார்வையை அஞ்சி நண்டு தன் வளையிலே தங்குவதைப் போல, ஊரினர் பழிமொழியை அஞ்சித் தலைவன் தலைவியை விரைவில் மணந்துகொண்டு தன் அகத்தே இல்லறம் நடத்தற்குரியன் என்பது குறிப்பு.)

Friday, September 26, 2014

குறுந்தொகை - 116


தலைவன் கூற்று
( தலைவியைக் கண்டு அளவளாவிய தலைவன் அவளது கூந்தற் சிறப்பைப் பாராட்டி நெஞ்சிற்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் இளங்கீரன்

இனி பாடல்

யானயந் துறைவோ டேம்பாய் கூந்தல்
   
வளங்கெழு சோழ ருறந்தைப் பெருந்துறை
   
நுண்மண லறல்வார்ந் தன்ன
   
நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே.

               - இளங்கீரன்

உரை-

(நெஞ்சே) என்னால் விரும்பப் பெற்றுத் தங்கும் தலைவியினது வண்டுகள் தாவுகின்ற கூந்தல் ,வளப்பம் பொருந்திய சோழரது உறையூரில் பெரிய நீர்த்துறையில் உள்ள நுண்ணிய கருமணல் நீண்டு படந்தாற் போன்ற நல்ல நெறிப்பை உடையன.வாசனைத் தன்மையும் உடையன.’.


     (கருத்து) தலைவியின் கூந்தல் நெறிப்பையும் நறுமணத்தையும் தண்மையையும் உடையன.

 (உறந்தை பெருந்துறை- காவிரித்துறை நெறிப்பு - படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண்டாகும் சுவடு).

     இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தலைவியின் கூந்தலாகிய மெல்லணையில் துஞ்சி இன்புற்றவன் ஆதலின் அக் கூந்தலின் இயல்புகளை நினைந்து, இவற்றாற் பெறும் இன்பத்தை இடைவிடாமல் நுகரும் பேறு பெற்றிலேமே என்னும் இரக்கக் குறிப்புப்பட இதனைத் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

Thursday, September 25, 2014

எங்கே போகிறோம்...??

                                       

வாழ்வா..சாவா..

போராட்டத்தில் ஒரு உயிர்

எள்ளளவும் காப்பாற்ற முயலாமல்

கடுகளவும் வருத்தப்படாமல்

படம் பிடித்து அதை

விளம்பரம் ஆக்கும் கூட்டம்

எங்கே போகிறோம் நாம்

மனித நேயம்

செத்துத் தொலைந்ததா

நம்மிடம்..


குறுந்தொகை- 115



தோழி கூற்று
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்
 
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
 
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
 
புலவி தீர வாளிமதி யிலைகவர்
 
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்

மென்னடை மரையா துஞ்சும்
 
நன்மலை நாட நின்னல திலளே.

                -கபிலர்

உரை-


அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண் மெல்லிய நடையையுடைய மரையா இலைகளை விரும்பி உண்டு துயிலுதற்கிடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ, பெரிய நன்மை ஒன்றை ஒருவர் நமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ?(யாவரும் போற்றுவர்)அது சிறப்பன்று.சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும் விருப்பம் மாட்சைமைப்பட்டு நீங்கும் வண்ணம் இவளை பாதுகாப்பாயாக!இவள் உன்னை அன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.


      (கருத்து) இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.

( ‘‘இவள் நினக்குப் பலவகையிலும் இன்பம் தரும் நிலையில் இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று; பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில் யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன் றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழி கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள்.)

 
     மரையா(ஒருவகை விலங்கு) தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்தொழுகு வாயாக வென்பது குறிப்பு.

Wednesday, September 24, 2014

குறுந்தொகை - 114


தோழி கூற்று
(தலைவியை அவனை சந்திக்கும் இடத்தில் நிறுத்தி வந்த தோழி தலைவனிடம் வந்து அதனைக் குறிப்பாகப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் பொன்னாகன்.

இனி பாடல்-

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
   
நின்குறி வந்தனெ னியறேர்க் கொண்க
   
செல்கஞ் செலவியங் கொண்மோ வல்கலும்
   
ஆர லருந்த வயிற்ற

நாரை மிதிக்கு மென்மக ணுதலே.

                -பொன்னாகன்.

உரை-

இயற்றப்பட்ட தேரை உடைய தலைவனே! நெய்தல் நிலத்தில் எனது பாவையை வளர்த்திவிட்டு நீ இருக்குமிடத்து வந்தேன்.இரவு வருதலும் ஆரல் மீனை அருந்தி நிறைந்த வயிற்றையுடைய ஆகிய நாரைகள் என் மகளாகிய அப்பெண்ணின் நெற்றியை மிதிக்கும்.நான் செல்கிறேன்.அவளை போகும்படி நீயே சொல்வாயாக.
   
   

     (கருத்து) தலைவியைக் கண்டு அளவளாவி விரைவில் விடுப்பாயாக.


     (என் மகள் என்றது பாவையை, பாவையினிடத்தே அன்பு பூண்டு அதனைப் போற்றி வளர்த்தலும், மணம் முதலிய செய்து மகிழ்தலும் மகளிர்க்கு இயல்பு.)

Tuesday, September 23, 2014

வீசப்பட்ட கல்

               


என் மனம் எனும்

ஏரியில்

கல்லினை வீசி விட்டாய்

நீ அறியாய்

அது சென்றடையும்

ஆழத்தை


குறுந்தொகை-113



தோழி கூற்று
(பகல் நேரத்தில் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று அங்கு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் மாதிரத்தன்

இனி பாடல்-
 
ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
 
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
 
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
 
துன்னலபோ கின்றாற் பொழிலே யாமெம்

கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
 
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

                   -மாதிரத்தன்


உரை-

(தலைவா) பொய்கை ஊருக்கும் அருகிலுள்ளது சிறிய காட்டாறு, அப்பொய்கைக்கும் அருகிலே உள்ள சோலை.அப்பொய்கையிலும்,ஆற்றிலும் உணவைத் தேடும் வெள்ளிய நாரைகளை அன்றி வேறு எந்த உயிரும் நெருங்காது ஒழியும்.நாங்கள் எங்கள் கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்னை கொணர அங்கு செல்வோம்.பெரியபேதமையையுடைய தலைவி அங்கும் வருவாள்.


    (கருத்து) பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு பேசலாம்

Monday, September 22, 2014

குறுந்தொகை-112




தலைவி கூற்று
(தலைவன் மணந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாயின், “நான் ஊரார் பழிமொழிக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்;அதனால் என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லை என்னிடம்
” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஆலத்தூர்கிழார்

இனி பாடல்-
 
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
 
எள்ளற விடினே யுள்ளது நாணே
 
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 
நாருடை யொசிய லற்றே

கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.

                -ஆலத்தூர் கிழார்

உரை-

பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினால், (என்) காமம் மெலிவடையும்.பிறர் இழித்தலுக்காக அக்காமத்தை விட்டு விட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே! ஆகும்.தலைவன் அனுபவித்த எனது பெண்மை, பெரிய யானை உண்ணுவதற்காக வளைத்து, நிலத்தில் படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையை போன்றாற்போலது ஆகும்.



     (கருத்து) ஊரார் பழிக்கு அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.

 


     களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளை ஆனது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலையில் இருத் தலைப்போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் தன் பண்டை நிலைமையைப் பெறாத நிலையிலிருப்பினும், முற்றும் அழிந்தொழியாமையால் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளது..

Saturday, September 20, 2014

குறுந்தொகை - 111




தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் தீன்மிது நாகன்

இனி பாடல்-
 
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்
   
வென்றி நெடுவே ளென்னு மன்னையும்
   
அதுவென வுணரு மாயி னாயிடைக்
   
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
   
வல்லே வருக தோழிநம்
   
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.

                       - தீன்மதி நாகன்

உரை-

(தோழி) மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெறியாட்டாளன், வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்வான்.நம் தாயும் அதுவென நினைப்பாளாயின் அப்போது கருமையான பெண் யானையினது கை மறைந்தாற் போன்ற கரி நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன் நம வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையை காணும் பொருட்டு சிறிது நேரமிங்கு விரைந்து வந்து செல்வானாக!


     (கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.



 சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு, “தலைவன் இன்னும் வரைந்து கொள்ளாமையால் தலைவி துன்புற்றாள்; அவளுடைய அகத்துன்பம் புறத்தாருக்குப் புலனாகும்படி அவள் தோள்கள் நெகிழ்ந்தன. அதுகண்டு தாய் வெறியாட்டெடுக்க எண்ணியுள்ளாள்” என்பதைப் புலப்படுத்தினாளாயிற்று. தலைவன் இதனை யுணர்ந்து விரைவில் வரைந்து கொள்ளுதல் இதன் பயன்.

Friday, September 19, 2014

குறுந்தொகை-110


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வரவில்லை. “இனி அவர் வந்தாலும், வராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து விடுவேன்” என்று தலைவி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கிளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

 
வாரா ராயினும் வரினு மவர்நமக்
   
கியாரா கியரோ தோழி நீர
   
நீலப் பைம்போ துளரிப் புதல
   
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி

நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த
   
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென்
   
றின்னா தெறிதரும் வாடையொ
   
டென்னா யினள்கொ லென்னா தோரே.

                     - கிள்ளிமங்கலங்கிழார்

உரை-

நீரிலுள்ள நீலத்தினது மலரும் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து புதலில் உள்ள மயில்தோகையில் உள்ள கண்னைப் போன்ற கருவிளை மலரை அலைத்து, நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறத்தையும், துய்யையும் உடைய மலர்கள் உதிரும்படி குளிர்ச்சியுடையதாகி இன்னாததாகி வீசுகின்ற வாடைக்காற்றால் எத்தன்மையினள் ஆனாளோ? என நினைத்து கவலைப்படாத தலைவன் இனி வந்தாலும், வராவிட்டாலும் நமக்கு எத்தகைய உறவினர் ஆவார்? (வருவதற்குள் இறந்துவிடுவேன்)


   

     (கருத்து) தலைவர் வராவிட்டால் நான் இறந்துவிடுவேன்.

     (“உயிரோடிருப்பின் அவர் வந்தால் இன்புறுவேன்; அவர் வருதற்குரித்தான இப்பருவத்தில் வாராமையால் நான் இனி இறந்து விடுவேன்; நான் இறந்துபட்ட பின்னர் அவர் வரினும் வாராவிடினும் எனக்கு ஆகும் ?பயன் ஒன்றுமில்லை” என்று தலைவி கூறினாள்.)

   

Thursday, September 18, 2014

குறுந்தொகை-109



தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அண்மையனாக இருக்கையில் தலைவிக்குக் கூறுபவளாய், “தலைவர் நாடோறும் வந்து பயின்று செல்லும் இக்காலத்தில் நின் நுதற்கவின் மாறியது என்?” என்று தோழி, அவனுக்கு வரைய வேண்டியதன் இன்றியமையாமையைப் புலப்படுத்தியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நம்பி குட்டுவன்

இனி பாடல்
 
முடக்கா லிறவின் முடங்குபுறப் பெருங்கிளை
   
புணரி யிகுதிரை தரூஉந் துறைவன்
   
புணரிய விருந்த ஞான்றும்
   
இன்னது மன்னோ நன்னுதற் கவினே.

                    -நம்பி குட்டுவன்

உரை-

வளைவையுடைய காலையுடைய இறாமீனின் , வளைந்த முதுகையுடைய பெரிய இனத்தை கடலில் தாழும் அலையானது கொண்டு வந்து தருவதற்கு இடமாகிய துறையையுடைய தலைவன், அளவளாவ இருந்த பொழுதும், உனது நல்ல நெற்றியின் அழகு பிறர் பழிக்கும் வண்ணம் குறைபாட்டையுடைய இத்தகையாயிற்று (பசலை நோயால்).இது இரங்கற்குரியது


     (கருத்து) தலைவன் மணந்தால் அன்றி நின் வேறுபாடு நீங்காது.


   நுதற்கவின் இன்னதென்றது பசலை பெற்றதைக் குறித்தது. களவுக் காலத்து இடையீடு உண்மையின் அதனால் வருந்திய தலைவியின் நிலை நீங்க அவளை மணந்து கொண்டு உடனுறைந்து இல்வாழ்க்கை நடத்தலே தகுதியென்று தோழி குறிப்பால் அறிவுறுத்தினாள்.

Wednesday, September 17, 2014

குறுந்தொகை- 108


தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வரவில்லை. இனியும் அவன் பிரிவை பொறுத்திருக்க மாட்டேன்"  என்று வருந்திக் கூறியது.)
 
முல்லை திணை - பாடலாசிரியர் வாயிலான்றேவன்

இனி பாடல்-

 
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
   
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
   
பாசிலை முல்லை யாசில் வான்பூச
   
செவ்வான் செவ்வி கொண்டன்

றுய்யேன் போல்வ றோழி யானே.

                     - வாயிலான்றேவன்

உரை-

(தோழி) மேகங்கள் விளையாடுவதற்கிடமான மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு சென்றிருந்த பசுக்கள், தனது கன்றுகளை நினைத்துச் செல்ல முல்லை நிலத்தில் பசிய இலைகளிடையே முல்லையினது சிறந்த மலர்ப் பரப்பு சிவந்த வானத்தின் அழகைக் கொண்டது’.இக்கார்பருவத்து மாலையில் தலைவர் வராவிடின் நான் உயிர் வாழேன்

 
    (கருத்து) கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனியும் என்னால் பொறுத்திருக்க இயலாது

Tuesday, September 16, 2014

குறுந்தொகை- 107


தலைவி கூற்று
(பொருளீட்ட பிரிந்த தலைவன் மீண்டும் வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.)


 மருதம் திணை- பாடலாசிரியர் மதுரைக் கண்ணனார்

இனி பாடல்-

 
குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன
   
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
   
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
   
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
   
யாண ரூரன் றன்னொடு வதிந்த்
   
ஏம வின்றுயி லெடுப்பி யோயே.

                           - மதுரைக் கண்ணனார்


உரை-

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளீய பூவைப் போன்ற தொக்க சிவந்த கொண்டையையுடைய கூட்டங்கொண்ட சேவலே, ஆழமாகிய நீரில் உண்டாகும் புது வருவாயையுடைய ஊரையுடைய தலைவனுடன் தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும் எம்மை எழுப்பினை..இருள் பிரியா இரவில்.(ஆதலால்) வீட்டிலுள்ள எலிகளை உண்ணூம் பொருட்டு அலையும் காட்டுப் பூனையின் குட்டிக்கு சிலநாள் வைத்திருந்து உண்ணும் உணவாகை..மிக்க துன்பத்தை அடைவாயாக!




     (கருத்து) பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.

(தலைவி காம மயக்கத்தில் இருக்கையில், பொழுது புலர்ந்ததென்று உணர்த்திய சேவல் தவறாக உணர்த்தியது போல இருந்தமையால் இப்படிக் கூறுகிறாள்

.

Monday, September 15, 2014

குறுந்தொகை - 106



தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-


புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்
   
வரையிழி யருவியிற் றோன்று நாடன்
   
தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
   
வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு்
   
தான்மணந் தனையமென விடுகந் தூதே.

                     -கபிலர்

     (பி-ம்.) 1. ‘வீழாற்றிக்’, ‘வீழித்திக்’; 3. ‘தீதின்னெஞ்சத்துக்’; 4. ‘நயந்தன்று’; 6. தாமளந்தனைய, தாம்வரைந்தனைய.

 புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது,  மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர்,  மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும்,  நாட்டையுடைய தலைவன்,  குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது, நம்மிடத்து வந்தது; நாமும்,  நெய்யைப் பெய்த தீயைப்போல,  அத்தூதை ஏற்றுக்கொண்டு,  அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி,  தூதுவிடுவோம்.


    (கருத்து) தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.

     (வி-ரை.) தலைவன் பரத்தையிற் பிரிந்தானாக அவன் அன்பிலனென் றெண்ணிய தலைவியின்பால் அவன் விடுத்த தூது, “தலைவன் தலை நாளன்ன அன்பினன்; அவனை ஏற்றருள வேண்டும்’’ என்று கூறியது கேட்ட அவள், “அவன் அத்தகையனாயின் நாமும் மணநாளின்கண் வைத்திருந்த அன்பிற்குறைவின்றியுள்ளேமென்று தூது விடுவேம்” என்று தோழிக்குக் கூறியது இது.

 

Saturday, September 13, 2014

குறுந்தொகை - 105



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் நட்பு அவன் வராததால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)

குறிஞ்சி திணை-பாடலாசிரியர் நக்கீரர்

இனி பாடல்-
 
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்
   
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
   
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
   
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை்
   
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.

                   -நக்கீரர்

உரை-

குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை, உண்ணும் தெய்வத்திற்குப் பலியாக இட்ட வளர்ந்த கதிரை தெரியாது உண்ட மயில், ஆடுமகள்(கணிகை) வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்குவதற்கு இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு கண்ணீர் மிக்க கண்களோடு நான் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.

   
     (கருத்து) தலைவன் வராததால் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.

, (மலைவாழ் மக்கள் தினையை  விளைத்து அதில் தோற்றும் முதற் கதிரைத் தெய்வத்துக்குப் பலியாக இடுதல் மரபு.)

Friday, September 12, 2014

குறுந்தொகை-104



தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் பிரிந்து வாழ்வதில் பொறுக்கமுடியா தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டும் வந்திலர்; நான் எங்ஙனம் பொறுத்து கொள்வேன்!” என்று கூறியது.)

பாலை திணை- பாடலாசிரியர் காவன்முல்லைப் பூதனார்

இனி பாடல்-
 
அம்ம வாழி தோழி காதலர
   
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
   
தாளித் தண்பவர் நாளா மேயும்
   
பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே.

                  - காவன்முல்லைப் பூதனார்



உரை _

தோழி ஒன்று கூறுவேன் கேட்பாயாக! தலைவன் , நூலற்ற முத்துமாலையிலிருந்து தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை விடியலில் பசுக்கள் மேயும் பனி விழும் காலத்திலே பிரிந்து சென்றார்.அங்ஙனம் பிரிந்து சென்று வாழ்ந்த நாட்களும் பலவாகின்றன.நான் அதை எப்படி பொறுப்பேன்.

 
    (கருத்து) தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் திரும்பிவரவில்லை.

(தாளிஅறுகு-ஒருவகைக் கொடி.பசு மேய்கையில் அறுகின் நுனியில் உள்ள பனித்துளிகள்)

   
   

Thursday, September 11, 2014

குறுந்தொகை-103




தலைவி கூற்று
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வராததால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவு பொறுக்கமுடியாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் வாயிலான் தேவன்

இனி பாடல்-

கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற்
   
கவிரித ழன்ன தூவிச் செவ்வாய்
   
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
   
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்

வாரார் போல்வர்நங் காதலர்
   
வாழேன் போல்வ றோழி யானே.

                   -வாயிலான் தேவன்
உரை-

(தோழி) மிக்க புனலால் தொகுக்கப்பட்ட நடுங்குவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து மீனாகிய உணவைத் தேடுகின்ற
முள்ளு முருங்கை மலரின் இதழைப்போன்ற மெல்லிய இறகையும், செம்மையாகிய அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படி தூவும் நீர்த்துளிகளையுடைய பிரிந்தார் துயரடையக் காரணமான வாடைக்காற்றையுடைய கூதிர் காலத்திலும் பிரிந்து சென்ற என் தலைவன் வரவில்லை.இனி நான் வாழ்வேனல்லேன்.


     (கருத்து) தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.


    ( “என்னுடன் தாம் சேர்ந்திருத்தற்குரிய இவ்வாடைக் காலத்திலும் தலைவர் வரவில்லை. இவ்வாடையின் துயர் பொறுத்தற்கு அரிதாயிற்று; அவருடைய பிரிவை இக்காலம் மிகுதியாகப் புலப்படுத்தி விட்டதாதலின் இனி உயிரை வைத்துக் கொண்டு ஆற்றும் ஆற்றல் இல்லேன்” என்று தலைவி கூறி வருந்தினாள்.)

Wednesday, September 10, 2014

குறுந்தொகை-102



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கூறியதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.)

நெய்தல் திணி - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
   
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி்
   
வான்றோய் வற்றே காமம்
   
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே.

                    -ஔவையார்

உரை-

தலைவனை நினைந்தால் என் உள்ளம் வேவா நிற்கும்.நினைக்காமல் இருப்பது என்பது எனது ஆற்றலின் அளவிற்கு உட்பட்டதன்று.காம நோயால் என்னை வருந்தச் செய்வது, வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது
எம்மால் மருவப்பட்ட தலைவன் சால்புடையார் அல்லர்.


     (கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.

Tuesday, September 9, 2014

குறுந்தொகை - 101



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர்  மோவாய்ப்பதுமன்
இனி பாடல்-
 
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்
 
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்
 
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
 
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி
 
மாண்வரி யல்குற் குறுமகள்
 
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.

                        - மோவாய்ப்பதுமன்


உரை-

விரிந்த அலையையுடைய பெரிய கடல் வளைந்த பூவுலக இன்பமும்,, பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும் ,
ஆகிய இரண்டும் தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும் , பொன்னைப் போன்ற நிறத்தையும் மாட்சிமைப்பட்ட பெண்ணழகையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும் அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.


     (கருத்து) தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.

(தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல்.)

 

Monday, September 8, 2014

குறுந்தொகை- 100



தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்கு, “நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)


 குறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
அருவிப்பரப்பி னைவனம் வித்திப்
   
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
   
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
   
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்

வல்வில் லோரி கொல்லிக் குடவரைப்
   
பாவையின் மடவந் தனளே
   
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.

                              -கபிலர்

   உரை-

அருவு பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையில் களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலை மல்லிகையோடு, பசிய மரலை களைந்தெறியும் காந்தளையே இயற்கை வேலியாகயுடைய சிற்றூரிலுள்ளார்..உணவின்றி பசித்தாராயின் தறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அப்பணத்தில் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப்போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள் ஆயினும் அவளுடைய மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள் தழுவதற்கு அரியனவாகும்.



    (கருத்து) என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.

     (நான் அவளைக் கண்டு படும் துயரத்தை அறியாத ஒன்றும் அறியாத அவள் பெறுதற்கரியவள்)

Sunday, September 7, 2014

குறுந்தொகை - 99



தலைவன் கூற்று
( தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினவ... தோழியிடம், “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளினெ னல்லெனோ யானே யுள்ளி
   
நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து
   
மருண்டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே
   
நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை

இறைத்துணச் சென்றற் றாஅங்
   
கனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே.

                    -ஔவையார்

உரை-

உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டு பெருகும் வெள்ளம், பிறகு கையால் இறைக்கும் அளவிற்கு சிறுகிச் சென்று இல்லாமல் ஆனது போல. வெள்ளத்தைப் போன்ற காம நோய், இங்கு நான் வருதலால் முடிவடையும் படி ஆழ்ந்து நினைத்தேன் அல்ல போலும்.அங்ஙனம் எண்ணி மீண்டும் மீண்டும் மிக நினைவு கொள்ளவில்லை போலும்.அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுவதற்கு மாறாக இருக்கும் உலக இயல்பை எண்ணி மயங்கினேன் போலும்.


 (கருத்து) யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.

Saturday, September 6, 2014

குறுந்தொகை-98



தலைவி கூற்று
(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தில் வராததால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)

முல்லை திணை - பாடலாசிரியர் கோக்குளமுற்றன்

இனி பாடல்-

 
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த்
   
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
   
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
 
நீர்வார் பைம்புதற் கலித்த

மாரிப் பீரத் தலர்சில கொண்டே.

                      -கோக்குளமுற்றன்

உரை-

(தோழி) நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதரினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கொண்டு தலைவரை நெருங்கச் சென்று நல்ல நெற்றியையுடைய தலைவி இம்மலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவரிடம் சொல்லுவாரைப் பெற்றால் மிக்க உதவியாக இருக்கும்.



    (கருத்து) நான் பசலை நோயடந்ததை தலைவர் அறிந்திலர்; அறியின்  வருவார் போலும்!



    (தலைவன் பொருளீட்டும் பொருட்டு பிரிந்துள்ளான். அவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தகாலத்தில் அவன் வராததால்  வருந்திய தலைவி “தலைவரது பிரிவினால் நான் பசலைபெற்றேன்; என் மேனி அழகு அழிந்தது. அவர் என் நிலையை அறியார் போலும்! யாரேனும் அவர் உள்ள இடத்திற்குச் சென்று ‘உன் பிரிவினால் தலைவி நலனிழந்து பசலையுற்றாள்; நீ கூறிய பருவமும் வந்தது’ என்று நினைவுறுத்தினால் அவர் விரைந்து வந்து மணந்து கொள்வார்” என்று கூறினாள்.)

Friday, September 5, 2014

குறுந்தொகை - 97



தலைவி கூற்று
(தலைவன் மணம் புரியாது நெடுநாள் இருப்பதால் வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் மணக்கும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-
 
யானே யீண்டை யேனே யென்னலனே
   
ஆனா நோயொடு கான லஃதே
   
துறைவன் றம்மூ ரானே
   
மறையல ராகி மன்றத் தஃதே.

                      -வெண்பூதி

உரை-

நான் இவ்விடத்தில் தனியே இருக்கிறேன்.எனது பெண்மை நலம் என்னை நீங்கி அமையாத வருத்தத்துடன் கடற்கரைச் சோலையினிடத்தது,ஆயின் தலைவன் தனது ஊரில் இருக்கிறான்.எங்களது நட்புப் பற்றிய செய்தியானது பலர் அறிந்து பேசும்படியாக பொதுமன்றத்தில் பரவியுள்ளது.


 
  (கருத்து) என் நலனுண்ட தலைவர் இன்னும் என்னை மணக்க  முயற்சியைச் செய்தாரல்லர்.

 


Thursday, September 4, 2014

ஆறடியும் சொந்தமில்லை

                                     

பத்து கால்களுடன் வந்து

தீப் படுக்கையில்

போடப்பட்டு

ஒரு மண்பாத்திரத்தில்

அடங்கிடும் சாம்பலாய்

எப்பேர்பட்டவன் வாழ்வும்

அதற்குள்..

எத்தனை எத்தனை

ஆணவம்..பழிவாங்கல்

கொடூர புத்தி..

வேணாமே இது..

வாழும் வரை

நல்லவனாய் வாழ்ந்திடுங்களேன்

அப்பேராவது நிலைக்கட்டுமே!


குறுந்தொகை -96




தலைவி கூற்று
(தலைமகன் ம்ணக்காமல் வந்து பழுகிய காலத்தில் அவனைத் தோழி தலைவனின் இயல்பை பழித்தாளாக, அது கேட்ட தலைவி தோழியைச் சினந்து கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
அருவி வேங்கைப் பெருமலை நாடற்
   
கியானெவன் செய்கோ வென்றி யானது
   
நகையென வுணரே னாயின்
   
என்னா குவைகொ னன்னுத னீயே.

                     -அள்ளூர் நன்முல்லை



 உரை-
நல்ல நெற்றியையுடையாய்...அருவியினதருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டிற்குரிய தலைவனை நான் என் செய்வேன் என்று கூறி அவன் இயல்பை பழித்தாய்.அப்படி நீ கூறியதை நான் விளையாட்டாய் எடுத்துக் கொண்டேன்..இல்லாவிடில் நீ (என்னிடம்) என்ன பாடு படுவாய். (மிகவும் துன்பப்படுவாய்)



     (கருத்து) நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.

 

Wednesday, September 3, 2014

குறுந்தொகை - 95



தலைவன் கூற்று
(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு(தோழனுக்கு), “ஒரு குறமகளிடம் கொண்ட காமத்தால் என்னிடம் மாற்றம் உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
   
மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி
   
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்
   
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
   
நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே.

                           கபிலர்

உரை_

பெரிய மலையினிடத்து வீழும் அருவி பாறைகளின் வெடிப்புகளில் ஒலிக்கும், பல மலரையுடைய சாரலில் உள்ள சிற்றூரிலுள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய மகளினது நீரைப் போன்ற மென்மை, தீயையொத்த என் வலியைக் கெடச் செய்தது.
  .


 .(கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.

Tuesday, September 2, 2014

குறுந்தொகை - 94



தலைவி கூற்று
(தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர்

இனி பாடல் -

.  
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்
   
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே
   
யானே மருள்வேன் றோழி பானாள்
   
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்

என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
   
அருவி மாமலைத் தத்தக்
   
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.

                       -கந்தக் கண்ணன்

உரை-

(தோழி) பெரிய தண்மையையுடைய மழைகாலத்துக்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன.அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்.ஆயினும், என்னைப் பிரிந்தவராகிய இன்னும் என்னிடம் வந்து சேராமல் இருக்கும் தலைவர் அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி தொகுதியாகிய பெரிய மேகத்தினது முழங்கும் ஓசையை நடுஇரவில் கேட்டால் தான் பிரிவினால் வருந்துவதன்றி மீண்டும் எந்த நிலையை உடையவராவாரோ?


   (கருத்து) தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?

Monday, September 1, 2014

குறுந்தொகை- 93


தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்து வந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ கோபப்படாதே!; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியர் அல்லர்” என்று தலைவி கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் நன்முல்லையார்

இனி பாடல்-

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
   
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்
   
கன்னையு மத்தனு மல்லரோ தோழி
   
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே.


                            -அள்ளூர் நன்முல்லையார்.

உரை _ (தோழி) நல்ல பெண்மை நலம் கெடவும், மேனியழகு மெலியவும், எல்லாவற்றினும் இனிய உயிர் நீங்கினாலும், அவர் பற்றி பரிவு ஏற்படும் சொற்களை சொல்லாதே!தலைவர் நமக்கு அன்னையும், தந்தையும் ?அல்லரோ!
 தலைவன் தலைவியரிடத்து அன்பு இல்லா இடத்தில் ஊடல் எதன் பொருட்டு?
 

(கருத்து) தலைவன் என்பால் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.

    (வி-ரை.) நலம் இரண்டனுள் முன்னது பெண்மை நலம்; இரண்டாவது அழகு.

 அவரை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்” என்று தோழி கூற, “என்னுடைய நலமும் உயிரும் தொலையுமேனும் பொறுத்துக்கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளல் என் கடன்; அவர் அன்னையையும் அத்தனையும் போல உபசரிக்கத்தக்கவர்; ஆயினும் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவர்பால் இல்லை; என தலைவி கூறினாள். இவ்வயன்மைக் குறிப்பினால் வாயில் மறுத்தாளாயிற்று

Saturday, August 30, 2014

குறுந்தொகை - 92



தலைவி கூற்று
(மாலைப்பொழுது வந்ததுகண்டு தலைவி, “பறவைகள் தம் குஞ்ச்கலுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி, “இனிஆற்றேன்” என்பதுணர்த்தியது.)

நெய்தல் திணை= பாடலாசிரியர் தாமோதரன்

இனி பாடல்-
   
ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
   
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
   
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
   
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே

                      _ தாமோதரன்

உரை-

கதிரவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த
வளர்ந்த கடம்ப மரத்தில் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் உள் வாயினுள்ளே செருகும் பொருட்டு இரையை தன் அலகில் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லும்.அவை இரங்கத்தக்கன.


 (கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.

   
(இதனால் தலைவி மாலைப்பொழுது வந்ததையறிந்து காமநோய் மிகப்பெற்று ஆற்றாளாயினளென்பது மறைபொருள்)

Thursday, August 28, 2014

உவமைகளை ரசியுங்கள் (கொஞ்சி விளையாடும் தமிழ்)



உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.

இதயத்தின் மணம்

                   


இதய நறுமணத்தை

நுகர்ந்ததுண்டா?

மென்மையான

ரோஜா மலராய்

இதயம் இருந்தால்

நீங்கள் நுகர்ந்திருப்பீர்


குறுந்தொகை - 91



தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்  


அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
   
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
   
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்
   
பலவா குகநின் னெஞ்சிற் படரே

ஓவா தீயு மாரி வண்கைக்
   
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
   
கொன்முனை யிரவூர் போலச்
   
சிலவா குகநீ துஞ்சு நாளே.

                          -ஔவையார்

உரை-
ஒன்றோடொன்று பிணங்கு தலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை, ஆழமாக நீரையுடைய குளத்திலுள்ள கெண்டை மீன் கவ்வுதற்கிடமாகிய தண்ணிய நீர்த் துறைகளையுடைய ஊர்த்தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாக ஆகுக.காலமும். இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும், மேகம் போன்று கைமாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செலவையுடைய ஆண்யானைகளையும் ,உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியெனும் உபகாரியினது அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் உள்ள இரவையுடைய ஊரிலுள்ளோர் போல நீ துயிலும் நாட்கள் சிலாஆகுக!


    (கருத்து) தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.


.(கெண்டைமீன் பிரப்பம் பழத்தைக் கவர்ந்து உண்ணும் குளங்கள் சூழ்ந்த நாட்டை உடையவன் தலைவன். அவனது மனைவி நீ ஆயின் இரவூர் போல நீ துஞ்சும் நாள் சிலவாகுக. உன் நெஞ்சம் அவன் என்னைக் கவர்ந்து உண்டதை நினைந்து நினைந்து வருந்தும் நாள் பலவாகுக - இவ்வாறு பரத்தை தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.
கெண்டைமீன் பிரம்புப் பழத்தைக் கௌவும் என்றது தலைவன் பரத்தையைக் கௌவிக்கொண்டதை உணர்த்தும் உள்ளுறை.)

இரவூர் என்னும் ஊரை அதியமான் நெடுமான் அஞ்சி தன் யானைப்படையுடன் சென்று தாக்கினான். அதுமுதல் இரவூர் மக்கள் சில நாட்களே உறங்கினர். பலநாள் அவன் தாக்கியதை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகி வருந்தினர்.

Wednesday, August 27, 2014

குறுந்தொகை - 90



தோழி கூற்று
(தலைவன் திருமணம் செய்யாது நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் சேந்தன் பூதன்.

இனி பாடல்-


எற்றோ வாழி தோழி முற்றுபு
   
கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய
   
மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
   
கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம்
   
குன்ற நாடன் கேண்மை
   
மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.

                         - சேந்தன் பூதன்.

    உரை-

சூல் முற்றி மிளகுக்கொடி வளர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் இரவெல்லாம் முழங்கிக்கொண்டு மழை பொழிய, கலைமான் சுளையைத் தின்றபின் கோதுமயிரினை உடைய பலாப்பழம் வரைப்பாறையிலிருந்து விழும் அருவியில் மிதந்து வரும் நாட்டை உடையவன் தலைவனது நட்பு உனது மெல்லிய தோள்களை மெலியச் செய்தும் அமைதியைத் தந்தது


 (கருத்து) நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.


தலைவன் தலைவியை அடைய வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதில் காலம் கடத்துகிறான். தலைவனுக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள். (தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையலாம். (இப்போது அடைய முடியாது என்பது கருத்து.)


   

Tuesday, August 26, 2014

குறுந்தொகை - 89



தோழி கூற்று
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் திருமணம் செய்து கொள்ளல் நலமென்பதை உணர்த்தியது.)
 

மருதம் திணை - பாடியவர் பரணர்.

இனி பாடல்-

பாவடி யுரல பகுவாய் வள்ளை
   
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
   
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
   
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
   
நல்லியற் பாவை யன்னவிம்
   
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.

                        - பரணர்

உரை-

பெரிய அணிகலத்தையுடைய சேரனுக்குரிய , அச்சம் தருதல் மிக்க கொல்லிமலையில் உள்ள கரிய கண்களையுடைய தெய்வம் அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய நல்ல இயலையுடைய பாவையை ஒத்த இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி,தன் தலைவனுடைய பெயரைப் பாடி இடிப்பாளாயின், அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்து தானியம் இடிக்கும் போது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து அயலார்கள் குறைகூறுதலையும் செய்வார்கள்.இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு வருந்துவதால் பயன் என்ன?
.


(கருத்து) ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.

   

    வள்ளை உரற்பாட்டு- மகளிர் உரலில் நெல் முதலியவற்றை இடிக்கும்போது அதனால் உண்டாகும் அயர்வு தோற்றாதிருக்கும் பொருட்டுப் பாட்டுப்பாடுதல் இயல்பு; இங்ஙனம் பாடும் பாட்டு வள்ளைப் பாட்டெனப்படும்.
    இப்பாட்டு, இடிப்பவர்களுடைய அன்புக்குரியாரைத் தலைவர்களாகப் பெற்றிருத்தல் மரபு;

Monday, August 25, 2014

தவிக்கும் செடி..



                 


மலரில்

அமர்ந்தது வண்டு

செடியின் அனுமதியின்றி

மலரும்

தேனைத் தந்தது..

தேனுண்ட வண்டு

தாவியது அடுத்த மலருக்கு

கையறு நிலையில்

தவித்தது செடி...

மலரோ.

வாட ஆரம்பித்தது..



குறுந்தொகை = 88



தோழி கூற்று

(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடியவர்  மதுரைக் கதக்கண்ணன்

ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
 
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
 
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
 
நடுநாள் வருதலும் வரூஉம்

வடுநா ணலமே தோழி நாமே.

                - மதுரைக் கதக்கண்ணன்

உரை-

ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையான புலியைத் தாக்கி ,தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே இடையிரவில் வருதலையும் செய்வான்.அங்ஙனம் அவன் வருதலினால் நமக்கு உண்டாகும் ப்ழிக்கு நாம் வெட்கப்பட மாட்டோம்.

(அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து பார்ப்பான்)


   (கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.

     (வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.)
 இரவுக்குறி _ தலைவன் இரவில் வந்து தலைவியை சந்திக்கும் இடம்
   .

Sunday, August 24, 2014

குறுந்தொகை - 87



தோழி கூற்று
(தலைவன் தெய்வம் உன் உறுதிமொழி அளித்துப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அதனால் அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
 
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
 
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
 
பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.

என்பது தலைமகள் தெய்வத்திற்குப் பராயது.

                         -கபிலர்.

உரை-

பொதுவிடத்திலுள்ள மராத்தின் கண் தங்கும், பிறருக்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தம் என்று அறிந்தோர் கூறுவர்.குன்றுகள் பொருந்திய நாட்டுடைய என் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை உடையவர் அல்லர்.என் நெற்றி நான் அவரை விரும்பியதால் பசலை பெற்றது.என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.

(கருத்து) என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.

 

     தலைவன் தலைவியோடு அளவளாவிய பொழுது கடம்ப மரத்திலுறையும் கடவுள்மேல் ஆணையிட்டு, “நின்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்” என்று உறுதி அளித்தான்.தெளித்தான்; பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடு களுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக் கொடுமை கருதி அவனாற் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்கு மென்று அவள் கவன்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடையன் அல்லன் எனக் கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டுமென்று தெய்வத்தை வேண்டினாள்.
   

 

Saturday, August 23, 2014

குறுந்தொகை - 86


தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் காலத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெண்கொற்றன்

இனி பாடல்
 
சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
   
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
   
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
   
தூதை தூற்றுங் கூதிர் யாமத்

தானுளம் புலம்புதொ றுளம்பும்
   
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.


                          -வெண்கொற்றன்.

  உரை -

மழைத்துளி மிக்க, வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப்பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந் தோறும் அலைகின்ற (தலையாட்டுதலால்)நா வினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும்   குளிர்ச்சியையுடைய கண்ணோடும், பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதளாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளனரோ?

(கூதிர் கலம்
 _ஐப்பசி, கார்த்திகை)

  (கருத்து) தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் நானொருத்தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.

Friday, August 22, 2014

குறுந்தொகை - 85



தோழி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவர் அன்பு புலப்படுகின்றது.  ஆனால் அவர் செயலால் தெரியவில்லை” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் வடமவண்ணக்கன்

இனி பாடல்-

யாரினு மினியன் பேரன் பினனே
   
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
   
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
   
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்
   
யாண ரூரன் பாணன் வாயே.

                 -வடமவண்ணக்கன்

உரை-
  உரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசா வெள்ளிய பூவை கோதியெடுக்கும்.புதிய வருவாயை உடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லாரினும் இனிமை உடையான்/தலைவியினிடம் பெரிய அன்பினை உடையான்.(உண்மையில் அங்ஙனம் இல்லை)

   

(கருத்து) பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.

Thursday, August 21, 2014

குறுந்தொகை - 84



செவிலித்தாய் கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் மோசிகீரன்

இனி பாடல்-

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றனள்
 
இனியறிந் தேனது துனியா குதலே
 
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
 
வேங்கையுங் காந்தளு நாறி

ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே.



                                 - மோசிகீரன்

உரை-

உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது. மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும், காந்தள் மலரினது மணத்தையும் வீசி ., ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையளாகிய என் மகள், நான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீண்டும் தழுவும் காலத்து, நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்.அப்படி நான் தழுவியது அவளுக்கு வெறுப்பு உண்டாகக் காரணம், அவள் கூறிய அக்காலத்தே அறியவில்லையாயினும் இப்போது அறிந்தேன்.

 
    (கருத்து) தலைவி என்மேல் வெறுப்புற்று  தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே நான் அறியவில்லை..


     செவிலி அறிந்தது, (“ தலைவனது தழுவலை இன்பமாகக் கருதியவளாதலின் பிறர் தழுவல் வெறுப்புறச் செய்தது” என்பதனை. “முன்பு விருப்பாயிருந்த என் அணைப்பு இப்பொழுது அவளுக்கு வெறுப்பாயிற்று” என்பது குறிப்பு;)

 ஆய்: ஏழுவள்ளல்களுள் ஒருவன். இவனுக்குரியது பொதியின் மலை. மழைதவழ் பொதியிலென்றது, காந்தளும் வேங்கையும் வளம் பெற வளர்தற்குரிய மழையுண்டென்பதைக் குறித்தது.



 


Wednesday, August 20, 2014

குறுந்தொகை - 83


தோழி கூற்று
(திருமணம் செய்யும் முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி, அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் வெண்பூதன்

இனி பாடல்-
 
அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
   
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
   
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
   
தீம்பழந் தூங்கும் பலவின்

ஓங்குமலை நாடனை வருமென் றோளே.

                - வெண்பூதன்


உரை-

தன் வீட்டில் இருந்து, தனது முயற்சியால் ஈட்டிய பொருளில், தம் பாகத்தை உண்டது போன்ற இன்சுவையை தருகின்ற , கிளைகள் தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலா மரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவன், தலைவியை திருமணம் செய்யும் பொருட்டு பொருளோடு வருவான் என கூறியவளாகிய அன்னை, பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாய்,பெரும் புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.


     (கருத்து) தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.

(செவிலை எனப்படுபவள் வளர்ப்புத் தாய் ஆவாள்.பல நேரங்களில் தோழியின் தாயே தலைவியின் செவிலித்தாயாக இருப்பதுண்டு)

 

Tuesday, August 19, 2014

குறுந்தொகை - 82


தலைவி கூற்று
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கடுவன் மள்ளன்

 இனி பாடல்-

   
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்
   
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
   
யாரா குவர்கொ றோழி சாரற்
   
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி யவரை பூக்கும்
   
அரும்பனி யச்சிரம் வாரா தோரே.

                      - கடுவன்மள்ளன்

உரை -

(தோழி)மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது, சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக்கொடி மலர்கின்ற, பொறுத்தற்கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வராத தலைவர் நீட்சியையுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து ,அழுதலையொழியெனக் கூறி என் அழுத கண் துடைப்பார் முன்பு.இப்பொழுது, எப்படிப்பட்டவராய் இருக்கிறாரோ!


    (கருத்து) தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) தான் பிரியுங்கால் தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும் கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்து பிரிந்தானாதலின் அச்செயல்களை நினைந்து, “அங்ஙனம் செய்த தலையளியை யுடையார் இன்னும் வாராமல் புறக்கணிக்கிறாரே!!” என்று வருந்தினாள். தோழி, தலைவன் பிரியுங்கால் செய்த தலையளியை நினைவுறுத்தி வற்புறுத்தினாளாக, “அங்ஙனம் செய்யினும் இப்பொழுது வாராமையால் அவர் தன்மை வேறுபட்டது போலும்!” என்னும் கருத்துப் படக் கூறினாள்.

    யாரென்றது நம்மோடு தொடர்பிலரென்னும் நினைவிற்று. குறவனுக்குரிய சிறுதினை, தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீட்டும் கிளைத்துக் கதிர் உண்டாகும்; அதனை மறுகாலென்பர்; அம்மறுகாலில் விதைத்த அவரை வளர்ந்தது.
    தலையளி என்பது..முகமலர்ந்து, அன்பு வார்த்தைக் கூறுதல்

Monday, August 18, 2014

குறுந்தொகை -81


தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

இனி பாடல்-
 
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
   
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
   
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
   
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
   
கடலுங் கானலுந் தோன்றும்
   
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.

                      -வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

உரை -
தலைவியானவள் குறையுறும் நின் சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை தெளிந்து , பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, இதுவரை புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான தனிமையையுடையவள். நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ பார்.இனி எம்மைமறவாது நினைக்க வேண்டும்.


     (கருத்து) இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.

 ஞாழல் - நெய்தற் குரியதொரு மரம். தோழியிற் கூட்டம் கூடிய தலைவன் தலைவியோடு கடற்கரையிலுள்ள ஞாழன்மரத்தின் நிழலில் அளவளாவினான் ஆதலால், ‘ஞாழற் பல்சினை யொருசிறைப், புதுநலனிழந்த புலம்புடையள்’ என்றாள்.
 
     அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளும் உவமை;
    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

Sunday, August 17, 2014

குறுந்தொகை - 80


விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளென்று கேட்ட விலைமகள் அத் தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, “நானும் தலைவனும் புதுப்புனலாடப் புகுகின்றோம்: அவள் வலியுடையளாயின் தலைவனை வாராமற் காப்பாளாக!” என்று தன் வன்மைமிகுதி தோன்றத் தன்னை வியந்து கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்

.  
கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப்
 
பெரும்புனல் வந்த விருந்துறை விரும்பி
 
யாமஃ தயர்கஞ் சேறுந் தானஃ
 
தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர

நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி
 
முனையான் பெருநிரை போலக்
 
கிளையொடுங் காக்கன் கொழுநன் மார்பே.

                         =ஔவையார்



உரை_

எனது கூந்தலில் ஆம்பலின் புறவிதழொடித்த முழுப்பூவைச் செருகி, வெள்ளம் வரப்பெற்ற பெரிய நீர்த்துறையை விரும்பி, அப்புனல்
 விளையாட்டை விளையாடச் செல்வோம்.நான் அப்படி ய்தலைவனுடன் விளையாட தலைவி அஞ்சுவாளானால், வெவ்விய போரில்
பகைவரை நடுநிலை உண்டாகுமாறு பயப்படாமல் எதிரில் நின்று கொல்லும் பல வேற்படையையுடைய எழுனி என்னும் உபகாரியின் போர்முனையிடத்தேயுள்ள பசுக்களின் பெரிய கூட்டத்தைப் போல தன் கணவர் மார்பை பாதுகாக்கட்டும்  

(தலைவன் என்னை விட்டு வரமாட்டான் என விலைமகள் நம்பிக்கையுடன் கூறுகிறாள்)



     (கருத்து) தலைவன் என்னுடைய விருப்பப்படித்தான் நடப்பான்..தலைவி விரும்பியபடி நடக்கமாட்டான்.

எழினி - அதியமான் அஞ்சி. தன்நாட்டுப் பசுக்களைப் பகைவர் கொண்டு சென்றாராக அவரொடு பொருது அப்பசுக்களை எழினி மீட்டுக் காத்தான்;

Saturday, August 16, 2014

அழகின் ரகசியம்

             

என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

குறுந்தொகை - 79


தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் குடவாயிற் கீரனக்கன்

இனி பாடல்-

.  
கான யானை தோனயந் துண்ட
   
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
   
அலங்க லுலவை யேறி யொய்யெனப்
   
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்
   
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
   
கொல்லே மென்ற தப்பற்
   
சொல்லா தகறல் வல்லு வோரே.

                           -குடவாயிற் கீரனக்கன்

உரை-

(தோழி) யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் ,சொல்லாமல் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓலைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஏறி ஒய்யென தனிமையையும் வருத்ததையும் வெளிப்படுத்தும் குரலையுடையவனாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலை நிலத்திற் பொருந்திய அழகிய தடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ!


     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது.
 
     பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினார் என்றால், அங்கு நடைபேறும் நிகழ்ச்சி என்பால் வந்து சேர்க்கும்.ஏன்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது.
 ஒல்லேம் -  நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.

Friday, August 15, 2014

குறுந்தொகை - 78



பாங்கன் கூற்று
(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் நக்கீரர்

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
   
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
   
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
   
நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென வுணரார் மாட்டும்
   
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.


                    -நக்கீரர்

.

உரை -

பெரிய மலையின் உச்சியில் உள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து பக்க மலையினிடத்து வீழும் மலைகளுடைய தலைவா! காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரும் அறிவின்மையையுடையது.ஆதலின் அது வெறுக்கத்தக்கது.(என்கிறான் தலைவனிடம் பாங்கன்)



     (கருத்து) நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.

பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன்.


தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் பாங்கன். களவொழுக்கக் காலத்தில் தலைவன் தலைவியின் நினைவாகவே இருக்கும்போதும், கற்பொழுக்கக் காலத்தில் தலைவன் பரத்தையை நாடும்போதும் பாங்கன் இடித்துரைப்பான்.
 மாந்தர்களில் வாயில்களில் ஒருவராக இருந்து செயலாற்றுபவன் பாங்கன். [3]


 மிக உயர்ந்த மலையின் உச்சியிலுள்ள அருவி மிகத்தாழ்ந்த தாழ் வரையில் வீழ்ந்தது போல, மிக்க பெருமையையுடைய நீ நின் பெருமை நீங்கிக் காமங்கொண்டாயென்பது குறிப்பு.

Thursday, August 14, 2014

ஆண்டவனேயாயினும்...



எண்ணியவை

எண்ணியவாறு நடக்க

முயற்சிக்க

அல்லாவிடின்

ஆண்டவனேயாயினும்

இயலாது

(கவிதை

குறுந்தொகை -77



தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் துன்பத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகனார்

இனி பாடல்-
   
அம்ம வாழி தோழி யாவதும்
   
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத்
   
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
   
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்

அரிய கானஞ் சென்றோர்க்
   
கெளிய வாகிய தடமென் றோளே.

                      - மதுரை மருதன் இளநாகனார்,

உரை-

தோழி ஒன்று சொல்வேன் கேட்பாயாக! வெவ்விய அருவழியில் இறந்த வழிபோக்கர்களுடைய உடலை மறைத்த, தழையைச் செயற்கையாக இட்ட குவியலானது, உயர்ந்த நல்ல யானைக்கு இட்ட நிழலைத் தருதற்குரிய பொருளாய்ப் பயன்படும்.,கடத்தற்கரிய பாலைநிலத்தில் என்னைப் பிரிந்து சென்ற தலைவரிடம், மெலிந்தவனாகிய பரந்த என் தோள்கள் தவறுடையனவெனக் கூறின் சிறிதும் தவறு அல்ல.

கருத்து - பாலை நிலத்துள் பயணம் மேற்கொண்டுள்ள தலைவனின் துன்பம் கண்டு வருந்தி என் தோள்கள் மெலிந்தன
.
 

Wednesday, August 13, 2014

குறுந்தொகை -76



தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவியிடம் உணர்த்தச் சென்ற தோழியை நோக்கி, "நான் அச்சிரக் காலத்தில் துன்புறும்படி தலைவர் பிரிவாரென்று முன்பே அறிந்தேன்; நீ சொல்வது மிகை" என்று கூறித் தலைவி கூறியது.)


 குறிஞ்சி திணை -76  - பாடலாசிரியர் கிள்ளிமங்கலங்கிழார்

இனி பாடல்-

காந்தள வேலி யோங்குமலை நன்னாட்டுச்
 
செல்ப வென்பவோ கல்வரை மார்பர்
 
சிலம்பிற் சேம்பி னலங்கல் வள்ளிலை
 
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇக்

தண்வரல் வாடை தூக்கும்
 
கடும்பனி யச்சிர நடுங்கஞ ருறவே.

                   - கிள்ளிமங்கலங்கிழார்



 உரை-

(தோழி) மலைப்பக்கத்திலுள்ள சேம்பினது அசைதலுடையவளவிய இலையை, பெரிய யானையினது செவியை ஒப்பத் தோன்றுமாறு, தடவி, தண்ணிய வரவையுடைய வாடைக்காற்று அசைத்தற்குரிய மிக்க பனியையுடைய அச்சிரக்காலத்தில் நடுங்குவத்ற்குக் காரணமாகிய துன்பத்தை நான் அடையும்படி கற்களையுடைய மலையைப் போன்ற மார்பையுடைய தலைவர் காந்தளை வேலியாகவுடைய உயர்ந்த மலை பொருந்திய நல்ல நாட்டிடத்து என்னைப் பிரிந்து போவாரென்று கூறுகின்றனர்,..


(கருத்து) தலைவர் பிரிவை முன்னரே உணர்ந்தேன்; அவர் பிரியின் நான் துன்புறுவேன்.

 இயல்பாக வளர்ந்த காந்தளை வேலியாக உடைய மலைநாடு.  மலைச்சேம்பென்று ஒருவகைச் சேம்பு உண்டு அதன் இலைகளைப் போல யானையின் காதுகளாம்.அச்சிரக்காலம் எனில்முன்பனிக்காலம்.

முன்பனிக்காலத்தில் அவர் பிரிவார் என முன்பே தெரியும்.ஆயினும் அப்பிரிவால் நான் துன்பமுறுவேன்

Tuesday, August 12, 2014

குறை ஒன்று உண்டு



அதிகம் காயப்படுத்தப் படுகிறேன்

நான்

என்னிடமுள்ள ஒரே குறை

பிறரை

அதிகம் நேசிப்பதுதான்

குறுந்தொகை - 75



தலைவி கூற்று
(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.)

மருதம் திணை -பாடலாசிரியர் மோசிகீரனார்

இனி பாடல்-

 
நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ
   
ஒன்று தெளிய நசையின மொழிமோ
   
வெண்கோட் டியானை சோணை படியும்
   
பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.

                        -மோசிகீரனார்

உரை-

தலைவனது வரவை நீ கண்டாயோ? அல்லது தலைவனை கண்டறிந்தவர் சொல்ல கேட்டறிந்தாயா? அப்படி பிறர் சொல்லி கேட்டிருப்பாயின் யார் சொல்லி கேட்டாய்? உண்மையாக ஒன்றை அறிய விரும்புகிறோம். சொல்வாயாக. சொன்னால்...வெள்ளிய கொம்பையுடைய யானைகள் சோணையாற்றில் துளைந்து விளையாடும் பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தை பெறுவாயாக!


(கருத்து) தலைவர் வரவை உரைத்த நினக்குச் செல்வம் பெருகுவதாகுக,

தலைவன் வரவை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில், அவன் வந்திருக்கிறான் என தூதன் வாயிலாகக் கேட்டவள்..தலைவன் வரவை நீ பார்த்தாயா/ அல்லது யார் சொல்லியாவது கேட்டாயா? அப்படி யாரேனும் சொல்லியிருந்தால் அது யார்? சொல்வது உண்மையானால் பாடலிபுத்திர நகரையே பரிசலிப்பேன் என்கிறாள் தலைவி.

 

Monday, August 11, 2014

குறுந்தொகை - 74


தோழி கூற்று
(தலைவன் தலைவியை விரும்பினானாக, தலைவியிடம், "நம்மால் விரும்பப்படும் தலைவன் நம்மை விரும்பி மெலிகின்றான்" என்று அவள் கூறியது.)


குறிஞ்சி திணை - பாடலாசிரியர் விட்டகுதிரையார்.

இனி பாடல்=

 
விட்ட குதிரை விசைப்பி னன்ன

விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
   
யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்
   
வேனி லானே்று போலச்

சாயின னென்பநம் மாணல நயந்தே.

                        - விட்டகுதிரையார்

உரை-

அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற,வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த மூங்கிலையுடைய குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன், யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி தானும் வேனிலின் வெம்மையை ஆற்றாத இடத்தைப் போல நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி மெலிந்தான்.


    (கருத்து) தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.

தலைவன், தலைவியை விரும்புவது போல, தலைவியும் அவனை விரும்பி நிற்கிறாள். தான் விரும்புவது தானே வலிய வந்தால் அதை மறுக்காது உடன்பட வேண்டும் (என தலைவி உரைக்கிறாள்)


   மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் விட்டகுதிரையார் என்னும் பெயர் பெற்றனர்.

Sunday, August 10, 2014

குறுந்தொகை - 73



(தோழி கூற்று)
(தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து பின்னர் அதனையும் மறுத்து தோழி, தலைவன், தலைவியைமணம் செய்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்=

 
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
   
அழியல் வாழி தோழி நன்னன்
   
நறுமா கொன்று நாட்டிற் போகிய
   
ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.


                            -பரணர்

உரை-

தலைவனது மார்பையே, நீ விரும்புதலுடையாய்.நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அனனது நாட்டினுட்புக்க வஞ்சினத்தையுடைய கோசரைப் போல சிறிதளவு வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும்  வேண்டும்.அதற்காக வருந்தாதே!


    (கருத்து) பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்தால் தலைவன் விரைவில் மணந்து கொள்வான்.

(வஞ்சினம் என்பதுஇப்படிச் செய்தால் இப்படியாவேன் என சபதம் செய்வதுதாம்.)

தலைவன் நடந்து கொள்ளும் முறைக்கெல்லாம் உட்பட்டால் களவொழுக்கம் குறைவின்றி நடைபெறும்.அந்த துணிவால் அவன் தலைவியை மணம் புரிய மாட்டான்.பகலில் தலைவன் வருவதற்கும் தடை போட்டு , இரவு வருவதற்கும் தடை விதித்தால்..வேறு வழியின்றி தலைவியை மணம் புரிந்து கொள்வான்.ஆகவே இப்படி நடிக்க வேண்டியது முக்கியமாகிறது என்கிறாள் தோழி.

Saturday, August 9, 2014

குறுந்தொகை - 72


தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மள்ளனார்.

இனி பாடல்-


பூவொத் தலமருந் தகைய வேவொத்
 
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
 
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
 
பரீஇ வித்திய வேன்ற்

குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே.

                               - மள்ளனார்.

உரை-

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண் ,அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டுகின்றவளது பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினைப் போல அழகில் ஒத்துச் சுழலும் தன்மையையுடையன.ஆயினும் கொடிய தொழிலால் அம்பினை ஒத்து, உன்னைப் போன்ற யாவரும் அறியுமாறு எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

   (கருத்து) நான் ஒரு மலைவாழ் மகள்பால் நட்பு பூண்டு காமநோய் உற்றேன்.

அவளது விழிகள் அம்புபாய்ந்து அதனால் ஏற்பட்ட புண் யாவரும் அறியும் வண்ணம் ஆயிற்றாம்(அவனது காம நோய்)


தினை வளர்ந்த இடத்திற் பருத்தியை விதைத்து அத்தினை முதிர்ந்து கொய்யப்பட்ட பின்னர்ப் பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாழ் மக்கள் வழக்கம். 

Friday, August 8, 2014

குறுந்தொகை - 71


தலைவன் கூற்று
(பொருளை ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கி, "இத்தலைவி நம் காமநோய்க்கு மருந்தும், இன்பம் பெறுதற்குச் செல்வமும் ஆதலின் இவளைப் பிரிதல் இயலாது" என்று தலைவன் கூறியது.)

 பாலைத் திணை - பாடலாசிரியர் கருவூர் ஓதஞானி.


மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
   
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
   
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்
   
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

                         -கருவூர் ஓதஞானி.
   
உரை-

(நெஞ்சே) தோற்றிய தேமலையுடைய, அழகிய பெருமையையுடைய இளைய மார்பகங்களையும், பெரிய தோளையும், சிறுத்த இடையையும் உடைய கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகள், என் காம நோய்க்கு பரிகாரம் வேண்டுமென்று கருதும் போது எனக்கு பரிகாரம் ஆவாள்.போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமும் ஆவாள்.

     (கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.

(இவளைப் பிரிந்தால் தன் காம நோய்க்கு மருந்தில்லை,அம்மருந்தும்.. வாழ்வில் இன்புற்றிருக்க தேடிச் செல்லும் செல்வமும் இவளே ஆவாள்)

Thursday, August 7, 2014

குறுந்தொகை - 69



தோழி கூற்று
(இரவில் தலைவியைக் காண விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வராதே!" என்று தோழி மறுத்துக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கடுந்தோட் கரவீரன்.

இனி பாடல்-

கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
   
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
   
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
   
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சார னாட நடுநாள்
   
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
                       
                           -கடுந்தோட் கரவீரன்.

   உரை-

கரிய கண்ணையும், தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்துவிட்டால், கைம்மைத் துன்பத்தைப் போக்கமுடியாத பெண்குரங்கானது, மரமேறுதல் போன்ற வற்றை அறியாத தனது வலிய குட்டியை, சுற்றத்தினிடம் ஒப்படைத்து, ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரைப் போக்கிக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில் வராதே! நீ வந்தால் தீங்கு உண்டாகும் என எண்ணி நாங்கள் வருந்துவோம்.நீ தீங்கின்றி வாழ்வாயாக!


        (கருத்து) நீ இரவில் வருதலைத் தவிர்.
;
 


குறுந்தொகை - 70



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்

இனி பாடல்-

ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
   
நறுந்தண் ணீர ளாரறணங் கினளே
   
இனைய ளென்றவட் புனையள வறியேன்
   
சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.

                       -ஓரம்போகியார்

உரை-

(நெஞ்சே) ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலையும், ஒள்ளீய நுதலையும் உடைய தலைவி மணத்தையும், தண்மையையும் உடைய தன்மையினள்.ஆனாலும், பிரிந்த காலத்துப் பொறுத்ததற்கரிய வருத்தத்தையும் தருபவள்.அவளை, இத்தகையவள் என்று(சொல்லமுடியவில்லை), அவள் சொற்கள் சின்மையையுடையன,மென்மையுடையன.. நான் அவளை அணைக்கும் போது பஞ்சணை போன்ற மென்மையை உடையவள்.

   (கருத்து) இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.

    (வி-ரை.) ஒடுங்கீரோதி யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை.புனையப் புனைய மேலும் புனையத் தோன்றுவதன்றி இவ்வளவே என வரையறுத்து நிறுத்தலாகாமையின், புனையள வறியேனென்றான்.

காட்சி இன்பமும்,கேள்வி இன்பமும்,ஊற்றின்பமும், உயிர்ப்பின்பமும்,சுவை இன்பமும் ஒருங்கே பெற்றவள்

Wednesday, August 6, 2014

குறுந்தொகை - 68


தலைவி கூற்று
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்கிறாள்.)


குறிஞ்சி திணை -பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
   
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
   
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
   
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே.

                     -அள்ளூர் நன்முல்லை..

உரை-

குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கூடும் பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலத்தில் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் மருந்து ,என்னை மணந்த அவரது மார்பைத் தவிர வேறு ஏதும் இல்லை.

 
 (கருத்து) அவர் உடன் இல்லாததால் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.(என்கிறாள் தலைவி)

(உளுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்தவண்ணம் முன்பனிப் பருவத்தில் முதிரும்.அதைத் தின்ன முன்பனிக்கால, பொறுக்கமுடியா பனியை பொறுத்து மான் கூட்டங்கள் கூடும்.ஆனால்..எனக்கு அப்பனிக்கொடுமையைப் போக்கும் மருந்து என் தலைவன் மார்புதான் (என்கிறாள் தலைவி)


Tuesday, August 5, 2014

குறுந்தொகை - 67


தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "பிரிந்து சென்ற தலைவர் என்னை நினைக்கவில்லையா?நினைத்திருந்தால் வந்திருப்பாரே! என்று கூறியது)

பாலைத் திணை - பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல் -


உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
 
வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்
 
புதுநா ணுழைப்பா னுதிமாண் வள்ளுகிர்ப்
 
பொலங்கல வொருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.

                    -அள்ளூர் நன்முல்லை

உரை-

(தோழி) கிளி வளைந்த அலகினிடத்திலே கொண்ட வேம்பினது ஒள்ளிய பழமானது, புதிய பொற்கம்பியை ஊடு செலுத்தும் பொற்கொல்லனது, முனை மாட்சிமைப்பட்ட கூரிய கைந்நகத்திற் கொண்ட பொன்னாபரணத்திற்குரிய ஒரு காசு போல இருக்கும் நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலை நிலத்தை கடந்து சென்றதலைவர் என்னை நினைக்கமாட்டாரோ?!


 

    (கருத்து) தலைவர் என்னை மறந்தனர் போலும்!

    (வி-ரை.) கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம் பழத்திற்கு உருண்டையான பொற்காசும் உவமைகள்.


Monday, August 4, 2014

குறுந்தொகை - 66



தோழி கூற்று
(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வராததால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதல்ல கார்காலம் என எண்ணி மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தாதே" என்று தோழி கூறியது.)

முல்லை திணை- பாடலாசிரியர் கோவதத்தன்

இனி பாடல்-

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
   
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
   
பருவம் வாரா வளவை நெரிதரத்
   
கொம்புசேர் கொடியிண ரூழ்ந்த

வம்ப மாரியைக் காரென மதித்தே.

                          -கோவதத்தன்

உரை-

கற்கள் விளங்கும் பாலைநிலத்து கடினமான வழியைக்கடந்து சென்ற தலைவர், மீண்டும் வருவேன் என்று சுட்டிக் கூறிய கார்ப்பருவம் வராத காலத்திலே, பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை கார் காலத்து மழையென்று கருதி
நெருங்குமாறு சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துகளை புறப்பட விட்டன..ஆகவே..பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள் நிச்சயமாக பேதைமையுடயன.

 

    (கருத்து) இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தாதே

கார்காலம் வரவில்லை எனத் தெரியாமலேயே பருவம் மாறி பெய்த மழையை கார்காலமழை என எண்ணி கொன்றை மலர்கள் பூத்துவிட்டனவாம்.அதைப் பார்த்து கார்காலத்தில் தலைவன் வருவேன் என்று சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது , தலைவன் வரவில்லையே என வருந்தாதே!. .(என்கிறாள் தோழி)

Sunday, August 3, 2014

குறுந்தொகை - 65



தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ? என்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கோவூர் கிழார்.

இனி பாடல்-


வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்
   
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
   
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
   
வாரா துறையுநர் வரனசைஇ

வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே.


                          - கோவூர் கிழார்.

உரை-(தலைவி உரைத்தது)

வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்தற்குரிய தனது பெண்மானோடு களிப்பினாள் துள்ளி விளையாடாமல் நிற்கவும், இங்கு வராமல் சென்ற இடத்திலேயே தங்கிய தலைவர், மீண்டும் வரவேண்டும் என விரும்பி மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிரை வைத்துக் கொண்டிருந்தீரோ என்று கேட்டதற்கு மழைத்துளியைத் தரும் குளிர்ந்த கார் பருவம் வந்தது.

(கருத்து) கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வரவில்லை

    (வி-ரை.) மான் தன் துணையோடு விளையாடும்படி கார்ப் பருவம் வரவும், தலைவர் தம் துணையோடு மகிழும்படி வந்து சேர்ந்திலர் என்னும் குறிப்புத் தோன்றுகின்றது. 'கார்ப்பருவம் வந்த பின்பும் ,அவர் வராமல் நாம் உயிரோடு இருத்தல் தவறு' என்னும் நினைவினளாதலின் அக்கருத்தை அப்பருவம் கேட்பதாக அமைத்தாள். இனி அவர் விரைவில் வாராவிடின் உயிர் வாழ்தல் அருமை என்பதும் புலப்பட்டது.

Saturday, August 2, 2014

கரு உருவாகுமுன் (கவிதை)


                           


கவிதை எழுத

வெள்ளைத் தாளில்

நேர்க்கோடிட்டேன்

ஆகா..அற்புதம்

கவிதை அற்புதம்

என்றிட்டான் ஒருவன்

மற்றவனோ

நேர்மையை வலியுறுத்தும்

பாங்கு அருமை என்றான்

அடுத்தவன்

வாழ்வில் நிமிர்ந்து நில்

வளமாய்ச் சொல்கிறது

என்றான்

நானோ

கவிதையின் கரு தேடி

விட்டத்தைப் பார்த்தேன்

குறுந்தொகை - 64



தலைவி கூற்று
(தலைவன் பிரிவை பொறுக்கமுடியா தலைவியை நோக்கி, "அவர் உன் துன்பத்தையறிவார்; ஆதலால் விரைவில் திரும்புவார்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வரவில்லையே" என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கருவூர்க் கதப்பிள்ளை

இனி பாடல்-
 
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
   
புன்றலை மன்ற நோக்கி மாலை
   
மடக்கட் குழவி யணவந் தன்ன
   
நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட் டோரே.

               - கருவூர்க் கதப்பிள்ளை

உரை-

பல பசுக்கள் நெடிய வழியில் நீங்கிச் சென்றன.அவை தங்கியிருத்தற்குரிய புல்லின் இடத்தையுடைய மன்றத்தை நோக்கி.மாலைநேரத்தில் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தையுடையேமாதலை அறிந்திருந்தும் நெடுந்தூரத்தேயுள்ள நாட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுந்தூரத்திலே உள்ளார்.


(கருத்து) தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,

 மேயச் சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் ஊருக்கு மீண்டும் வந்து தான் தங்குமிடம் புகுவது வழக்கம்; அதனால் மாலையில் கன்றுகள் தம் தாய்ப் பசுக்களை எதிர்நோக்கியிருந்தன;    பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப்போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருப்பேனென்று தலைவனுக்கு தெரிந்திருந்தும் அவர் வரவில்லையே என தலைவி வருந்துகிறாள்.

Friday, August 1, 2014

சிரிக்கின்றாய்...நீ..சிரிக்கின்றாய் (கவிதை)


                       





நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

குறுந்தொகை -63



தலைவன் கூற்று
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் உகாய்க்குடிகிழார்

இனி பாடல்-


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
 
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
 
கம்மா வரிவையும் வருமோ
 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே

                       - உகாய்க்குடிகிழார்

               
உரை

தலைவன் கூற்று

இரவலர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும், பொருளில்லா வறியவர்க்கு இல்லையென கருதி, பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாமல் நின்றாய்.அச்செயல் செய்வதற்குத் துணையாக, அழகிய மாந்தளிர் நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ?எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லிடு என் நெஞ்சே!


(கருத்து) இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.

பொருள் ஈட்ட முயற்சி செய்யாது இல்லத்திலேயே தங்கியிருப்பது யாருக்காக.நீ பொருள் ஈட்ட வேற்று நாட்டுக்குச் சென்றால், உடன் அங்கு தலைவியும் வருவாளோ?வாராவிடின் நான் மட்டும் போக வேண்டும்? இவளைப் பிரிந்து நான் எப்படி செல்வேன்? என அவள் மீது தனக்கு இருக்கும் அன்பை சொல்கிறான் தன் நெஞ்சிற்கு! ( அதனால் பொருள் ஈட்ட செல்ல மாட்டான் என்று பொருள் கொள்ளக்கூடாது)